இறை வந்த தருணங்கள்
வறண்ட பாலையில் விழுந்த முதல்
மழைத்துளிபோல் ,
தாகத்தில் வறண்ட வாய் நனைத்து
தொண்டை கடந்த முதல் மொடக்கு தண்ணீர் ,
உணவெறிக்க அமிலம் சுரந்து
கடும்பசியில் காத்து கிடந்த
வயிற்றில் ,
எச்சில் நனைந்து நாவில் சுழன்று
விழுந்த முதல் உணவு கவளம்.
அனல் தகித்து , உடல் நீர் குடித்து
சுட்டெரிக்கும் சூரியகதிரலையில்
வெட்டவெளி நடையில்
கிடைத்த ஒற்றை மர நிழல் .
வெக்கை அவித்து வேர்வை குளித்து
சோர்ந்த உடல், தீண்டி கடந்த
சிறு தென்றல் காற்று.
உடல் ஒடித்த நோயும்
மனம் உடைத்த தோல்வியும்
சேர்ந்து சோர்ந்து வீழ்ந்தபோதினில்
மடி சாய்த்து , தலை கோதி
அன்பு வார்த்தைகளில்
மருந்திட்ட தாய் .
இருண்ட வாழ்வில்
பாதை தொலைந்த பயணம்,
ஒற்றை ஒளி பாய்ச்சிய
குருவருள்..
தேவையின் தருணத்தில்
கிடைத்த எதுவுமே
இறையருள் தான் ...
தனியாய் தேடி
தர்க்கம் செய்ய தேவையில்லை .