வெற்றிலை

என்வீட்டின் பின்புறத்தில் வளர்க்கும் வெற்றிலை அடர்த்தியான இலைகளுடன் படர்ந்து சுவற்றில் ஏறி மூன்றாவது மாடிக்குச் சென்றிருப்பது எவ்வளவு அழகாகப் பச்சையுடன் இருப்பதைப் படத்தில் காணுங்கள். இந்த வெற்றிலை பற்றி ஒரு வெண்பா எழுதினால் என்ன என்று தோன்றியது.

வெற்றிலை::9

========
பற்றுடன் நாளும் பயிர்செய்தேன் கொல்லையில்
வெற்றிலை நன்றாய் வளர்ந்த(அ)து - பற்றிப்
படர்ந்து பரவிப் பகலவனைக் கண்ட
அடர்த்தி கொடுக்கும் அழகு
========

வெற்றிலையின் மகத்துவம் பற்றி...தினகரன் வெளியீடு::07-08-2017

`Piper betle’’ என்ற தாவரவியல் பெயர்கொண்ட இதற்கு தாம்பூலம், நாகவல்லி, வேந்தன், திரையல் போன்ற பல பெயர் உண்டு. வெற்றிலையில், கம்மாறு வெற்றிலை, கற்பூர வெற்றிலை, சாதாரண வெற்றிலை போன்ற வகை உள்ளது. வெற்றிலையில் அதன் இலையும் வேரும் மருத்துவ பலன்களை தரக்கூடியவை. கொடி வகையை சேர்ந்த இது, இந்தியாவில் வெப்பமான இடங்களிலும் சதுப்பு நிலங்களிலும் வளரக்கூடியது.இதில், கால்சியம், இரும்புச்சத்து அதிகம் உள்ளன. வீரியம்மிக்க நோய் எதிர்ப்புத்திறன் கொண்ட சவிக்கால் (Chavicol) என்னும் பினைல்புரோபின் (Phenylpropene) பொருள் உள்ளது. இது, உடலுக்கு உஷ்ணம் தரக்கூடியது.

* வெற்றிலை, உமிழ்நீரை பெருக்கும், பசியை உண்டாக்கும், பால் சுரக்க வைக்கும், நாடி நரம்புகளை உரமாக்குவதுடன், காமத்தையும் தூண்டும். இது, இயற்கை தந்த அற்புதம்.
ஆகவே அளவோடு வெற்றிலை சாப்பிட்டுவந்தால், ஆண்மை குறைபாடு நீங்கும். வாய் துர்நாற்றத்தை போக்கும்.
* இலை சாற்றுடன் தேவையான அளவு நீர் மற்றும் பால் கலந்து பருகிவந்தால், சிறுநீர் நன்றாக பிரியும்.
* கொழுந்து வெற்றிலையுடன் (ஒன்று) ஐந்து மிளகு சேர்த்து வாயில் போட்டு மென்று சாப்பிட வேண்டும். இதை தினமும் காலை வெறும் வயிற்றில் தொடர்ந்து 8 வாரம் சாப்பிட்டு வந்தால், இரைப்பை குடல்வலி, அசிடிட்டி, செரிமானம், மலச்சிக்கல் போன்றவை குணமாவதோடு மெட்டபாலிசம் அதிகரித்து, உடலில் உள்ள நச்சுகள் வெளியேறி உடல் சுத்தமாகும்.
* மலச்சிக்கல் பிரச்னை தீர இதன் சாறு பலன் தரும். 30 மி.லி சாற்றை வெறும் வயிற்றில் குடிக்கலாம் அல்லது வெற்றிலையை இடித்து இரவு முழுவதும் நீரில் ஊறவைத்து, அந்த நீரை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் மலச்சிக்கல் பிரச்னை தீரும்.
* குழந்தை பெற்ற பெண்களுக்கு பால் அதிகமாக சுரக்கவும், மார்பில் பால் கட்டுவதால் வரக்கூடிய வீக்கத்தை கரைக்கவும் வெறும் இலையை தணலில் வாட்டி அடுக்கடுக்காக வைத்து மார்பகத்தில் கட்டினால் பலன் கிடைக்கும்.
* தேள் கடிப்பதால் ஏற்படக்கூடிய விஷத்தை முறிக்க இரண்டு இலையுடன் ஒன்பது மிளகு சேர்த்து நன்றாக மென்று விழுங்க வேண்டும். அத்துடன் தேங்காய்த்துண்டுகள் சிலவற்றையும் மென்று சாப்பிட்டால், கைமேல் பலன் கிடைக்கும். தேள் கடி மட்டுமல்ல, விஷப்பூச்சிகள் எதுவும் கடித்தால் இதேபோல செய்து, நோய் பாதிப்பிலிருந்து நம்மை காத்துக்கொள்ளலாம்.
* வெற்றிலை 4, வேப்பிலை ஒரு கைப்பிடி, அறுகம்புல் ஒரு கைப்பிடி எடுத்து சிறிது சிறிதாக நறுக்கி 500 மி.லி தண்ணீர்விட்டு, கொதிக்கவைத்து 150 மி.லி ஆக வற்றியதும் வடிகட்டி, தினமும் மூன்று வேளையும் உணவுக்கு முன்னர் 50 மி.லி குடித்துவந்தால்சர்க்கரையின் அளவு சீராகும்.
* வெற்றிலை போடுவதை, `தாம்பூலம் தரித்தல்’ என்பார்கள். தாம்பூலம் தரிப்பதால் பல நோய்களில் இருந்து நம்மை காத்துக்கொள்ளலாம்.

எழுதியவர் : பெருவை பார்த்தசாரதி (16-Jun-18, 5:19 pm)
Tanglish : VETRILAI
பார்வை : 93

மேலே