இலங்கை வானொலி- கேஎஸ்ராஜா----2

அன்புள்ள கிருஷ்ணன்

உங்கள் கடிதம் வழியாக இணையத்தில் கே.எஸ்.ராஜாவின் குரலைச் சென்றடைந்தேன். என் வயதை ஒட்டியவர்களுக்கு அக்குரலின் கம்பீரமும் விரைவும் ஒரு பெரிய கனவை விதைப்பவை. அவருடைய வானொலி அறிவிப்பு அக்காலகட்டத்தின் முதன்மையான அடையாளத்தில் ஒன்று.

என் இளமையில் ரேடியோ அவ்வளவாக கிடையாது. மர்ஃபி வால்வ் ரேடியோதான். பெரிய தேக்குபெட்டியில் பச்சை ஒளிப்பரப்புடன் பொன்னிற திருகு குமிழ்களுடன் நவீனத் தொழில்நுட்பத்தின் காட்சி அடையாளமாக வீடுகளில் உயரமாக அமைக்கப்பட்ட பீடங்களில் அமர்ந்திருக்கும். ஒலிக்காதபோது மஞ்சள், நீலம், சிவப்பு நிறங்களில் வெல்வெட் திரைபோட்டு மூடி வைத்திருப்பார்கள். அப்பாக்களோ மூத்த அண்ணன்களோதான் தொடமுடியும். அக்காக்கள் கெஞ்சிக்கேட்டுத்தான் அதை போட்டு கேட்கவேண்டும்.

குமரிமாவட்ட்த்தில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தெளிவாகவே எடுக்கும். நெல்லையும் திருவனந்தபுரமும் அதற்கு அடுத்தபடியாகத்தான். திருச்சியும் மதுரையும் கரகரக்கும். ஆகவே தமிழிசை என்றால் இலங்கை வானொலிதான். அன்றெல்லாம் படிப்பு முடித்து திருமணத்திற்குக் காத்திருக்கும் அக்காக்களின் உலகமே வானொலிதான். திரைப்படப் பாடல்கள், திரைப்பட ஒலிச்சித்திரங்கள், வானொலி நாடகங்கள் என அதிலேயே வாழ்வார்கள். மர்ஃபி வானொலிக்கு வலை போன்ற அதிர்வுவாங்கி தேவை. அதை வீட்டிலிருந்து அருகே உள்ள தென்னை மரம் வரை இழுத்துக் கட்டி வைப்போம். அப்படியும் மழைநாட்களில் கரகரப்புதான் மைய ஒலியொழுக்காக இருக்கும். பயிற்சி ஏட்டில் கோடுமீது எழுத்துக்கள் போல கரகரப்பின்மேல் பாடல்கள், பேச்சுக்கள்.

எழுபதுகளில்தான் டிரான்ஸிஸ்டர் ரேடியோ பிரபலமாக ஆரம்பித்த்து. வால்வ் ரேடியோக்களின் கரகரப்பு மறைந்த்து. வானொலியை குழந்தைபோல அருகே வைத்துக்கொண்டு அக்காக்கள் இரவு துயில்கொண்டார்கள். மானசீக்க் காதலனைப்போல அது அவர்களை கொஞ்சிக்கொண்டே இருந்த்து. அதிலிருந்து கே.எஸ்.ராஜாவின் குரல், ஆண்மையின் சின்னம் அது. அவர்களில் அது எழுப்பிய கனவுகளை என்னால் இன்று ஊகிக்க முடிகிறது. சைக்கிள் சர்க்கஸ்கள், கிராமத்திருவிழாக்களில் கே.எஸ்.ராஜாவை குரல்போலி செய்யும் உள்ளூர் அண்ணன்கள் கே.எஸ்.ராஜாவின் புகழின் ஒரு பகுதியை தாங்களும் பெற்று காதலிகளை வென்றனர்.

கே.எஸ்.ராஜாவின் வாழ்க்கையைப்பற்றி குறைவாகவே இணையத்தில் உள்ளது. இலங்கை ஒலிபரப்புநிலைய ஊழியராக இருந்த கனகரத்தினம் ஸ்ரீஸ்கந்தராஜா யாழ்ப்பாணம் காரைநகரில் பிறந்தார். தந்தை மருத்துவர். தாயார் ஆசிரியை. நான்கு தமக்கையரும் மருத்துவர்கள். 1966ல் கொழும்பு ராயல் கல்லூரியில் பள்ளிப்படிப்பை முடித்தார். இலங்கைப்பற்கலைக் கழகத்திலும் பின்னர் லண்டன் பல்கலைக்கழகத்திலும். கணிதம் மற்றும் வேதியியலில் பட்டம் பெற்றார். இலங்கைப் பல்கலைக்கழகத்தில் சிறிது காலம் விரிவுரையாளராகப் பணியாற்றிய பின்னர் இலங்கை வானொலியில் பணியில் சேர்ந்தார்.

1983ல் இலங்கையில் இனக்கலவரம் ஆரம்பித்தபோது ராஜா தமிழகத்திற்குச் சென்றார். அங்கே தமிழர்ஒற்றுமை சார்ந்த சில பாடல்களை ஒலிபரப்பியமையால் அவரை தமிழர் சிலரே காட்டிக்கொடுத்த்தாகவும், இலங்கை ராணுவத்தால் கைதுசெய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டமையால் தமிழகத்திற்கு வந்த்தாகவும் அவர் விகடனுக்கு அளித்த பேட்டியில் சொன்னார். தமிழகத்தில் பத்மநாபா, வரதராஜப்பெருமாள் போன்றவர்களால் ஆரம்பிக்கப்பட்ட இ.பி.ஆர்.எல்.எஃப் அமைப்புடன் இணைந்து செயல்பட்டார். ஆனால் அவருக்கு பெரிய அளவில் அரசியல் ஈடுபாடு இருக்கவில்லை. எதனுடனும் இணைந்து அவர் செயல்படவுமில்லை. அனைத்து இயக்கங்களும் ஒன்றுபடவேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தார். அதையும் விகடன் பேட்டியில் சொல்கிறார்

1987ல் இந்தியா இலங்கை அமைதி ஒப்பந்தம் உருவானது. ஈ.பி.ஆர்.எல்.எஃப் இந்தியச் சார்புகொண்ட அமைப்பாதலால் இந்திய ஆதரவுடன் அது இலங்கையில் வேரூன்றியது. ராஜா இலங்கை திரும்பி வானொலி அறிவிப்பு வேலைக்கு மீண்டும் சேர்ந்தார். அவரை எவரோ கடத்தி கொன்று கொழும்பு கடற்கரையில் வீசிவிட்டுச் சென்றனர். அவருடைய கொலை விடுதலைப்புலிகளால் செய்யப்பட்டது என்றே பரவலாகக் கருதப்படுகிறது. ஏனென்றால் அன்று ஈபிஆர்எல்எஃப் அமைப்பின் முதன்மை எதிரியாக இருந்த்து புலிகள் அமைப்பே. ஆனால் டக்ளஸ் தேவானந்தாவால் நடத்தப்பட்ட அரசு ஆதரவு அமைப்பான ஈழ மக்கள் ஜனநாயக்க் கட்சியினரால் கொல்லப்பட்ட்தாக அக்கட்சியிலிருந்து வெளியேறிய டி.மதிவாணன் என்பவர் சொன்னதாக அனைத்து ஊடகங்களிலும் இப்போது செய்தி தொடர்ச்சியாகப் பதிவுசெய்யப்படுகிறது.டக்ளஸ் தேவானந்தாவின் அமைப்பு ஏன் கே.எஸ்.ராஜாவைக் கொல்லவேண்டும் என்ற கேள்விக்கு மறுமொழி இல்லை. உண்மையை இன்று உணர்வது மிகடினம்.

கே.எஸ்.ராஜா இலங்கைக்குத் திரும்பி மீண்டும் வானொலியில் வேலைசெய்யவேண்டும் என்பதை மட்டுமே தன் ஆசையாக விகடன் பேட்டியில் சொல்கிறார். அது எளிய கலைஞனின் ஆசை. அரசியல் இரும்புச்சக்கரம் கொண்ட வாகனம். அது மென்மையான நத்தைகளைத்தான் அரைத்துச்செல்கிறது. கலைஞர்கள் ஓடில்லாத நத்தைகள்.

ஜெ

எழுதியவர் : (24-Jun-18, 6:01 pm)
பார்வை : 25

மேலே