- இயற்கை வழிபாடு -------------சூரியன்
மனிதன் வாழ்வதற்கு நீர், காற்று, முதலியவை தேவை. இவையே இயற்கையாகும். இயற்கையில்லாமல் அவனால் தனித்து வாழ முடியாது. இயற்கை தன்னை விட வலிமையுடையது எனக் கருதினான் மனிதன். அந்த இயற்கை பாரதிக்குத் தெய்வமாய்த் தோற்றமளித்தது.
இயற்கைப் பொருள்களான சூரியனைப் பற்றிச் சூரியதரிசனம், ஞாயிறு வணக்கம், ஞானபானு என்னும் பாடல்களும், நிலவைப் பற்றிச் சோமதேவன் புகழ், வெண்ணிலாவே என்னும் பாடல்களும் பாடியுள்ளார். பகலில் சூரியனும் இரவில் நிலவும் இருளைப் போக்கி மனித குலத்திற்கு ஒளி தருகின்றன. மனித குலத்திற்கு உதவும் இவை பற்றிப் பாரதி பாடுவதைப் பாருங்கள்.
3.1.1 சூரியன்
உலகிலுள்ள பொருள்கள் யாவிற்கும் அடிப்படையான, முதல் பொருளாகச் சூரியனை காண்கிறார். தாய் தந்தையாய்க் கருதி வணங்குகிறார் பாரதி.
பரிதியே! பொருள் யாவிற்கும் முதலே!
(சூரிய தரிசனம் - 1)
(பரிதி = சூரியன்)
ஆதித் தாய்தந்தை நீவிர் உமக்கே
ஆயிரந் தரம் அஞ்சலி செய்வேன்
உலகிற்கு ஒளி வழங்கத் தினந்தோறும் உதிக்கிறது சூரியன். இதைப் பூமி மீது கொண்ட காதலால் சூரியன் தினமும் தோன்றுகிறது என்று கற்பனை செய்து பாடியுள்ளார்.
காதல் கொண்டனை போலும் மண்மீதே
கண்பிறழ் வின்றி நோக்குகின் றாயே!
மாதர்ப் பூமியும் நின்மிசைக் காதல்
மண்டினாள்
(ஞாயிறு வணக்கம் - 3)
(மண்டினாள் = நெருங்கினாள் )
புற இருளை நீக்க ஒளி வேண்டும். அறியாமை என்னும் அக இருளை நீக்க அறிவாகிய ஞானம் வேண்டும். கவலை, சிறுமை முதலியவை அறிவிலாமை என்ற இருளில் காணப்படும் பேய்கள். இந்தப் பேய்களை ஞானமாகிய ஒளி நெருங்கினால் அறிவிலாமை என்ற இருள் நீங்கும் என்று பாரதி ஞானத்தைச் சூரியனாக உருவகித்துள்ளார்.
கவலைகள், சிறுமை, நோவு, கைதவம், வறுமைத் துன்பம்
இவையெலாம் அறிவி லாமை என்பதோர் இருளிற் பேயாம்
நவமுறு ஞானபானு நண்ணுக தொலைக பேய்கள்
(ஞானபானு : 1,2)
(கைதவம் - வஞ்சகம், நவம் - புதுமை, ஞானபானு - அறிவாகிய கதிரவன்)
சூரியனின் தோற்றத்தைப் பலர் பாடியுள்ளனர். ஆனால் அதை ஞானமாகவும் அறிவுத் தெய்வமாகவும் பாரதியே பாடியிருக்கிறார். அறியாமை இருளில் மூழ்கிக் கிடக்கும் தமிழ்நாட்டு மக்கள் ஞானம் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் பாடினாரோ?
முனைவர் இராஜேஸ்வரி