சிலம்பின் கதை-------------------முன்னுரை

தமிழில் இராமாயணம் பாரதம் இவற்றிற்கு வந்துள்ள உரைநடை நூல்கள் போலச் சிலப்பதிகாரத்துக்கு இதுவரை யாரும் எழுத முன்வரவில்லை. அதனை இவ் உரைநடை நூல் நிறைவு செய்கிறது.

இதன் தனிச் சிறப்பு : மூல நூலை ஒட்டி அதனோடு சிறிதும் பிறழமால் இது தரப்பட்டுள்ளது.

மற்றும் “சிலப்பதிகாரக் கதை” பலரும் அறிந்தது. காவியத்தைப் படித்தவர் அறிவர் எனினும் உள்ளே உள்ள எல்லாச் செய்திகளையும் அறிவதற்கு வாய்ப்பு இல்லை. அவ்வகையில் இது எல்லாச் செய்திகளையும் தருகிறது: முழுமையாக அறிய உதவுகிறது.

இது ஒரு “நாட்டுக் காவியம்” - தமிழ் நாடு, நாட்டு மக்கள் அவர்கள் வாழ்வியலைத் தெள்ளத்தெளியத் தருவது இது. அரசியல் வாழ்வில் இருந்த சீர்மை, பெண்மையின் உயர்வு, அறத்தின்பால் நம்பிக்கை இம்மூன்றும் தமிழ் மக்களின் உயர்ந்த கோட்பாடுகள். இவற்றைச் சிலப்பதிகாரம் உணர்த்துகிறது. இவ்வகையில் இதனை ஒரு “திருக்குறள்” என்றே கூறலாம். திருக்குறளின் விரிவாக்கமே சிலப்பதிகாரம் எனலாம்.

திருக்குறள் செய்திகளை ஆசிரியர் நேரில் அவர் தம் கூற்றில் கூறுகிறார். இது கதைப் பாத்திரங்கள் வாயிலாக உணர்த்துகிறது. திருக்குறளைப் போல இக்காவியமும் தமிழர் அறக் கோட்பாடுகளை வற்புறுத்துவது ஆகும்.

உரைநடையில் படிக்கிறபோது மொழிச்சிக்கல் ஏற்படுவது இல்லை; பொருள் விளக்கம் நாடத் தேவை இல்லை. இன்றைய தமிழ் நடை தெளிவான போக்குடையது; பண்பட்ட நடை எழுத்தாளர்கள் எழுதி வருகின்றனர். “வாசகர் நடை” என்று தமிழ் இலக்கியம் பயிலாத்வர் எழுதும் நடை பழங்காலத்து நிலை, இன்று தூய இனிய எளிய நடையில் தர முடிகிறது. இதுவும் இந்நூலுக்குக் கூடுதல் சிறப்பு என்பதைச் சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது.

ரா. சீனிவாசன்

எழுதியவர் : (16-Aug-18, 7:27 pm)
பார்வை : 78

சிறந்த கட்டுரைகள்

மேலே