வணங்கி அன்புடன் பழகி வந்தால் நட்புறவு உண்டாகும் - நான்மணிக்கடிகை 101
நேரிசை வெண்பா
வைததனால் ஆகும் வசையே வணக்கமது
செய்ததனால் ஆகுஞ் செழுங்கிளை - செய்த
பொருளினால் ஆகுமாம் போகம் நெகிழ்ந்த
அருளினால் ஆகும் அறம். 101 -
- நான்மணிக்கடிகை
பொருளுரை:
ஒருவர் பிறரை வைவதால் அவனுக்கு நிந்தனையும், கெட்ட பெயருமே உண்டாகும்.
எல்லோரையும் வணங்கி அன்புடன் பழகி வருவதால் மிகுந்த நட்புறவு உண்டாகும்.
தேடிப் பெருக்கிய பொருளினால் இன்பவாழ்க்கை உண்டாகும்.
பிற உயிர்களிடம் கொள்ளும் குழைந்த இரக்கத்தினால் அறவினை உண்டாகும்.