கவிதை மொழியாக்கம் -விவாதம்

1
வெ.ஸ்ரீராம்


இனிய ஜெயம்



மொழிபெயர்ப்பாளர் மற்றும் எழுத்தாளர் எம் ஏ சுசிலா அவர்களுக்கு ஒரு விழா குறித்த செய்தி அறிந்து மகிழ்ந்தேன் . இந்த மாதம் இங்கே கடலூரில் ,கவிஞர் கனிமொழி முன்னெடுக்கும் ஆம்பல் இலக்கியக் கூடுகை வழியே மொழிபெயர்ப்பாளர் வெ.ஸ்ரீராம் அவர்களுக்கு ,அவரது மொழிபெயர்ப்புகள் மீது ,ஒரு கூடல் ஏற்பாடு செய்திருந்தோம் .



சுந்தர ராமாமி தனது ஜே ஜே சில குறிப்புகள் வழியே ,நவீன தமிழ் இலக்கியத்தின் கருத்தியல் மையமமாக உயர்ந்தது இலக்கிய வரலாறு .அந்த நாவல் துவங்குவதே ஆல்பெர் காம்யு பெயரில் இருந்தே . ஜே ஜே சில குறிப்புகள் வாசித்து நீண்ட நாள் கழித்து ,ஆல்பெர் காம்யு வெ.ஸ்ரீராம் மொழிபெயர்ப்பு வழியே எனக்கு அறிமுகம் ஆகிறார் .



அதன் பின் அவர் வழியே ,ழாக் ப்ரெவர் , சார்த்தார் , என ஒவ்வொருவராக அறிமுகம் ஆகினர் . ஜே ஜே சில குறிப்பிகள் நாவலில் இருக்கும் ஒரு அந்நியத்தன்மை ,அல்லது காம்யு வில் இருக்கும் ஒரு உலகப் பொது தன்மை இவை கூடி ஜே ஜே சில குறிப்புகள் ,அந்நியன் இவற்றை என் அகம் ஒரே வரிசையில் வைத்திருந்தது . உண்மையில் ழாக் ப்ரெவர் ,காம்யு இவர்கள் எல்லாம் மொழி பெயர்ப்பின் வழியே இங்கே வந்தவர்கள் எனும் உணர்வே எனக்கு இல்லை .அந்த அளவு வாசகனின் அக மொழிக்கு சிறிய இடரும் விளைவிக்காத மொழி பெயர்ப்புகள் அவை .



ஒவ்வொரு இலக்கிய கூடுகை முடிந்த பின்னும் நண்பர்கள் கூடி ஓரிரு மணிநேரம் அந்த கூடுகையின் மனநிலையை கொண்டாடும் முகமாக பேசிக்கொண்டிருப்பது வழக்கம் . அப்படி ஒரு சமயம் கூடல் முடிந்ததும் ,அருகிலிருக்கும் கடற்க்கரை சென்று அமர்து ,ழாக் ப்ரெவர் கவிதைகள் வாசித்து அதன் மேல் உரையாடல் நிகழ்ந்தது .அப்போது பேச்சு சுவாரஸ்யம் வெ ஸ்ரீராம் அவர்கள் மொழிபெயர்ப்பு மீது ஒரு கூடுகை நிகழ்த்துவது என்பதில் நிறைந்தது .அது சில மாதங்கள் கடந்து இந்த மாதம் நிறைவேறியது .



உண்மையில் இன்று வந்து குவியும் மொழிபெயர்ப்புகளில் கணிசமானவை குப்பை . காரணம் என்ன ?



முதல் காரணம் மூன்றாம் தர மொழிபெயர்ப்பாளர்கள் ,எந்த ஆசிரியரை மொழி பெயர்க்கிரார்களோ அவர்களின் ,வாசகனாக இல்லாமல் வெறும் மொழி பெயர்ப்பாளனாக மட்டும் இருப்பது . இந்த மொழி பெயர்ப்பாளர்கள் கையாள்வது மொழி பெயர்க்க வேண்டிய சொற்களை மட்டுமே என்று இருக்கிறது . அவர்களுக்கு தாஸ்தாவெஸ்கியும் ஒன்றுதான் பழைய டெலிபோன் டைரக்டரியும் ஒன்றுதான் .



இரண்டாவது காரணம் மொழிபெயர்க்கப்படும் நாவல் பேசும் கருப்பொருள் சார்த்த அறிவு இன்மை . உதாரணமாக ஒரு செஸ் ஆட்டக்காரனை பற்றிய நாவல் எனக் கொண்டால் ,அந்த நாவல் நிகழும் பண்பாட்டில் செஸ் என்னவாக வளர்த்து வந்திருக்கிறது ,அந்த நாவல் அங்கிருந்து இங்கே வருகையில் இங்கே செஸ் வளர்ந்து வந்து என்னவாக இருக்கிறது என்ற இருமுனை புரிதல் அவசியம் . இந்த மூன்றாம் தர மொழிபெயர்ப்பாளர்கள் வசம் இத்தகு உழைப்புகள் இல்லை .



மூன்றாவது காரணம் . உணர்வு சார்ந்த சொரணை இன்மை . ஒரு புனைவோ ,கட்டுரையோ அது எந்த உணர்வு தளத்தின் மேல் கட்டப்படுகிறது என்ற அடிப்படை மீது சொரணை இன்மை .சிறந்த உதாரணம் விஜய பத்மா மொழிபெயர்ப்பில் வெளியான மணற்குன்றுப் பெண் நாவல் . மூல நாவலின் திகில் தன்மை எங்கோ அவிந்து போய், அந்த பொறிக்குள் நிகழும் சம்பவங்கள் அனைத்தும் ,கார்டூன் தனமாகவும் கோமாளித் தனமாகவும் மாறி இருந்தது .இந்த சொரணை இன்மையின் விளைவே. இரண்டாவது உதாரணம் ப்ரவாகன் மொழிபெயர்த்த பில் ப்ரைசனின் அனைத்தயும் குறித்த சுருக்கமான வரலாறு . மூல நூலில் நிகழும் ஆச்சரியமும் ,நகைச்சுவையும் கை தவறி கூட தமிழ் மொழி பெயர்ப்பில் நிகழ்ந்து விடக் கூடாது என ப்ரவாகன் மிகுந்த கவனம் எடுத்திருப்பதாக தெரிகிறது .



நான்காவது காரணம் .மொழி அழகு மீதான சொரணை இன்மை . ராமச்சந்திர குகா அவர்களின் மொழி அழகும் சரளமும் , போப்பு மொழிபெயர்த்த நுகர்வெனும் பெரும்பசி நூலில் எங்குமே காணக் கிடைக்காது . முதல் வாசிப்பில் அந்த நூல் ஏதோ ஒரு அல்ஜீப்ரா கணக்கு தேற்றத்தின் தமிழ் வடிவம் என்றே நினைத்தேன் .



ஐந்தாவது காரணம் , எடிட்டர் இல்லாத குறை . ஒரு மொழிபெயர்ப்பாளர் தனது மொழி பெயர்ப்பை விவாதித்து செம்மை செய்ய , இங்கே மொழிபெயப்பு எடிட்டர் யாரும் இல்லை .



ஆறாவது காரணம் இம்ப்ருமென்ட் செய்வது .அதாவது மூல ஆசிரியர்க்கு விவரம் பத்தாது.ஆகவே மொழி பெயர்ப்பாளர் அந்த விவர அறிவை உயர்த்தி உதவுவார் .உதாரணம் சமீபத்தில் வாசித்த வெ.நி .சூர்யா மொழிபெயர்த்த ஆக்டேவியா பாசின் இந்த கவிதை



நீரின் சாவி







ரிஷிகேஷத்திற்கு பிறகு

கங்கை இன்னும் பசுமை.

சிகரங்களில் உடைகிறது கண்ணாடி தொடுவானம்.

நாம் நடக்கிறோம் பளிங்குகளின் மேல்.

மேலும் கீழும் அமைதியின் மிகப்பெரிய வளைகுடா.

நீலவெளிகளில் வெண்பாறைகளும் கருமேகங்களும்.

நீ சொன்னாய்:

இந்த தேசம் நீரால் நிரம்பியிருக்கிறது

அன்றிரவு நான் எனது கைகளை உனது முலைகளில் கழுவினேன்






*Le pays est plein de sources எனும் பிரெஞ்சு வாக்கியத்தை (The country is full of sources ) “இந்த தேசம் நீரால் நிரம்பியிருக்கிறது” என மொழியாக்கம் செய்திருக்கிறேன்.



வெ.நி .சூர்யா . சோர்ஸ்ஸஸ் எனில் வளங்கள் .என்பதை எவரும் அறிவர் .வளங்கள் எனில் நதி ,மலை ,வனம் ,மண் என மொத்தமாக எல்லாமும்தான் . மூல ஆசிரியர் வளங்கள் என்றே குறிப்பிட ,நமது மொழி பெயர்ப்பாளர் ,வளங்களில் இருந்து நீர் எனும் ஒரே ஒரு வளத்தை பிரிக்கிறார் .



இந்த ஆறு அடிப்படை பிழைகள் வழியேதான் தமிழ் தவிர பிற மொழி அறியா என் போன்ற அப்ராணிகள் தலையில் இந்த மொழிபெயர்ப்பு பொதிகள் வந்து விழுகிறது . இது என் போன்ற வாசகனை மட்டும் அல்ல ,அந்த மூல நூலின் ஆசிரியனையும் , நமது கலாச்சாரத்தின் திராணி இன்மை வழியே ,மொழி பெயர்க்கப்படும் கலாச்சாரத்தையும் அவமதிக்கும் செயல் இது .



இத்தகு பிழைகளில் இருந்து வெளியில் நிற்கும் சொற்பமான மொழிபெயர்ப்பாளர்களே நமது தமிழ் இலக்கியப் பரப்பின் வளங்களின் ஒருவர் எனக் கொள்ள முடியும் . அவர்களில் ஒருவர் வெ.ஸ்ரீராம் அவர்கள் .



நிகழ்விலும் ,நிகழ்வுக்கு வெளியிலான உரையாடலிலும் வெ ஸ்ரீராம் அவர்கள் ,தான் மொழி பெயர்த்த ஆசிரியர்கள் உருவாகி வந்த சமூக ,அரசியல் ,தத்துவ பின்புலம் ,அதன் பின்னணியிலான அவர்களின் ஆக்கங்கள் ,அது உலக மொழிகளிலும் தமிழிலும் நிகழ்த்திய தாக்கங்கள் , அந்நியன் நாவல் முதல் மெர்சோ மறு விசாரணை நாவல் வரை நாவலுக்குள் தத்துவப் பார்வை புரண்டு நகர்ந்த விதம் என பலதும் ,சுருக்கமாகவும் ,செறிவாகவும் ,தனது மெல்லிய ,கனிந்த குரலில் பகிர்ந்து கொண்டார் .



ழாக் ப்ரெவர் கவிதைகள் குறித்து கண்டராதித்தன் அவர்களும் , அந்நியன் நாவல் குறித்து வாசகர் அன்பு வேந்தன் [இவர் மதுரையில் இருந்து வந்திருந்தார் ] மொழியாக்க சிக்கல்கள் குறித்து க்ரியா பதிப்பகத்தை சேர்ந்த ராஜன் அவர்கள் பேசினார்கள் . நிகழ்வின் முக்கிய அம்சம் மீள முடியுமா நாடக மொழி பெயர்ப்பு மீது தனது விமர்சனப் பார்வையை முன் வைத்த நண்பரும் கவிஞருமான மனோ மோகன் அவர்களின் உரை .





இறுதில் மொழிபெயர்ப்பாளர் ஜி குப்புசாமி அவர்கள் ,மொழியாக்க சிக்கல்கள் குறித்து பேசினார்கள் .குறிப்பாக மொழிபெயர்ப்பில் பொதுவாக கைநழுவி விடும் த்வனி குறித்து பேசினார் .சுரா ஆங்கிலம் வழி மொழி பெயர்த்த ழாக் ப்ரெவரின் கவிதை ஒன்று ,அதே கவிதையை பிரெஞ்ச்சில் இருந்து வெ.ஸ்ரீராம் மொழியாக்கம் செய்த பிரதி ,இரண்டையும் வாசித்து ,இந்த த்வனி அழகு குறித்து பேசி ஜி கே நிகழ்வை நிறைவு செய்தார்கள் .





மொழியாக்கம் குறித்த பயிற்சி பட்டறை என்றே சொல்லிவிடலாம் எனும் வண்ணம் அமைந்து விட்ட நிகழ்வு .



உண்மையில் மிகுந்த பொருள் செலவில் நிகழ்ந்த கூடுகை இது .விருந்தினர்கள் எந்த வசதி குறைவும் அணுகி விடா வண்ணம் ,போக்கு வரத்து , தங்குதல் ,உணவு .என அனைத்து எல்லைகளிலும் கவனத்துடன் செயல்பட்டார் கனிமொழி . வந்திருந்த அனைவருக்கும் அவரது இல்லத்தில் இருந்து ,இல்லத்தினரே சமைத்த பாயசம் உள்ளிட்ட அசைவ உணவு ,அவர்களே பரிமாறினார்கள் . அனைவரையும் தக்க கவனத்துடன் வரவேற்று ,நிகழ்வை நடத்தி , விடை கொடுத்தார்கள் .



நிகழ்வு முடிந்து , அரங்க வாசலில் நின்று உவகையும் ஆற்றாமயுமாக பேசிக்கொண்டிருந்தார் கனிமொழி . உண்மையில் கடலூர் மாவட்டத்துக்குள் ஒரு இலக்கிய புரட்சியை வெடிக்க வைத்து விடுவது என்பதே எங்கள் குறிக்கோள் . செயலுக்கு விளைவுகள் பூஜ்யம் . சுற்றி உள்ள எல்லா அரசு நூலகம் அனைத்துக்கும் தகவல் அனுப்பி ஆகி விட்டது . கல்லூரிகளுக்குள் நுழையவே முடியாது .இலக்கிய கூட்டம் என சொல்லி ,மாணவர்களை அழைக்க சென்றால் ,கல்லூரி தலைமை புள்ளை புடிக்க வந்தவனை போல நடத்தும் , வாட்சப்,முகநூல் வழி செய்தி பரவியும் அதே பதினெட்டு பேரே வந்தனர் . பொதுவாக இருபத்து ஐந்து பேரை எதிர்பார்க்கலாம் .இந்த பதினெட்டு ரிட்டேட் கோஷ்டி . நிகழ்ச்சி துவங்கி அமைப்பாளர் நண்பர்களே என துவங்கும்போது ,பெரும்பாலோர் காது மெஷினை எடுத்து மாட்டுவர் .விருந்தினர் விழிகளும் ,குரலும் அத்துடன் அணைந்து போகும் . மிச்ச ஏழு பேர் இளம் தலைமுறை .அங்கு மட்டுமே மாற்றம் என ஏதேனும் சாத்தியம் .அந்த ஏழு பேரைத்தான் இம்முறை காணவில்லை .ஏதோ அரசு பரிட்சை அன்று. இலக்கியத்துக்குத்தான் எத்தனை சோதனை . இது வாசகர் நிலை எனில் ,விருந்தினர் வேறு நிலையில் , வருகிறேன் என இறுதி வரை சொல்லி இருந்த கார்த்திகை பாண்டியன் அவருக்கு பதிலாக அவரது கட்டுரையை அனுப்பி இருந்தார் . நண்பர் இதயத்துல்லா அதை வாசித்தார் .மற்றொரு கவிஞர் . அவர் பெருங் கவிஞர் போல, எனக்கு அறிமுகம் இல்லை .வருகிறேன் என ஒப்புக் கொண்டிருந்தவர் .வரவில்லை . காரணமாக அவர் அனுப்பிய செய்தி ,தமிழ் இலக்கிய வரலாற்றில் பொன் தகட்டில் ,வைர மணிகள் கொண்டு பொறிக்கப்பட வேண்டிய ஒன்று .அந்த செய்தி . ”நான் என் கொளுந்தியாளை பார்க்க செல்கிறேன் ”.



இந்த சூழலில்தான் சுருதி தொலைக்காட்சி அவர்களின் பங்கு மிக மிக முக்கியத்துவம் கொண்ட ஒன்று என ஆகிறது . இலக்கியத்துக்கான எந்த அறிகுறியும் அற்ற கடலூர் போன்றொதொரு வெற்று வெளியில்,நாளை எவரேனும் இங்கே இது நடந்தது ,என உவகை கொள்ள , ஒரு ஆவணமாக சுருதி தொலைகாட்சியின் இந்த பங்களிப்பு அமையும்.



ஏதாவது பண்ணனும் அப்டின்னு பண்ணும் போது உற்சாகமா இருக்கு , என்ன பண்ணாலும் இங்க ஒண்ணும் நடக்காதோ அப்டின்னு தோணும் போது சோர்வா இருக்கு . கிளம்ப மனமின்றி உயிர்கொண்டு உறுமிக்கொண்டிருந்த வாகனத்தில் அமர்ந்தபடியே கனிமொழி பேசிக்கொண்டிருந்தார் .



கிளம்பும்போது திரும்பி பார்த்து சந்தோஷ கிரீச்சிடும் குரலில் சொன்னார் ,



”நாம இப்டி ஒண்ணு பண்ணோம்னு ஜெயமோகன் சார் கிட்ட சொல்லு என்ன ”



சொல்லிவிட்டேன் .

கடலூர் சீனு

-------------

2

கவிதை மொழியாக்கம் -கடிதம்

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன், நண்பர் கடலூர் சீனு எழுதி உங்களுடைய தளத்தில் வெளிவந்த குறிப்பில் நான் மொழிபெயர்த்த ஆக்டோவியா பாசின் கவிதையை குறிப்பிட்டு நண்பர் கூறிய விஷயங்கள் சார்ந்து ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன். அதன்பொருட்டு இதை எழுதிகிறேன்.

வெறும், அர்த்தத்தை மட்டும் தோண்டியெடுப்பதல்ல கவிதை மொழிபெயர்ப்பு. கவிதையே பிரதானம். மொழிபெயர்ப்பில் அகராதிக்கு அப்பாலும் ஒரு சிலவேலைகள் இருக்கின்றன. என்றே நினைக்கிறேன், அகராதியை மட்டும் நம்பியே அது இல்லை. ஒரு சொல்லை எந்த அர்த்தத்தில் எப்படி தொனிக்குமாறு எந்த கலாச்சார பின்னணியில் பயன்படுத்துகிறார் என்பதை அனுமானித்துக்கொள்வது முக்கியம் என்று கருதுகிறேன். இது இம்ப்ருமென்ட் அல்ல.

நன்றி

Surya Vn
-----------

3
கவிதை மொழியாக்கம் -எதிர்வினை

April 4, 2018
இனிய ஜெயம்

தனது மொழியாக்கம் குறித்த நண்பர் சூர்யா அவர்களின் எதிர்வினையை கண்டேன் . நியாயப்படி இக் கடிதத்தினை சூர்யா அவர்களுக்கு எழுதி இருக்க வேண்டும் . தொடர்ச்சி கருதி இதையும் உங்களுக்கே எழுதுகிறேன் .
நீரின் சாவி




ரிஷிகேஷத்திற்கு பிறகு

கங்கை இன்னும் பசுமை.

சிகரங்களில் உடைகிறது கண்ணாடி தொடுவானம்.

நாம் நடக்கிறோம் பளிங்குகளின் மேல்.

மேலும் கீழும் அமைதியின் மிகப்பெரிய வளைகுடா.

நீலவெளிகளில் வெண்பாறைகளும் கருமேகங்களும்.

நீ சொன்னாய்:

இந்த தேசம் நீரால் நிரம்பியிருக்கிறது

அன்றிரவு நான் எனது கைகளை உனது முலைகளில் கழுவினேன்


இதுதான் சூர்யா மொழியாக்கம் செய்த கவிதை . இதில் நீரால் எனும் சொல்லுக்கு பதில் வளங்களால் என போட்டு இந்த தேசம் வளங்களால் நிரம்பியிருக்கிறது என்றபடி இந்த கவிதையை வைத்துக் கொள்வோம் .
இனி இந்த கவிதையை வைப்பு முறை வழியே அணுகிப் பார்ப்போம் .



முதலில் நோக்கு நிலை . இக் கவிதை ‘அவனால் ”சொல்லப்படுகிறது . இரண்டாவது கங்கை குறித்த அவனது அவதானம் .மூன்றாவது இயற்க்கை சித்திரம் .நான்காவது ”அவளுடைய ”பிரகடனம் .ஐந்தாவது கலவி ஒன்றின் உன்மத்த துவக்கம் மீதான சித்தரிப்பு .



// ஒரு சொல்லை எந்த அர்த்தத்தில் எப்படி தொனிக்குமாறு எந்த கலாச்சார பின்னணியில் பயன்படுத்துகிறார் என்பதை அனுமானித்துக்கொள்வது முக்கியம் //



அதே அளவு ஒரு சொல் .அது மொழிபெயர்க்கப்பட்டு அது வந்து சேரும் கலாச்சாரத்தில் அது எப்படி அர்த்தம் பெறும் என அனுமானிப்பதும் அதே அளவு முக்கியம் . உதாரணமாக சிகரங்களில் உடைகிறது கண்ணாடித் தொடுவானம் எனும் வரியை எடுத்துக்கொண்டால் , முதல் நோக்கில் அதிலுள்ளது ஒரு கவித்துவமான சித்தரிப்பு ,அடுத்த அடுக்கில் அதில் உள்ளது , கங்கையாக மாற பனி அடுக்குகள் உடையும் தருணம் . இந்த இரண்டை தாண்டி மூன்றாவது ஒன்று உண்டு .அது மூல ஆசிரியர் உத்தேசிக்காதது .ஆனால் நமதே ஆனது .அது என்ன ? நாம் பார்க்கும் கங்கை இரண்டாவது கங்கைதான் .இதன் மூல கங்கை என்பது ஆகாயத்தில் இருக்கிறது எனும் கவித்துவ புராண சித்திரம்தான் அது. .ஆகாய கங்கை . அப்படிப் பார்த்தால் உருக்கத் துவங்கும் அந்த பனி அடுக்கு , சிகரத்தில் உடையும் அந்த கண்ணாடி வானம் .ஆகாய கங்கை . ஆகாய கங்கையின் முதல் மண் தொடுகை அது .



ரிஷிகேசத்துக்கு பிறகான கங்கை என்ற பதம் ஏன் வருகிறது ? ஏன் எனில் ரிஷிகேசத்துக்கு பிறகே கங்கை சமநிலத்தில் நடக்கிறாள் .



இந்த நிலம் வளங்களால் நிறைந்தது .எல்லாம் அவள் அளித்த வளம் . கங்கர்கள் எனும் குலம் துவங்கி ,விவசாயம் தொடர்ந்து ,கங்கை சதுப்பு வெளிக்கு மட்டுமே சொந்தமான கூர் மூக்கு முதலைகள் வரை இங்கே திகழும் ,வாழ்வு வளம் எல்லாம் அவள் தந்தது .



அன்று இரவு அவளது முலைகளில் கைகளை கழுவினேன் . காமத்தின் முதல் பனி அடுக்கு ,சிகர முனைகளில் உடைந்து உருக துவங்கி விட்டது .கங்கை துவங்குகையில் கைகளை கழுவிகொள்ளலாம் என்னும் அளவு நீர் தான் . பின்னர் அவன் யார் ? அதன் பின் அவன் அந்த மல்லர் பெரியாற்றில் நீர்வழிப் படும் வெறும் புணை . காமம் எனும் நீரின் சாவி கொண்டு அவளாகிய அந்த நிலம் பொதிந்து வைத்திருக்கும் செல்வங்களை எல்லாம் அவனுக்கு திறந்து காட்டப் போகிறாள் . பெண்மை பெரும்பாலும் உலக அளவில் வளத்தின் குறியீடு .



பெண்ணில் காமம் என பெருக்கெடுத்து ஓடுவது கங்கை . ஆனால் அந்த கங்கையை மட்டுமே, கை நனைக்கும் அளவிலேனும் ஆணால் அறிய இயலும் .பெண்ணில் நிறையும் இந்த கங்கைக்கு மூலமான அந்த ஆகாய கங்கையை ஆணால் ஒரு போதும் அறிய இயலாது . இப்படி கற்பனை சாத்தயங்களை விரிய வைக்கும் தன்மையை வளங்கள் என்னும் சொல்லே அளிக்கிறதே அன்றி , நீராலானது எனும் சொல் அளிக்கவில்லை . மேலும் இந்த கவிதை நிகழும் உணர்வு தளத்துக்கும் நீராலானது எனும் சொல் முற்றிலும் பிழையான சொல் .



கவிதை இதைத்தான் உத்தேசிக்கிறது எனும் யூகத்தில் நிகழ்த்தும் ”சொல் மாறாட்டங்கள் ” மேம்படுத்துதல் கணக்கில்தான் சேரும் . இவை கவிதையை கவிதை இல்லாமல் செய்து விடும் .உதாரணமாக சூர்யா இதன் மூல பிரதியில் வளங்கள் என இருந்தது எனும் குறிப்பை கவிதைக்கு கீழே தந்திருக்கா விட்டால் , இந்த நல்ல கவிதையை நான் இழந்திருப்பேன் .



மற்றபடி அடுத்த கட்ட அடிதடியை நண்பர் சூர்யா தொடரலாம் : )





கடலூர் சீனு

--------

4
கவிதை மொழியாக்கம் – ஒரு விளக்கம்

April 5, 2018
அன்புள்ள சீனு, சூரியா,



இவ்விவாதத்தில் எனக்குச் சொல்வதற்கொன்று உண்டு. விவாதம் எத்தனை தீவிரமாக இருந்தாலும் அதை வெளியே நின்று பார்ப்பவர்கள் தெரிந்துகொள்ள ஏதேனும் இருக்கவேண்டும், அப்போதுதான் அது பயனுள்ள விவாதம்



ஒரு சொல்லை ‘சரியாக’ மொழியாக்கம் செய்வது எப்படி என்பதல்ல இங்கே விவாதம். கவிதையை மொழியாக்கம் செய்வது பற்றி. கவிதைமொழியாக்கம் என்பது மிகச்சிக்கலான ஒரு பண்பாட்டு நிகழ்வு. கவிஞர்கள் பலர் கவிதைமொழியாக்கம் பற்றியே கவிதைகள் எழுதியிருக்கிறார்கள்.



ஏனென்றால் கவிதை பல்வேறு பண்பாட்டுக்குறிப்புகள், மொழிக்குறிப்புகள் ஆகியவற்றாலானது. உட்குறிப்புகளின் ஒரு பெரும் தொடர்ச்சியில் அது உள்ளது. தனக்கென ஓர் உள்வட்டம் உருவாக்கி அதற்குள் நின்றுபேசுகிறது. அதன் கூறுமுறையின் ஒருபகுதி உலகளாவியது, ஒருபகுதி மிகச்சிறு சூழலுக்குரியது



ஆகவே, எப்போதும் அதன் ஒரு பகுதி மொழியாக்கத்தில் கைவிடப்பட்டுவிடும். விடப்பட்டுவிட்டதைச் சொல்லி ஒரு கவிதைமொழியாக்கத்தைக் குறைசொல்பவர்கள் அதை மொழியாக்கம் செய்வதன் சவால்களை அறியாதவர்கள். எதுவிடப்படுகிறது, ஏன், எவ்வாறு என்பதே விவாதத்திற்குரியது



கவிதை மொழியாக்கம் செய்பவன் முதலில் ஒரு வாசகன். அவன் ஓர் அர்த்த உருவாக்கம் நிகழ்த்துகிறான். பின்னர் அதிலிருந்து சமானமான இன்னொரு கவிதையை உருவாக்குகிறான். இதுவே கவிதைமொழியாக்கம். நீங்கள் இருவரும் வெவ்வேறு வாசிப்புகளைக் கவிதைக்கு அளிப்பதைக் காண்கிறேன்.



அப்படியென்றால் எது ‘சரியான’ மொழியாக்கம்? அப்படி ஒன்று இல்லை. ‘அணுக்கமான’ மொழியாக்கமே உண்டு. அந்த மொழியாக்கத்தின் இயல்புகளாக நான் பார்ப்பவை



அ அக்கவிதையின் பூடகத்தன்மை, விரிவாக்கவாய்ப்பு ஆகியவற்றை அது அழிக்காது. கவிதையை அவிழ்த்து மொழியாக்கம் செய்யாது



ஆ. அக்கவிதையை இன்னொரு குறியீட்டு,பண்பாட்டுச் சூழலுக்குக் கொண்டுசெல்லாது. மூலச்சூழலிலேயே நிகழ்த்தும்



இ. மொழியாக்கம் செய்யப்படும் மொழியின் பழகிய வடிவம், கவிமொழியின் சாயல் அற்றிருக்கும்



ஆகவே ஒரு கவிதைக்கு நல்ல நாலைந்துவகை மொழியாக்கங்கள் இருக்கமுடியும். உலக இலக்கியத்தில் கவிதைகள் திரும்பத்திரும்ப மொழியாக்கம் செய்யப்பட்டுக்கொண்டே உள்ளன



வெ.நி.சூர்யா நேற்று வீட்டுக்கு வந்திருந்தார். பேசும்போது இதைப் பற்றிச் சொன்னேன். நீர் என அவர் மொழியாக்கம் செய்திருப்பது அவருடைய வாசிப்பு. அது சோர்ஸஸ் என்பதில் உள்ள பூடகத்தன்மையைச் சற்று குறைக்கிறது. வளங்கள் என்னும் சொல் கவிதைக்கு வெளியே அர்த்தத்தை கொண்டுசெல்கிறது. ஊற்றுக்கள் என்னும் பொருள்வரும் ஒரு சொல்லாட்சியே அங்கே மேலும் பொருத்தமானதாக அமைந்திருக்கும்[இந்த தேசம் ஊற்றுக்களால் நிரம்பியிருக்கிறது]





ஜெ





ONLY POEMS CAN TRANSLATE POEMS: ON THE IMPOSSIBILITY AND NECESSITY OF TRANSLATION


----------



--------------------------------------------------------------------------------






--------------------------------------------------------------------------------

எழுதியவர் : (18-Apr-18, 6:34 am)
பார்வை : 125

மேலே