539 மாசகற்றி மாண்புறுத்தல் மதியுடையார் மாண்பே – நீதிநூல் - பாயிரம் 3
அறுசீர் விருத்தம்
விளம் மா தேமா அரையடிக்கு
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் அருகி வரும்)
வழுவொழித் தாளன் மேலோர்
.வழக்கென லாலிந் நூலைத்
தழுவுமி னெனவன் னோரைத்
..தாழ்ந்திடன் மிகைகீ ழோரைத்
தொழுதிரப் பினுமா சொன்றே
..தூற்றுவ ரவரை வாளா
அழுதிரத் தலிற்பே றில்லை
..ஆதலின் மௌன நன்றால்.
– நீதிநூல் - பாயிரம் 3
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
ஆன்றவிந்து அடங்கிய சான்றோர் பிறர் நூற் குற்றம் போக்கிப் பெருமைப்படுத்திக் கைக்கொள்வது இயல்பு. ஆதலால், அவர்களிடம் இந்நூலை ஆதரியுங்கள் என்று வேண்டிக் கொள்ளுதல் குற்றமாகும்.
குற்றமே தூற்றும் சிற்றினத்தாராகிய கீழோரிடம் தொழுதும் அழுதும் இரப்பதாற் பயன் ஒன்றும் இன்று. ஆதலின், அவரிடம் சிவனே என்று, இருப்பது சிறப்பு.
வழு-குற்றம். வழக்கு-இயல்பு. மிகை-குற்றம். மாசு-குற்றம். பேறு-பயன். மௌனம்-வாய்பேசாமை; சிவனே என்றிருத்தல்.