படைத்தது ஏனோ
((( படைத்தவன் எவனோ )))
*******************************
படைத்தவன் எவனோ படைத்துவிட்டான்
படைத்தது ஏனென்று தெரியலயே..!
கிடைத்தது இலாபம் என்றெண்ணி
கீழே உறங்குது பொன்குழந்தை..!
மழையோ வெயிலோ மார்கழியோ
மறைந்து வாழ முடியாதே..!
உடையும் இல்லா உடல்மீது
உதிரம் தேடுமே கொசுவந்து..!
பசித்த வயிறு பால்கேட்டாள்
பாவம் தாயும் என்செய்வாள்..!
சுதந்திர நாட்டின் கயவர்கள்
சுருங்கா விழியில் பார்ப்பார்கள்..!
கருணை ஏதும் கிடைக்குமென்று
கையை ஏந்தி பிச்சைகேட்டாள்..!
காமப்பார்வை தீயை வீசி
காயம் தருவார் மனதினிலே..!
அநாதை என்ற பெயரெடுத்தால்
அகிலம் நமக்கு அந்நியம்தான்..!
அன்பு பொழியும் கடவுள்களே
அறிவாயோ இவ் வேதனைகளை..!
கனவனும் தந்தையும் இல்லையென்றால்
கண்ணிருந்தும் குருடு போலதான்..!
கனவிலும் கூட வலியெடுக்கும்
கண்ணீர் கடலாய் பெருகிருக்கும்..!
ந.இராஜ்குமார்