கொடி முல்லை

வண்ணம் கொண்ட வாடா மலரோ
கண்கள் இரண்டும் கந்தக மலரோ
புன்னகை புரியும் பொன்மலர் தானோ
பூந்தளிர் மேனியோ பூமகள் இவள்தானோ

பூமழை தூவும் பூமேகம் இவளோ
தேன்மழை சிந்தும் செவ்விதழ் கொண்டவளோ
வாசம் வீசி வலைவிரிக்கும் பூங்கொடியோ
மனதை மயக்கும் கொடி முல்லையோ

நெருங்கி வந்து நெஞ்சை மயக்கி
நினைவில் நிறைந்து இன்பம் கொடுத்து
ஆசையை பெருக்கி அழகில் மயக்கி
அன்பை பொழியும் அழகு தேவதையோ

தேகம் சிலிர்க்கும் என்னவள் தீண்டினால்
சோகம் மறையும் பூமகளை பார்த்தால்
துன்பம் நீங்கி இன்பம் பொங்கும்
என்னவள் நாளும் என்னுடன் இருந்தால்

ஆழ்கடல் போல அமைதி கொண்டு
என்னை தன்னில் மூழ்க வைத்தாள்
காதலிலே திளைக்க வைத்தாள் - அவள்
என்னை கண்விழித்து தூங்க வைத்தாள்

ஆக்கம்: வேல்பாண்டியன் கோபால்

எழுதியவர் : வேல்பாண்டியன் கோபால் (24-Jun-18, 10:06 pm)
சேர்த்தது : வேல்பாண்டியன்
பார்வை : 48

மேலே