540 நூற்பொருள் வைப்பால் விழுப்பொருள் நுகர்வர் – நீதிநூல் - பாயிரம் 4

அறுசீர் விருத்தம்
விளம் மா தேமா அரையடிக்கு
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் அருகி வரும்)

தான்கண்ட நிட்சே பத்தைத்
தமர்க்கெலாம் அறிவிப் பான்போல்
வான்கண்ட இங்கி லீயம்
மருவுபல் நூற்பூ மிக்குள்
யான்கண்ட நிட்சே பத்தை
யாவரும் தெரிவான் செய்தேன்
தேன்கண்ட இந்நூ லீட்டல்
செய்குவார் உய்கு வாரே.

– நீதிநூல் - பாயிரம் 4
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

புதையலைக் கண்டவன் தன்னைச் சார்ந்தார்க்கு எல்லாம் அறிவிப்பவன் போல், யான் உலகில் செந்தமிழ்ச் செழுநூல் பலவற்றினும், ஆங்கில நூலினும் கண்ட உண்மைப் புதையலை எல்லாரும் உணரும்படி எளிதாகச் செய்தேன்.

அத்தகைய இனிய இந்நூலைக் கற்று ஒழுகுபவர் நன்னெறிச் சென்று இன்புற்று ஈடேறுவர்.

இங்கிலீயம்-ஆங்கில நூல். நிட்சேபம்-புதையல். தேன்-இனிமை. ஈட்டல்-கற்றல். உய்குவார்-ஈடேறுவர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (19-Jul-18, 7:41 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 33

சிறந்த கட்டுரைகள்

மேலே