மேகம்
அறிவியல் நீதிமன்றம் சொல்கிறதே
நீ கண்ணுக்கு அகப்படாத
அப்பாவி நீர் துளிகளை சிறைபிடித்து
உன்னுள் உறைய வைத்துதான்
நீ உருவாகுகிறாயாமே?
இன்னும் உன்னை கைது செய்ய
காற்றுப்படை வரவில்லையா?
கதிரவனுக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்
அடிக்கடி உன் முந்தானையை தொற்றிக் கொண்டு
மறைகிறானே உனக்கான நீர் துளிகளை எங்கிருந்தோ
திருடிக் கொடுத்ததில் அவனுக்கும் பங்கு உண்டோ?
இப்படியே காற்று துரத்தத் துரத்த
ஓடிக்கொண்டிரு என்றாவது
ஒருநாள் உடல் தடித்து
மேனி கருத்து அகப்படுவாய்
அன்று நீ சிந்தும் கண்ணீர்
துளிகளை உலகமே ரசித்து
கொண்டாடும்
உனக்கு அஞ்சிய விதைகள்
கொண்டாட்டமாய் மண்ணில் குதிக்கும்
புழுக்கள் பிறந்தநாள் கொண்டாடும்
அன்று உன்னால் எம் கண்ணீரை மட்டுமே
திருட முடியும் அதை ஆனந்தமாய் தருகிறோம்