அன்பை மறப்பவர்

===================
நிலவென்பர் தாங்கும் நிலமென்பர் வாச
மலரென்பர் பெண்ணில் மயங்கி – உலகே
அவளென்பர் ஈற்றில் அவமான மென்றே
கவலையும் கொள்வர் கசந்து.

அழகென்பர் உண்மை அமைதியு மென்பர்
பழகிப் பயனடைந்த பின்பு – கிழமென்பர்.
பெண்ணன்பி னாலே பெருவாழ்வு வாழ்ந்தவரும்
கண்மூடிக் கொள்வார் கடுத்து.

அலையென்பர் வாழ்வின் அரண்என்பர் தெய்வச்
சிலையென்பர் தேடிய செல்வ – மலையென்பர்
துன்பம் விளைந்து துவைத்தெடுத்து விட்டால்பெண்
அன்பை மறப்பர் அறி.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (17-Sep-18, 10:11 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 78

மேலே