முதுமொழிக் காஞ்சி 61
குறள் வெண்செந்துறை
ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
பேரறிவி னோனினிது வாழாமை பொய். 1
- பொய்ப் பத்து, முதுமொழிக் காஞ்சி
பொருளுரை:
நிறைந்த ஓசையுடைய கடல் சூழ்ந்த உலகத்தில் வாழும் மக்களுக்கெல்லாம் சொல்வது என்னவென்றால், ஒருவன் பேரறிவுடையனாயின் அவன் மனத்தால் இன்புற்றொழுகாமை பொய்.
பதவுரை:
ஆர்கலி உலகத்து - கடல் சூழ்ந்த உலகத்தில், மக்கட் கெல்லாம் - மனிதர் எல்லாருள்ளும், பேர் அறிவினோன் - மிக்க அறிவுள்ளவன்,
இனிது வாழாமை - இன்பமடைந்து வாழாதிருத்தல், பொய் - பொய்யாம்.
மிக்க அறிவுள்ளவன் இனிது வாழ்வான் என்பது உண்மை.