குமாரி கமலா

குமாரி கமலா (பிறப்பு 16 சூன் 1934, அகவை 84) இவர் பேபி கமலா, கமலா லட்சுமணன், கமலா நாராயண் எனவும் அழைக்கப்படுவார்.

இவர் ஒரு நடனக் கலைஞர், நடிகை, பாடகியும் ஆகும். 1950 களில் புகழ்பெற்ற நடிகையாக விளங்கிய இவர் 80 இற்கும் மேற்பட்ட தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். கமலா பரத நாட்டியத்தில் இணையற்ற தாரகைகளான பாலசரஸ்வதி, ருக்மிணிதேவி ஆகியோர் வரிசையில் எண்ணத்தக்கவர் ஆவார்.

வாழ்க்கைக் குறிப்பு:

குமாரி கமலா தமிழ்நாட்டின் மயிலாடுதுறையில் வாழ்ந்த ராமமூர்த்தி ஐயர், ராஜம்மாள் ஆகியோரின் மகளாவார். கமலாவிற்கு ராதா, வசந்தி என இரு தங்கைகள் உண்டு. இவருக்கு 3 வயதானபோது குடும்பம் பம்பாய்க்கு இடம் பெயர்ந்தது.

அந்த வயதில் கமலா கதக் நாட்டியம் பயின்றார். அங்கு மூன்றரை வயதில் பம்பாய் ஆஸ்திக சமாஜத்தில் நடன மேதை ருக்மிணி முன்னிலையில் ஆடி அவர் கையால் மாலையிடப்பட்டு வாழ்த்து பெற்றார்.

ஐதராபாத்தில் கவியரசி சரோஜினி நாயுடு முன்னிலையில் நடனமாடி வாழ்த்து பெற்றார். தந்தை ஈரானிலும் பின்னர் பம்பாயிலும் பணி புரிந்தவர். இரண்டாம் உலகப்போரால் கமலாவின் குடும்பம் சொந்த ஊரான மயிலாடுதுறைக்கு இடம்பெயர்ந்தது. கமலா காட்டுமன்னார் கோயில் முத்துக்குமரப் பிள்ளையிடம் பரதம் பயின்றார். அதன்பின்னர் வழுவூர் பி. இராமையா பிள்ளையிடம் 25 ஆண்டு பயின்றார்.

பம்பாயிலிருந்த ரஞ்சித் மூவிடோன் கம்பெனியில் மாதச் சம்பளத்தில் இவர் குழந்தை நடிகையாகச் சேர்ந்தார். சில இந்திப் படங்களில் நடித்தார். மியூசிக் அகடாமியிலும், எலிசபத் அரசியின் முடிசூட்டு விழாவிலும் கமலா நாட்டியம் ஆடியிருக்கிறார். நாம் இருவர் உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் இவரின் நடனம் இடம்பெற்றது.

திரைப்படங்களில் நடிப்பு:

ஸ்ரீராமுலு நாயுடுவின் இயக்கத்தில் 1944 இல் வெளிவந்த ஜகதலப் பிரதாபன் திரைப்படத்தில் பாம்பு நடனம் ஆடிப் புகழ் பெற்றார். P.U.சின்னப்பா பாட, பேபி கமலா ஆடும் ‘நமக்கினி பயமேது’ – கெளளிபந்து ராகம் - (கோபால கிருஷ்ண பாரதி இயற்றியது) என்ற பாடலும் பிரபலம்.

நாம் இருவர் (1947) திரைப்படத்தில் ஆடுவோமே பள்ளு பாடுவோமே என்ற பாடலை இரட்டை வேடத்தில் நடித்துப் பாடினார். ஏவிஎம் இன் பராசக்தி திரைப்படத்தில் ஓ... ரசிக்கும் சீமானே... என்ற பாடல், கொஞ்சும் சலங்கை படத்தில் இவரும் நடிகை குசலகுமாரியும் இணைந்து ஆடிய போட்டி நடனம் ஆகியவை இவருக்குப் புகழ் சேர்த்தன.

பாவை விளக்கு (1960) திரைப்படத்தில் முதல் கதாநாயகியாக குமாரி கமலா செங்கமலம் என்ற பாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் நடனப் பெண்மணியான இவரின் நடனப் பாடல் 'நான் உன்னை நினைக்காத நேரமுண்டோ'. ’தேஷ்’ ராகத்தில் அமைந்த இந்தப் பாடலும், நடனமும் மிக அற்புதமானவை.

மேடையின் முன்னால் நெற்றியில் விபூதியணிந்து அப்பாவியாக, கதாநாயகனாக தணிகாசலம் (சிவாஜி கணேசன்) அமர்ந்திருப்பார். அப்போது அவரை எண்ணி தன் காதலைச் சொல்வது போல அமைந்த பாடல் இது. கவிஞர் மருதகாசி இயற்றி, கே.வி.மஹாதேவன் இசையமைப்பில் பி.சுசீலா பாடியது.

வண்ணத்தமிழ்ப் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள் என்று கதாநாயகன் எழுதிப் பாடும் பாட்டிற்கு குமாரி கமலா நாட்டியமாடி இருந்தார். இப்படத்தின் பிற்பகுதியில் பம்ம்பாயில் இவர் பாடி நடனம் ஆடும் ‘சிதறிய சதங்கைகள் போலே’ நெஞ்சை உருக்கும் பாடலும், நடனமும் ஆகும்.

குடும்பம்:

பிரபல ஓவியர் ஆர். கே. லட்சுமணனை திருமணம் புரிந்தார் கமலா. அவருடன் 1960 இல் மணமுறிப்பு செய்த பின்னர் 1964 ல் இராணுவ வீரர் மேஜர் லெட்சுமிநாராயணன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டு திரையுலகில் இருந்து விலகி குடும்ப வாழ்க்கையில் ஈடுபடலானார்.

1980-ல் அமெரிக்காவில் உள்ள குயின்ஸ் என்ற இடத்தில் குடியேறி அங்கே "ஸ்ரீபரதகலாலயா' என்கிற நாட்டியப் பள்ளி ஒன்றை ஆரம்பித்து ஏராளமானவர்களுக்கு பரதக் கலையைக் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தார். 1983-ல் கணவர் இறந்த பிறகு தன் மகனோடு அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கில் வசித்து வருகிறார்.

இவர் பெற்றுள்ள விருதுகள்: :

1967 - கலைமாமணி விருது
1968 - சங்கீத நாடக அகாதமி விருது
1970 - இந்திய அரசு இவரது கலைத் திறமையை பாராட்டும் விதமாக இவருக்கு பத்ம பூசண் விருது வழங்கி பாராட்டியது.
1975 - கால்கேட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பதவி (Branta Professorship from Colgate University)
1989 - இ. கிருஷ்ண அய்யர் பதக்கம் (சுருதி அமைப்பு)
1993 - சங்கீத ரத்னாகரா (கிளீவ்லேண்டு தியாகராஜ ஆராதனை)
2002 - சென்னை மியூசிக் அகாதமியின் பவள விழா விருது (Platinum Jubilee award-)
2010 - தேசிய பாரம்பரிய ஆய்வுதவித் தொகை (National Heritage Fellowship)
நடித்த திரைப்படங்கள் சில ஸ்ரீ வள்ளி (1945), ஜகதலப்பிரதாபன் (1944), கொஞ்சும் சலங்கை, காத்தவராயன், பக்தமீரா, நாம் இருவர், வீரக்கனல், வேதாள உலகம், குல தெய்வம், பார்த்திபன் கனவு, சிவகங்கைச் சீமை, பராசக்தி, பாவை விளக்கு.

குறிப்பு:

வலைத்தளத்தில் அவர் அமெரிக்காவின் நியூயார்க்கில் இருப்பதை அறிந்து பெருமையும், புளகாங்கிதமும் அடைந்தேன்; மெய் சிலிர்த்தது. பெருமைக்குரிய அம்மையாரைக் காண வேண்டுமென்றும் ஆவல். பாவை விளக்கு திரைப்படத்தைப் பார்த்தவர்களுக்குப் புரியும்.

ஆதாரம்: வலைத்தளம்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (27-Aug-18, 7:47 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 153

சிறந்த கட்டுரைகள்

மேலே