உழைப்பின்றி இல்லை உயர்வு

உழைப்பின்றி இல்லை உயர்வு..!
=============================

சூழ்ந்திருக்குது நம்மைச் சுற்றி வட்டமாய்
......சூழ்ச்சி வலைகளெங்கும் சிதறிக் கிடக்குது..!
வாழ் வனைத்தும் துன்பங்கள் வினைகள்
......வஞ்சனை நிறைந்த வழியாகவே தெரியுது..!
ஊழ்வினை இதெல்லாம் என்று நினையாது
......உடலுழைப்பால் உயரும் வகை அறிவீர்..!
ஏழ்பிறப்பும் மனிதனாய்ப் பிறந்து வாழ்வில்
......ஏற்றமுற நித்தமுமே உழைக்கமுன் வருவீர்..!


இரும்புக் கரங்களால் உழைத்து உருவாகி
......எழுந்து நிற்கிறது விண்முட்டும் கோபுரம்..!
இருநூறடிக்கு மேல் எண்பதாயிரம் கிலோ
......எடையை உழைப்பிலே காணும் அதிசயம்..!
அரும் பெரும் உழைப்பால் உருவானது
......ஆயிர மாண்டாக அதிசயமாய்த் திகழ்கிறது..!
பெரு வுடையார் கோவிலின் புகழாலதற்கு
......பெரிதாய் உழைத்த வரின்றும் வாழ்கிறார்..!


எல்லாமிங்கே இனாமாகக் கிட்டும் போது
......எதற் குழைக்க வேணுமென எண்ணாதே..!
புல்லர்களின் பயனற்ற பேச்சில் மயங்கி
......பொன்னான வாழ்வையும் நீஇழந் திடாதே..!
பொல்லாப்பு யாரிடமும் வேணாம் தம்பி
......பொறுப்பாக நடந்து கொள்ள முயலுவாய்..!
நல்லொழுக்கம் ஒன்றுதான் நாமுயற வழி
......நாட்டில் இன்றிது முக்கியத் தேவையப்பா..!

எழுதியவர் : பெருவை பார்த்தசாரதி (22-Jun-18, 10:27 pm)
பார்வை : 145

மேலே