அவர்கள்

பிள்ளை பிறந்ததென்று
அள்ளி அணைத்தவர்கள்,
பள்ளியில் சேர்த்து
படிக்க வைத்தவர்கள்
தள்ளி நிற்கிறார்கள்..

முதலெழுத்தைப் பிள்ளைக்குக்
கொடுத்தவர்கள்,
தலையெழுத்து தெரியாமல்
தவிக்கிறார்கள்..

ஓய்வின்றி உழைத்தவர்கள்
சாய்ந்திட இடமின்றி
சந்தியிலே நிற்கிறார்கள்..

வேலைக்குப் பிள்ளைகள்
வெளிநாடு சென்றுவிட்டதால்,
வேளைக்கு உணவுக்காக
வெளியே காத்திருக்கிறார்கள்..

காத்திருக்கும் பெற்றோர் இவர்
காத்திருப்பது
பசிக்கு உணவுக்காக மட்டுமல்ல,
பாசத்துடன்
பார்த்திடத்தான் பிள்ளைகளை-
போய்ச் சேருமுன்னே...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (26-Apr-18, 7:01 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : avargal
பார்வை : 73

மேலே