பயணம் – கடிதங்கள்

அன்புள்ள சார்,

களைப்பும் ஆர்வமும் மனநிறைவும் ஒரு சேர்ந்த மனநிலையில் இருப்பீர்கள் என நினைக்கிறன். படங்களையும் கட்டுரைகளையும் வாசிக்கும்போது ஒவ்வொரு இடத்திலிருந்தும் பொக்கிசங்களை எடுத்து நிறைத்து வருகிறீர்கள் என்பது தெரிகிறது. என் பாஷைல சொல்லணும்னா “வயிறு எரியுது சார்”.

ஆனாலும் நீங்க சொல்லிதான் இதெல்லாம் பற்றி நான் தெரிந்து கொள்கிறேன், நன்றிங்க. உங்க கட்டுரைகளில் ஒரு அழகு இருக்கும். கட்டுரையின் முடிவில் அதிலுள்ள விசயங்களில் இருந்து மீறிக் கட்டுரையாளன் உன்னத மனதுடைய எழுத்தாளனாக மாறிப் பேசுவது. உதாரணம் சொல்லணும்னா அந்த இந்தியாவின் உப்பு வேலி கட்டுரையில் அந்த ஆசிரியர் [ராய் மாக்ஸ்ஹாம்] சிவபெருமானிடம் வேண்டும் பாரா, இந்த அம்சம் இப்ப உங்க பயணக் கட்டுரைகளிலும் காண்கிறேன்.

அன்புடன்
ராதாகிருஷ்ணன்

---
அன்புள்ள ராதாகிருஷ்ணன்,

புனைவு எழுத்து என்பது ஆசிரியனின் அகம் வெளிப்படும் இடம். பயணக்கட்டுரையில் தன்னிச்சையாக ஆங்காங்கேதான் அது வெளிப்பட முடியும். அத்தகைய இடம் ஒன்றை அழகாக சுட்டிக்காட்டியிருந்தீர்கள்.

நன்றி
ஜெ

--------------
அன்புள்ள திரு. ஜெயமோகன் அவர்களுக்கு,

உங்களின் கோடான கோடி வாசகிகளில் ஒருத்தியான திருமதி. கவிதா அன்பரசன் எழுதிகொள்வது. ஆங்கிலத்தில் எழுத நினைத்து, எங்கே முழுமையான உணர்வினை வெளிப்படுத்த முடியாதோ என்ற எண்ணத்தில் தமிழில் எழுதியுள்ளேன். பிழை இருப்பின் பொறுத்தருளவும்.

நீங்கள் ஒரு பதிவரின் வசைபாடலின் மூலமே எனக்கு அறிமுகமானீர்கள். அவரின் வசைபாடலைப் படித்த பிறகு உங்களை இணையத்தில் தேடி உங்களின் இணையதளத்தில் வந்து சேர்ந்தேன்.

உங்களின் எழுத்துக்களின் ஆழம் மற்றும் வலிமை பிடிக்கும். (உங்களின் எல்லாக் கருத்துக்களுடனும் நான் ஒத்துப் போவதில்லையானாலும்) இந்து மதத்தை, தேசபிதாவை, இந்தியாவை நான் சரியாகப் புரிந்துகொள்ள நீங்கள் உதவினீர்கள். அதிலும் தொன்மையான இந்திய வரலாற்றினை அறிந்துகொள்ள மிக ஆர்வம். தொல்பொருள் ஆராய்ச்சி நூல்களின் வழி படிப்பதைக் காட்டிலும் கல்கி, பாலசுப்ரமணியன், சாண்டில்யன் கதைகளின் மூலம் படிக்கவே விருப்பம்.

எனக்குப் பயணங்கள் பிடித்தமானவை. ஆங்கில ஆசிரியரான எனது தந்தை 90-களில் ஆரம்பித்து அவர் இறக்கும் வரையிலும் வருடத்திற்கு ஒருமுறையாவது வாடகை வண்டி வைத்தோ அல்லது பேருந்துகளிலோ தென் இந்தியாவின் நான்கு மாநிலங்களுக்கும் எங்களை அழைத்துச் சென்றதினாலோ என்னவோ பயணக்கட்டுரைகள் எனக்குப் படிக்க மிகவும் பிடிக்கும். உங்களின் ‘இந்தியப் பயணங்கள்’, ‘அருகர்களின் பாதை’ படிக்கும்போது எனக்கு உங்கள் குழுவின் மீது மிகப் பொறாமையாக இருந்தது. உங்களின் கண்களின் வழியாகவும், இதயத்தின் வழியாகவும் இந்தியாவை எனக்குக் காண்பித்தமைக்கு மிக்க நன்றி.

நீங்கள் இப்படிக் காடு கரையெல்லாம் சுற்ற சம்மதித்து, நீங்கள் அருகில் இல்லாத காலத்தில் குடும்பத்தை நடத்தவும், குழந்தைகளைப் பார்த்துகொள்ளவும் தேவையான அதிகப்படியான உழைப்பைக் கொடுத்து ஒத்துழைத்த உங்களின் மனைவிக்கும் எனது நன்றி.

உங்களின் எழுத்துப்பணி இடையறாது நடக்க எல்லாம் வல்ல இறைவன் துணையிருக்க வேண்டுகிறேன்.

திருமதி. கவிதா அன்பரசன்

-------------
அன்புள்ள கவிதா,

நன்றி.

என் எழுத்துக்களை வாசிக்க ஆரம்பித்திருக்கிறீர்கள் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. வழக்கமாக வாசிக்கும் கதைகளைப்போல அல்லாமல் கொஞ்சம் மேலதிக கவனத்துடன் வாசிக்க வேண்டிய கதைகள், கட்டுரைகள் அவை. ஆனால் தொடர்ந்து வாசித்தீர்கள் என்றால் எளிதில் என்னுடைய படைப்புலகில் நுழைந்துவிடமுடியும். அது கண்டிப்பாக உங்கள் வாசிப்புலகை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லக்கூடியதாகவே இருக்கும். தொடர்ந்து வாசியுங்கள். எழுதுங்கள்.

அன்புடன்
ஜெ
-----------
திரு ஜெயமோகன் அவர்களுக்கு,

தங்களின் ‘அருகர்களின் பாதை’ பல புதிய கதவுகளைத் திறந்து விட்ட ஒரு அற்புதமான பயண அனுபவமாகத் திகழ்ந்தது. நம் முன்னோர்களின் விழுமியங்களை மீள் பார்வை பார்க்க நீங்கள் ஏற்படுத்திக்கொடுத்த உன்னதமான வாசல்கள்.

கடந்த ஒரு மாத காலமாக நான் அதிகாலையில் எழுந்தவுடன் தட்டுவது உங்கள் இணைய தள நுழைவு வாயிலையே. உங்கள் பயணத் திட்டமும், தேர்வு செய்த தலங்களும், நீங்கள் எத்துணை ஆழமாக சமணத் தலங்களைப் பற்றியும், இந்திய வரலாற்றினை அதன் அனைத்துக் கூறுகளுடனும் ஆய்வு செய்து, இந்த வரைவினைத் திட்டமிட்டிருப்பீர்கள் என்பதனைத் தெள்ளென விளக்குகிறது. தங்களின் உடனடிப் பதிவுகளின் வேகம் என்னை பிரமிக்க வைத்தது. எடுத்துக்கொண்ட பணியில் உள்ள தீராத காதலே இதனைச் சாதிக்க முடியும். என்னைப் பொறுத்த வரையில் இது ஓர் அசுர சாதனையே.

இந்தப் பயண அனுபவங்கள் நிச்சயம் ஓர் நூலாக விரைவில் வரும். நீங்கள் இணையத்தில் கொடுத்ததைவிட உங்களின் ஆய்வுகள் மற்றும் வாசிப்பு சார்ந்த மிக அதிகமான தகவல்களுடன். அத்தகைய ஓர் நூல், வரலாற்று ஆய்வு மாணவர்களுக்கு, ஓர் உன்னதமான வழிகாட்டுதலாக இருக்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.

வணக்கத்துடனும், வாழ்த்துக்களுடனும்,

சங்கரநாராயணன்

ஒரு சிறிய ஐயம். ‘அமணர்’ சமணர் என்றாகியது சரி. ‘அருகர்’ என்பதன் வேர் எது?
----------
அன்புள்ள சங்கரநாராயணன்,

பயணக்கட்டுரைகள் நூலாக வரவுள்ளன. ஆம், கொஞ்சம் விரிவாக.

அமணர் என்ற சொல் சமணர் ஆகவில்லை. சமணர்கள் பழங்காலத்தில் சிரவணர் என்றே சொல்லப்பட்டனர். இன்றும் வட இந்தியாவில் ஷ்ரவணர் என்ற சொல் புழக்கத்தில் உள்ளது. விரதம் கொண்டவர்கள் என்று அதற்குப்பொருள். அச்சொல்லே சமணர் என மருவியது.

அர்ஹர் என்ற சொல்லின் மருவே அருகர்கள். அர்ஹந்த் என்றும் அச்சொல் சொல்லப்படுகிறது. பௌத்ததிலும் இச்சொல் புழக்கத்தில் உள்ளது. இதற்கு ‘நோன்பு கொண்டவர்கள்’ ‘புனிதத் தகுதி கொண்டவர்கள்’ என்று பொருள்.

சமண வழிபாடுகளில் தீர்த்தங்கரர்கள்

நமோ அர்ஹந்தானம்
நமோ சித்தானம்
நமோ ஆயார்யானம்
நமோ உவஜ்ஜயானம்
நமோ சர்வ சாதுனாம்

என வணங்கப்படுகிறார்கள்.

ஜெ
--------
அன்புள்ள ஜெ,

உங்கள் அறிவு வழியாக இந்தியாவின் சில பக்கங்களை அறிய முடிந்ததில் மகிழ்ச்சி. எனக்கு இந்திய நேரடி அனுபவம் மிகக் குறைவு. பெரும்பாலும் எழுத்து வழியாகவே அதிகம். உங்கள் எழுத்துக்களுடன் இணைத்துள்ள படங்கள் அனைத்தும் பேசும் சித்திரங்கள். மனிதனின் வளர்ச்சிக்குப் பகுத்தறிவு மிக அவசியமானது. ஆனால் பகுத்தறிவின் பெயரால் ஒரு பண்பாட்டின் சாட்சியங்கள் தமிழ் நாட்டில் காப்பாற்றப்படாமல் இருப்பது வேதனை. உங்கள் கட்டுரை தமிழகத்தில் ஒரு கருத்துருவாக்கத்தை ஏற்படுத்தும் என நம்புகின்றேன்.

அன்புடன்
க.சரவணபவன்
----------
அன்புள்ள சரவணபவன்,

எவ்வளவு வாசித்தாலும் இந்தியா என்ற அனுபவம் மூலமே உண்மையான மனச்சித்திரத்தை அடைய முடியும். கூடுமானவரை சிறிய அளவிலேனும்.

ஜெ

எழுதியவர் : (18-May-18, 7:28 am)
பார்வை : 54

மேலே