பஞ்சு எனத் தொடங்கி நெஞ்சு என முடியும் வெண்பாக்கள்

பஞ்சு எனத் தொடங்கி நெஞ்சு என முடியும் வெண்பாக்கள்....!!!!

பஞ்சனைய மேகங்கள் பாங்குடன் நீந்திவந்து
வஞ்சமின்றித் தொட்டுரசும் வானவில்லை! - மஞ்சுளமாய்க்
கார்முகில் கூடிவர கானமயி லாடிடும்
நேர்த்தியில் பூத்திடும் நெஞ்சு.

பஞ்சுமெத்த காத்திருக்கு! பக்கம்வா பொன்மயிலே!
பிஞ்சுவிரல் பட்டதிலே பித்தானே(ன்) - அஞ்சுகமே
சொக்கவச்ச சுந்தரியே! தூங்காம வொன்நெனப்பில்
நிக்காம துள்ளுதடி நெஞ்சு.

பஞ்சுமிட்டாய் வண்ணத்தில் பக்கத்தில் நானிருக்க
அஞ்சாம லுன்கண் அலைவதேன்? - வஞ்சகனே!
குத்திக் கிழித்துக் குடலை உறுவிடுவேன்
நித்தம் கொதிக்குதடா நெஞ்சு.

பஞ்சணை யும்வேண்டேன் பால்பழமும் யான்வேண்டேன்
தஞ்சமடைந் தேனுன்னைத் தண்டமிழே! - கொஞ்சியுனை
அன்போடு போற்றிடுவேன் அன்றாடம் வாழ்த்திடுவேன்
நின்னால் நிறைந்ததென் நெஞ்சு.

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (15-Aug-18, 1:06 pm)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 34

மேலே