பூக்களை பறிக்காதீர்கள்

அண்ணல் காந்தி
இன்னல்களோடு போராடியது
அன்னை பூமியில்
அன்புணர்வு நிலைக்கத்தான்
ஆனால் - இங்கே
வன்புணர்வு மட்டுமே
வசதியாய் வாழ்கிறது

யானைக்குப் பிடிக்கும் மதம்கூட
யாருடைய மானத்தையும் பறிப்பதில்லை
மனிதனுக்குப் பிடிக்கும் மதம்தான்
மலர்களைக்கூட விடாமல் சிதைக்கிறது

ஆசிபா எனும் அழகிய சிறுமி
மென்மையான மிருகங்களோடு
காட்டைக் கடந்தாள் - அங்கிருந்த
வன்மையான மிருகங்களால்
வாழ்க்கையையே இழந்தாள்

அற்பக் கயவர்களால்
கற்பிழந்த பூக்களை - யாரேனும்
கண்கொண்டு பாருங்கள்
கல்லறையிலாவது அவர்கள்
கலக்கமின்றித் தூங்குகிறார்களா என்று?

கண்ணியத்தை மறந்து
குழந்தைகளைக் கொடூரமாகக்
கொலை புரிந்த காமுகர்க்குக்
கண்டனங்கள் மட்டும்தான்
தண்டனைகளா?

காவல்துறை வழக்கம்போல்
கடமையைச் செய்தது
கயவர்களுக்கு ஆதரவாக.

நியாயங்களைத் தண்டிக்கும்
நீதிமன்றங்களே - உங்களுக்கு
இரண்டு திருத்தங்கள் தேவை
ஒன்று - இங்கே
நீதிகள் விற்கப்படும் என்று
பலகை ஒன்று வெளியே மாட்டிவிடுங்கள்
மற்றொன்று
நாங்கள் சொல்லப்போகும் தீர்ப்புகள்
அனைத்தும் உண்மையே
உண்மையைத் தவிர வேறொன்றுமில்லை - என்று
நீங்கள் முதலில் சத்தியம் செய்யுங்கள்
--------------------------------------------------------------

எழுதியவர் : விஜயகுமார் நாட்ராயன் (2-May-18, 2:06 pm)
பார்வை : 364

மேலே