நாமும் நம் வாழ்வும் - சி எம் ஜேசு பிரகாஷ்

தலைமுறைகள் ஏழு கண்டோம்
தமிழ் மண்ணில் தான் பிறந்தோம்

சுழலும் காலங்களில் தான்
சுழற்சியாய் பல மாற்றங்கள்

வறுமையின் சிவப்பு கண்டோம்
வாழ்வியல் உயர்வும் கொண்டோம்

பசி அடையும் வயிற்றுக்காகத்தான்
பல ஆயிரம் மையில் சென்றுழைத்தோம்

மிதிவண்டி கண்டோம் - அதில்
மோட்டார் பொருத்திதான் முறுக்கி பயணிக்கிறோம்

பயணத்தின் நிறைவுக்கு மகிழூந்து படைத்தோம் - அதை
மயக்கத்தில் தான் இயக்குகிறோம்

பெறமுடியாத அன்பை விட
அறிவினை அதிகம் கற்றிருக்கிறோம்

தரமுடியாத சேவையைவிட
சுயநலன்களை அதிகம் பெற்றிருக்கிறோம்

படிப்பு படிப்பு என்று சொல்லி
அனுபவ உயிர்களை புறம் தள்ளிவிட்டோம்

பிடிக்காதவர்களை ஒதுக்கி விடுகிறோம்
பிடித்தவர்களுடன் மயக்கத்தில் வாழ்கிறோம்

நலன்களை மட்டும் நேசித்து - குண
நலன்களை அறிந்திடாமல் வாழ்கிறோம்

உலகே உள்ளங்கையில் தான் இருக்கிறது என்றாலும் - அது
சுற்றுவதற்கு பவர் எனும் முயற்சி அவசியமாகிறது

நவீனங்கள் அற்றிருந்த காலங்களில்
நன்மைகள் நிறைந்து நலனை உயர்த்தியது

நவீனங்கள் உற்றிருக்கும் இக்காலங்களால் - மனிதர்க்கு
தீமைகள் நிறைந்து அவர் தவங்கள்தான் கலைந்து போனது

பெற்றோர்கள் கலையெடுக்கப்படுகின்றனர்
பெரியோர்கள் ஒதுக்கி வைக்கப்படுகின்றனர்

உறவுகள் பணிநிறைவு காரணங்களால்
உழைப்புக்குள் இணைந்து ஆழ்ந்து வாழ்கிறார்கள்

ஸ்ரிஷ்டிக்கப் படுகிறது மகிழ்வு குழந்தைகளால்
திணிக்கப்படுகிறது மகிழ்வு திருமணங்களால்

ஏற்கப்படுகிறது மகிழ்வு சினிமாக்களால் - என்றாலும்
தோற்கடிக்கப்படுகிறது மகிழ்வு வாழ்வின் மாற்றங்களால்

அரசியல் இல்லாத வாழ்க்கை இனி வருமா
ஆன்மீகம் நிறைந்த பொது உலகம் இனி வருமா

ஆராய்வுகள் உலகை அன்பாக்குமா
சீர் ஆய்வுகள் உலகிற்கு ஒற்றுமை தருமா - இங்கு

நாடாக பிரிந்து மதத்தால் நிறத்தால் மொழியால்
சமயத்தால் சாதியால் சதியால் பிரிந்து வாழ்கிறோம்

மாற்றங்கள் ஒட்டவைக்குமா மனிதர்களை - அல்லது
ஏற்றங்கள் தான் இணைக்கும் வழிகாட்டுமா மனங்களுக்கு

இயல்புக்கு ஏற்றாற்போல் மாற்றம் பெரும் வாழ்வு
இயற்கையாய் பரந்திருக்கும் உலகை வள படுத்துமா

ஆயுதங்கள் தாங்கி ஒற்றுமை மறந்த இயக்கங்கள்
பூமியினை சல்லடையாக்குவது ஏன்

வாதம் வதம் தீவிரவாதம் போராட்டங்களால் தான்
வாழ்வு மனிதருள் தீர்மானிக்கப் படுகிறதா

கோபங்கள் கோணல்களை அல்லவா கொண்டு வருகிறது
சாபங்கள் சஞ்சலங்களை அல்லவா அள்ளி வருகிறது

நிதானத்தை இழந்து வாழும் மானிடருக்கு இந்த வாழ்க்கை ஏன்
நிஜங்களை துறந்து வாழும் மானிடருக்கு உலகின் செயற்கை ஏன்

அடங்கா மனிதர்களின் அலங்கோலங்கள் உலகில் ஏன்
அடிமை தனமாய் வாழ வைக்கும் உலகின் போக்குகள் ஏன்

இருளை தன்சுய இன்பங்களுக்கு பயன்படுத்தும் திருட்டு ஏனோ
பொருளை அபகரிக்கும் வீர மாந்தர்களின் மிரட்டு ஏனோ

இனி எத்தனைக் காலங்கள் ஆகும் உலகின் மாந்தர்க்கு
நன்மை மட்டுமே உலகின் உயர்ந்த செயல் என்று தெரிய

உணர்வுகளை உருங்கிணைப்போம் உள்ளங்களை அன்பு செய்ய
செயல்களை நன்மையாக்குவோம் தீமைகள் மறைய

கலையால் கலையப்படுமா தீமைகள் - அல்லது
ஆன்மீகத்தால் ஓட்டம் பெறுமா தீமைகள்

நன்மை எனும் உண்மையே உலகை ஒளியாக்கும்
உண்மையெனும் நன்மையே வாழ்வை நிறைவாக்கும்

புகழை புறம் தள்ளி அன்புக்காக இகழ்ச்சியை ஏற்போம்
பணத்தை மனம் துறந்து குணத்தை குடியேற்ற உழைப்போம்

வருங்காலம் தோழமைக்கு துணையானது - ஆதலால் நம்
வாழ்க்கை நாளும் நன்மைக்கு பேர்போனதாகட்டும் - எனும்

எண்ணங்கள் பதிக்கிறேன்
இன்னும் தொடரும் ... cmjesuprakash - 27.02.2017

எழுதியவர் : சி .எம் .ஜேசு (3-Jun-18, 11:08 pm)
பார்வை : 72

மேலே