வானம் எங்களுக்கும் வசப்படும்

வானம் எங்களுக்கும் வசப்படும்

ஒச்சாயி கண்களை சுருக்கி கண்களுக்கு மேல் கை வைத்து கொண்டு தெருவையே பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் கணவன சடையாண்டியை இன்னும் காணவில்லை. காலையில் ஒரு வாய் கஞ்சித்தண்ணியை வாயில் ஊற்றிக்கொண்டு போசியில் கொஞ்சம் பழையதையும் போட்டுக்கொண்டு தன்னுடைய ஆடுகளை மேய்ச்சலுக்கு விட கிளம்பி வந்தவன். பசுமைகள் மறைந்து கான்கிரீட் மரங்களால் வளர்ந்து கொண்டிருக்கும் இந்த பிரதேசத்தில் புல் பூண்டுகளுக்கு வழியில்லாமல் தூர தூர இடத்துக்கு நடக்க ஆரம்பித்து விடுவான். மதியம் கொண்டு போன பழையதை சாப்பிட்டு விட்டு ஏதாவது ஒரு மர நிழலில் படுத்து தூக்கம் கண்களை சுழற்ற அவ்வப்போது ட்ரா…ட்ரா.. என்று சத்தம் கொடுத்துக்கொண்டே இருப்பான். ஆடுகள் மேய்ச்சல் உற்சாகத்தில் தன்னை விட்டு போய் விடாமல் இருக்க.
சடையாண்டிக்கு ஒச்சாயி வாழ்க்கை படும்போது அவனுக்கு இரண்டு ஏக்கரா வானம் பார்த்த பூமி பரம்பரை சொத்தாக இருந்தது. அதில் ஏதோ பயிர் செய்து கொண்டு ஒச்சாயி நான்கைந்து ஆடுகளையும், கோழிகளையும் வளர்த்து உருப்படியாக்கி விற்றுத்தான் இவர்களின் மக்கமார்களான ராசுவையும்,மயிலாத்தாளையும் வளர்த்து அசலூரில் பெண்ணையும், பையனை பொள்ளாச்சியில் ஒரு ஆட்டோ ஓட்டுநராக அங்கேயே குடித்தனத்தையும் வைக்க உதவியது. அந்த வாயில்லா ஜீவன்களும், வானம் பார்த்த பூமியும் இவர்களின் வாழ்க்கையை ஓட்ட தங்களால் முடிந்த அளவுக்கு ஏதேனும் கொடுத்து கொண்டே இருந்தன.
பொள்ளாச்சிக்கு குடிபோனவனிடம் இவன் உறவுக்காரர்கள் என்ன சொன்னார்களோ தெரியாது. ஊருக்கு வந்து நிலத்தை விற்றால்தான் ஆச்சு என்று பிடிவாதம் பிடிக்க ஆரம்பித்து விட்டான். இவன் நிலத்தை விற்க அடி போட ஆரம்பித்து விட்டான் என்பதை இவன் அக்கா வீட்டுக்காரன் அவள் காதில் ஓத அவளும் கையில் ஒன்றையும், இடுப்பில் ஒன்றையும் இழுத்துக்கொண்டு வீட்டுக்குள் வந்து உட்கார்ந்து கொண்டாள். அக்காக்காரி அம்மாவிடம் ஏதாவது பேசி கெடுத்து விடுவாள் என்று தம்பிக்காரனும் உடனே வந்து உட்கார்ந்து கொண்டு இருவரும் வாக்குவாதத்தில் இறங்கினர். இவர்கள் வாக்குவாதத்தை கேட்கப்பிடிக்காமல் தான் ஒச்சாயி கண்களின் மேல் கையை வைத்துக்கொண்டு கணவனின் வருகைக்காக உற்று நோக்கி கொண்டிருந்தாள்.
தன் கணவன் வந்து விட்டாலும் இந்த பிரச்சினைக்கு என்ன பதில் வைத்திருக்கப்போகிறான், அவனை பொறுத்த வரை ஒச்சாயி என்ன சொல்கிறாளோ அதை செய்வான். நல்ல உடல் பலம் இருந்த பொழுது இருவரும் பக்கத்து தோட்டத்தில் வேலை செய்ய செல்வார்கள். அதில் அவனுக்கு எவ்வளவு வரும்படி வந்தாலும் ஒச்சாயிடம் கொடுத்து விட்டு பீடிக்கும், அவ்வப்பொழுது ஊற்றிக்கொள்ள சிறிது பணமும் பெற்றுக்கொள்வான். அப்படி ஒன்றும் சடையாண்டி பெரிய குடிகாரனும் அல்ல. சில நேரங்களில் காட்டில் வேலை அதிகமாக இருந்த பொழுதோ அல்லது விளைந்த காய்கறிகளுக்கு நல்ல விலை கிடைத்த பொழுதோ ஒச்சாயிடம் வந்து தலையை சொறிவான். அவளும் புரிந்து கொண்டு இந்தா போய் கம்முனு ஊத்திகிட்டு வீடு வந்து சேரு, அங்க இங்க நின்னுகிட்டு திரியாதே. கண்டிப்புடன் சொல்லுவது போல் இருந்தாலும் உள்ளில் பாசம் இருக்கும். அதே போல் அவன் வீடு வரும்போது கோழி அடித்து குழம்பு வைத்திருப்பாள்.
தூரத்தில் அவன் நடந்து வருவது தெரிந்தது. தளர்ந்து போன நடை. ஆடுகள் முன்னால் வர இவன் குரல் கொடுத்துக்கொண்டே வருவது தெரிந்தது. எப்பொழுதும் ஆடுகள் வந்தவுடன் ஒச்சாயிடம் உரசிக்கொண்டே நிற்கும். இவள் தனித்தனியே இவைகளை தடவிக்கொடுத்து கொஞ்சுவாள். அதன் பின் மரத்தில் கட்டி தொங்க விட்டிருக்கும் தலை கொத்தை எடுத்து வாயில் ஊட்டுவாள். அவைகளும் வாயில் வாங்கிக்கொண்டு பட்டியில் நுழையும். சடையாண்டி வந்து விட்டான்.வழக்கம் போல் ஆடுகள் அவளை உரச அவள் இருந்த மன நிலையில் அவைகளை கொஞ்ச மனமில்லாமல் வெறுமனே தடவி கொடுத்து நான்கைந்து தலை கொத்துக்களை மட்டும் வாயில் ஊட்டி விட்டாள். அவைகளும் அவள் மன நிலையை புரிந்து கொண்டனவோ என்னவோ தெரியாது. வேகமாக பட்டிக்குள் சென்று அடைந்து கொண்டன.
கை கால்களை கழுவிட்டு வா என்றூ இவள் உள்ளே போக சடையாண்டி அங்கே தொட்டியில் இருந்த தண்ணீர்ரில் கை கால்களை கழுவிக்கொண்டு உள்ளே வந்தான். இறுகிய முகத்துடன் பெண்ணும் பையனும் உட்கார்ந்திருப்பதை பார்த்த சடையாண்டி கேள்விக்கணையுடன் இவளை பார்க்க நீ முதல்ல உட்காரு என்று உட்கார வைத்து பழைய சாப்பாட்டுடன் சுண்டைக்காய் குழம்பை ஊற்றினாள். இவங்க இரண்டு பேரும் சாப்பிட்டாச்ச்சா? என்று கேட்டவனிடம் எல்லாம் சாப்பிட்டாச்சு, நீ சாப்பிடு. அதற்கு மேல் எதுவும் பேசாமல் சாப்பிட ஆரம்பித்தான்.
பெண் ஆரம்பித்தாள். எம்மா நீ என் குழந்தைகளுக்கு ஆளுக்கு ஒரு பவுன் போடறேன்னு சொன்ன இதுவரைக்கும் போடலை. எங்க ஊட்ல இதுக்கு பதில் சொல்லியே நான் ஓஞ்சு போயிட்டேன். இப்ப இவன் காட்டை விக்கணும்கிறான். கடைசியிலே என் குடும்பத்தை அம்போன்னு விட்டுடவேண்டாமுன்னு சொல்லு.
நீ என்ன மனசுல நினைச்சுகிட்டு இருக்கே? உன் கல்யாணத்தப்பவே எல்லா செலவும் பண்ணியாச்சு. அது போக உன் குழந்தைகளுக்கு மாமன் சீரும் நல்லாத்தானே செஞ்சேன்.அப்புறம் என்ன மல்லுகட்டிட்டு நிக்கறே?
ஏ ராசு கம்முனு இரு. இந்தா மயிலாத்தா நீயும் கொஞ்சம் வாயை மூடிகிட்டு இரு. ஒச்சாயி உரத்த குரலில் சொல்லவும், அங்கு மெள்னம் நிலவியது. சூழ்நிலைகள் சடையாண்டிக்கு புரிந்தாலும் தனது மனைவி சமாளித்து கொள்ளுவாள் என முடிவு செய்தவன் நிதானமாய் சாப்பிட்டு விட்டு எழுந்து வந்து திண்ணையில் சாய்ந்து கொண்டான்.
ராசு நீ என்னதான் சொல்லுறே? மகனிடம் கூடியவரையில் கோபத்தை காட்டாமல் கேட்டாள். அந்த நிலத்துல நாம இப்ப பயிர் பண்ணலை, சும்மா வச்சு இப்ப என்ன பண்ணறது. இப்ப நிலத்துக்கு நல்ல மார்க்கெட், பேசாம வித்துட்டு காசை பாங்கியில் போட்டா என் குடும்பத்துக்கோசரமாவது பிரயோசனமாயிருக்கும்.
அப்ப நாங்க எல்லாம் காவடி தூக்கிட்டு போறதா? மயிலாத்தாள் எழுந்து கத்தினாள். இந்தா மயிலாத்தா பேசாம இரு நான்தான் பேசிகிட்டு இருக்கேனுல்லை அடக்கினாள் ஒச்சாயி.
ஏண்டா ராசு அந்த நிலம் இப்ப உன்னைய என்ன பண்ணுது? உங்க பிற்காலத்துக்கு அது ஒண்ணுதாண்டா உதவியாயிருக்கும்.
அம்மா இப்ப கிடைக்கற விலை அப்ப உனக்கு கிடைக்குமா? நானே ஆட்டோ ஓட்டித்தான் என் குடும்பத்தை காப்பாத்திட்டு இருக்கேன். இந்த நிலத்தை வித்து ஏதாவது வந்தாத்தான் நான் சொந்தமா ஒரு ஆட்டோவாவது வாங்க முடியும். நான் நல்லா இருக்கனுமுன்னு உனக்கு தோணவே தோனாதா?
அவன் முடிவிலிருந்து மாறப்போவதில்லை, அது போல மயிலாத்தாளும் விட்டு கொடுக்க போவதில்லை. இவர்கள் இருவருக்குமே ஒச்சாயியைப்பற்றியும் சடையாண்டியை பற்றியும் கவலையில்லை என்பதை உணர்ந்து கொண்டாள் ஒச்சாயி.
சரி நிலத்தை வித்தா உங்க அக்காவுக்கு என்ன செய்யப்போறே? கேட்டவுடன் சீறினான் எதுக்கு கொடுக்கணும்? அவளுக்குத்தான் எல்லாம் செஞ்சாச்சே?
உடனே மயிலாத்தாள் ராசு சட்டமே சொல்லுது எங்களுக்கு பங்கு கொடுக்கணும்னு? புரியுதா?
சட்டம் என்ன சட்டம், வேகமாக சொன்னாலும் மனதுக்குள் கண்டிப்பாக சிக்கல் வரும் என்பதை புரிந்து கொண்டான். சரி உனக்கும் கொஞ்சம் தாறேன், இந்த பதிலில் ஓரளவு சமாதானமடைந்தாள் மயிலாத்தாள்.
அப்ப உங்கப்பனுக்கும், ஆத்தாளுக்கும் என்ன கொடுப்பே? கேட்ட ஒச்சாயிடம் அக்காளும், தம்பியும் ஒரு சேர பாய்ந்தனர். உனக்கெதுக்கு பணம்?
பணம் பங்கு என்றவுடன் அக்காளும் தம்பியும் ஒன்று சேர்ந்த்தை புரிந்து கொண்ட ஒச்சாயி நிலம் பரம்பரை சொத்தாயிருந்தாலும் அதுல உங்களை பெத்தவங்களுக்கும் பங்கு கொடுக்கணும் தெரியுமா?
அக்காளும் தம்பியும் தங்களுக்குள் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு வர்ற பணத்துல கொஞ்சம் கொடுத்துடறோம். அப்புறம் இந்த வீட்டுல கடைசி வரைக்கும் இருங்க. உங்களுக்கு பின்னாடி யாருக்கு கொடுக்கணும்னு நினைக்கறீங்களோ அவங்களுக்கு கொடுத்துடுங்க.
அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம், எப்ப சொத்தை விக்கறதுண்ணு முடிவு பண்ணீட்டிங்களோ அப்பவே உங்க சம்பந்தபட்டது எல்லாத்தையும் வித்துடுங்க. உங்க தயவுல நாங்க இருக்க கூடாது.இந்த வீட்டையும் சேர்த்து வித்துட்டு எங்களுக்கும் ஒரு பங்கை கொடுத்துடு. அதுக்கப்புறம் உங்க பாடு வேறே, எங்க பாடு வேறே.
இந்த பேச்சு அக்காளையும், தம்பியையும் சிறிது உலுக்கியது. இருந்தாலும் பணம் என்னும் மந்திரம் அவர்களின் சலனத்தை ஒதுக்கி தள்ளியது. நான் கிளம்பறேன். அக்காளையும் அவ வீட்டுல விட்டுட்டு நான் பொள்ளாச்சி கிளம்பறேன். விடை பெற்றனர்.
அவர்கள் சென்று அரை மணி நேரம் கழித்து தன் கணவனை பார்க்க, அவன் எதுவும் பேசாமல் உட்கார்ந்திருந்தான். இவள் மெல்ல அருகில் சென்று கவலைப்படாதேய்யா, ஊருக்குள்ள ஒரு வீட்டை ஒத்திக்கு பேசி வச்சிட்டேன். இவன் எப்ப இட்த்தை விக்கறதுன்னு ஆரம்பிச்சுட்டானோ அப்புறம் இந்த வீட்டுல இருந்தா ஏதோ இவங்க தயவுலதான் நாம இருக்கோம்னு நினைச்சுக்குவாங்க. கவனிச்சியில்லை, காசுன்ன உடனே அக்காளும் தம்பியும் ஒண்ணயிட்டாங்க. எங்கிட்ட கொஞ்சம் சிறுவாடு காசு வச்சிருக்கேன். இன்னும் இரண்டு மூணு ஆட்டு குட்டி வாங்கி போடுவோம், அவங்க பங்கு பணம் கொடுத்தா ஒரு தோப்பு குத்தகைக்கு எடுப்போம். நம்மால முடியறவரைக்கும் பாடுபடுவோம்யா !

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (17-Mar-18, 12:59 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 152

மேலே