ஒரே கரு, இரு ஆசிரியர்கள்------------------தழுவவலா பாதிப்பா உமையாழ்

சு.வேணுகோபாலின் வெண்ணிலை சிறுகதைத் தொகுதியின் கடைசிக்கதை ‘தொப்புள்கொடி’. தொகுதியின் ஆகச் சிறந்த கதை என ஐயமில்லாமல் சொல்லி விடலாம்.

இந்தத் தொகுதியின் 23கதைகளையும் 23நாளில் எழுதி, தமிழினி பதிப்பாளருக்கு சுவே அனுப்பியதாகவும், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கதையையாக வாசித்த பதிப்பாளர் ‘இதில் சுவேயின் முழுமையான ஆளுமை வெளிப்படவில்லை’ எனச் சொல்லி அவரை உசுப்பி விட்டதாகவும் அந்த வேகத்தில் ஒருநாளுக்கு ஒரு கதை வீதம் எழுதி, 23ம் நாளில் தொப்புள்கொடியை எழுதி அனுப்பிய போது ‘இதுதான் சுவே’ என பதிப்பாளர் மகிழ்ச்சி தெரிவிக்க நான் தொடர்ந்து எழுதுவதை நிறுத்தியதாகவும் சுவேணுகோபால் ஒரு பேட்டியில் சொல்லி இருக்கிறார்.

தொப்புள்கொடி மெய்யாலுமே நல்ல கதைதான். ஆனால் இந்தக் கதையை 1960ம் ஆண்டே கிரா எழுதி விட்டார் என்பதுதான் இங்கே சொல்ல வேண்டியது. கிரா எழுதிய கதையின் பெயர் ‘பேதை’.

கிராவின் ஆகச் சிறந்த கதை எனக் கேட்டால் நான் கதவையோ, நாற்காலியையோ, மின்னலையோ வேறெதையுமோ சொல்ல முதல் பேதையைத்தான் சொல்வேன். அந்தக் கதைக்குள் அத்தனை விதமான shades யை கொண்டு வைத்திருப்பார் கிரா. கிராவின் வேறெந்தக் கதையிலும் இல்லாத அளவிற்கு விவரணைகளக் கொண்டது இந்தக் கதை. ஒரு இடத்தில் நாற்றம் பற்றி எழுதி இருந்ததை வாசித்த நான் மூக்கை பொத்திக்கொண்டேன். அவ்வளவு தத்துரூபமான எழுத்து. மூர்க்கமான எழுத்தும் கூட.

சு.வேணுகோபால் அதே கதையை பட்டி டிங்கரிங் பார்த்து திரும்ப எழுதினார் என்றுதான் சொல்ல வேண்டும். கிராவின் அந்தக் கதை பின்வருமாறு நகர்கிறது;

மூளை வளர்ச்சி இல்லாத பெண்ணை யாரோ கற்பமாக்கி விடுகிறார்கள். அவளுக்கு குழந்தை பிறக்கிறது. அதை அவள் மற்றவருக்குக் கொடுக்காமல் தன்னிடமே வைத்துக்கொள்கிறாள். குழந்தையை அவளிடமிருந்த பிரித்துக் காப்பாற்ற மற்றவர்கள் முயல்கிறார்கள். அவள் சண்டை இட்டு குழந்தையை தன்னுடன் எடுத்துக்கொண்டு ஓடி விடுகிறாள். குழந்தை இறந்து, அழிந்து, கை வேறு கால் வேறாகத் தொங்க வலம் வருகிறாள்.

சுவேயும் இதே கதையைத்தான் எழுதி இருக்கிறார். பேதையில் வரும் பேச்சியும், தொப்புள்கொடியில் வரும் கிறுக்கி எனும் கிருத்திகாவும் ஒருவளே. இந்தப் பெயர் வித்தியாசம் இல்லாமல் கதையில் வேறு வேறுபாடே இல்லை. இதை எப்படிச் சொல்வது! Inspiration என்பதா? அல்லது இது வெறும் copyயா?

ஜெயகாந்தனும் புதுமைப்பித்தனின் ‘இயந்திரம்’ கதையை இப்படி ‘inspiration’ அல்லது ‘copy’ செய்து எழுதி இருப்பார். ஆக இது தமிழில் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கிறது. இதை எப்படி வகைப்படுத்துவது என்பது கூடச் சிக்கலானது. இது வெறும் inspirationதான் என்றால், அதை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வதில் ஆசிரியருக்கு என்ன பிரச்சினை இருக்கிறது? ஒருவேளை இந்த inspiration ஆசிரியர்களே அறியாமல் நிகழும் ஒரு விடயமா என்ன?

சுவேயை வாசிக்க ஆரம்பித்த போதே, அவரது கதைக்களனும் கூறல் முறையும் கிராவை ஞாபகப்படுத்திக் கொண்டே இருந்தது. கடைசிக் கதை, தொப்புள்கொடியின் முதல் பக்கத்தை வாசித்த போதே கிராவின் ‘பேதை’ மின்னல் போல மனதில் தோன்றியது. அவ்வளவு நேரமாக வியந்த சுவேணுகோபால் எனும் விம்பத்தின் பிரமாண்டம் நொடியில் மறைந்து போயிற்று. மற்றக் கதைகளின் மீதான நம்பிக்கையில் கேள்விகள் எழுவதை தவிர்க்க முடியவில்லை. சுவேணுகோபால் எனும் ஆளுமையை மறுதலித்தல் என்பதல்ல இது. மாறாக சு.வே தன் வாசகர்களை சற்றேனும் மதித்திருக்கலாமே என்கிற ஆதங்கம்தான் இது.

----------------------------------------------------------
அன்புள்ள ஜெ

இந்தக்கட்டுரையை இணையத்தில் வாசித்தேன். சு.வேணுகோபாலின் கதை கி.ராஜநாராயணனின் பேதை கதையை தழுவி எழுதப்பட்டது என்கிறார். இதைப்பற்றிய உங்கள் மதிப்பீடு என்ன?

ராஜேஷ்
------------------------------------------------------------
அன்புள்ள ராஜேஷ்

அந்த கட்டுரை ஒர் இலக்கிய விவாதத்தின் தொடக்கம் என்னும் வகையில் நல்லதுதான். ஆனால் அதன் ஒரு வரி கொஞ்சம் பிழையானது. இப்படி ஒரு கதையில் முந்தைய கதையின் சாயல் இருப்பதைக் கண்டதுமே சு.வேணுகோபால் மீதான மதிப்பு இல்லாமல் போயிற்று என எழுதியிருக்கிறார். இது இளம்வாசகர்களின் உளநிலை. இப்படி உலக இலக்கியத்தில் உள்ளதா, மதிப்புக்குரிய எழுத்தாளர்களிடம் இதைக் காணக்கிடைக்குமா, இவ்வாறு அமைவதற்கான காரணம் என்ன என்றுதான் நல்ல வாசகன் யோசிக்கவேண்டும். இலக்கியவாதி மேல் மதிப்பு உருவாவதும் சரி விலகுவதும் சரி இத்தனை எளிதாக அமையக்கூடாது.

நான் 2 /9 /10 அன்று மதுரை ஃபாத்திமா கல்லூரியில் ஓர் உரை ஆற்றினேன். அரங்கிலிருந்த மாணவிகள் எவரும் வாசிப்புப் புலமோ ஆர்வமோ கொண்டவர்கள் அல்ல. ஆகவே சில கதைகள் வழியாக உரையை நிகழ்த்தினேன். அதாவது ஒரே கதைக்கருவை வெவ்வேறு எழுத்தாளர்கள் எப்படி சில மாறுதல்களுடன் பயன்படுத்தியிருக்கிறார்கள், அதனூடாக வெளிப்படும் சமூகச்சூழல் மாற்றம் என்ன, உளவியல் மாற்றம் என்ன என்பதுதான் கரு. பொதுவான கதைக்கரு கொண்ட ஆறு வெவ்வேறு கதைகளை எடுத்துச் சொன்னேன். அதில் கி.ராஜநாராயணனின் பேதை, சு.வேணுகோபாலின் தொப்புள்கொடி ஆகிய இரு கதைகளும் உண்டு.

பின்னர் அக்கதைகளை நான் கல்லூரியில் சொன்னதை ஒட்டி அங்கே பணியாற்றிய அனுராதா என்னும் பேராசிரியை எழுதிய கடிதமும் அதையொட்டிய ஓர் உரையாடலும் இந்தத் தளத்தில் நிகழ்ந்தது. பேராசிரியை இருகதைகளும் ஆபாசமானவை, மாணவிகளின் ஒழுக்கத்தைக் குலைப்பவை என்றும் தாங்கள் மாணவிகளை கற்போடு காப்பதே தலையாய கடன் என கல்விநிலையம் நடத்துவதாகவும் எழுதியிருந்தார்

பேதை கதையும் சு.வேணுகோபாலின் கதையும் ஒரே கரு கொண்டவை. உளநிலைப் பிறழ்ந்த ஒரு பெண்ணின் வாழ்க்கை. பிச்சியாக மாறி ஊரில் அலைகிறார்கள். கருவுறுகிறார்கள். ஆனால் இக்கருவை இருவருமே வெவ்வேறு கோணத்தில் அணுகுகிறார்கள். கி.ராஜநாராயணனின் கதை மேலும் கவித்துவமானது. அவளை பேய்ச்சியாக, ஒருவகை அமானுடத்தன்மை கொண்ட தெய்வமாக அது பார்க்கிறது சுடுகாட்டில் எரியும் பிணத்தைப் பிய்த்துத் தின்பவள் அவள்.

அவள் கருவுறும்போது உணர்வது மேலும் நுட்பமானது. அவள் மல்லாந்து படுத்துத் துயில்கிறாள். அவள்மேல் தென்னை ஓலையின் நிழல் ஆட நிலா ஒளிந்து ஒளிந்து தெரிகிறது. அவள் கனவில் ஒரு குழந்தை திரைவிலக்கி எட்டி எட்டிப் பார்க்கிறது. கிராவின் கதை அந்தப்பிச்சிக்குள் செயல்படும் பெண்மையின் அடிப்படை விசையை, அவள் ஆங்காரத்தை வெளிப்படுத்துவது. அவள் குழந்தை இறக்கிறது. இறப்பை அவளால் புரிந்துகொள்ள முடியவில்லை. குழந்தைச் சடலத்துடன் அது அழுகும்வரை அலைகிறாள். அதை அவளிடமிருந்து பிடுங்கி புதைக்கிறார்கள். மீண்டும் கருவுற்று வயிற்றைத்தூக்கிக்கொண்டு திமிராக ஊர்நடுவே நடக்கிறாள்.

சு.வேணுகோபாலின் கதை முழுமையாக யதார்த்தத் தளத்தில் நிற்கிறது. அது அந்தப்பெண்ணின் கதை அல்ல, அவள் உள்ளத்துக்குள் அவர் செல்வதே இல்லை. அது அவள் தாய்தந்தையரின் கதை. அவர்களுக்கு அவள் பெருந்துயர். அவளை எண்ணி எண்ணித் துயருறுகிறார்கள். ஆனால் அவள் கருவுற்றதுமே எதிரியாகிவிடுகிறாள். அவளை நஞ்சிட்டுக் கொன்றுவிடுகிறார்கள். பொதுவான கரு என்பதற்கு அப்பால் இது பேசுவது முற்றிலும் வேறொன்றை. பிச்சி வாழ்வது வேறு ஓர் உலகில். ஆனால் அவள் அச்சமூகத்தின் பார்வையில் அக்குடும்பத்துப் பெண். தெருவில் அலைபவளாக இருந்தாலும் அவள் கருவுற்றால் அக்குடும்பத்துக்கு அது அவமானம். எந்த அடையாளமும் இல்லாமல் தெருவில் வாழும் பிச்சியைக் கௌரவக்கொலை செய்கிறார்கள் என்பதுதான் இக்கதையின் மையம்.

கி.ராவின் கதையில் அடிப்படையான உயிராற்றலின் வல்லமை வெளிப்படுகிறது. சு.வேணுகோபால் நம்மால் அறியமுடியாதவற்றுக்கெல்லாம்கூட நாமே அளிக்கும் அர்த்தங்களை, அதனூடாக நாம் செய்யும் வன்முறையைச் சுட்டிக்காட்டுகிறார். அதோடு இன்னொன்றையும் காணலாம். கிரா சொல்லும் பழைமையான கிராமத்தில் அந்தப் பிச்சியை ஊர் ஒரு தொன்ம அடையாளம் அளித்து அஞ்சவும் பேணவும் செய்கிறது. அந்த ஊருக்கு கருவுறுதலின் அர்த்தம் வேறு. சுவேணுகோபாலின் நவீன வேளாண் கிராமத்தில் அவள் ஒரு வெறும் தொல்லைதான். ஆகவே ஒழித்துக்கட்டப்படவேண்டியவள். இங்கே கரு என்பது வேறொன்று.

இருகதைகளையும் கூர்ந்து படியுங்கள். ஒப்பீட்டு வாசிப்பில் இருகதைகளுமே மேலும் கூர்மை கொள்வதைக் காண்பீர்கள். தமிழிலக்கியத்திலும் உலக இலக்கியப்பரப்பிலும் இதேபோல ஒரே கதைக்கருவை எடுத்துக்கொண்டு வெவ்வேறு எழுத்தாளர்கள் எழுதிய பல உதாரணங்கள் உண்டு.

ஒரே கரு மூன்று வகையில் ஒரே எழுத்தாளரால் எழுதபட்டிருக்கலாம். முன்னோடி எழுத்தாளர் எழுதிய கருவால் தூண்டுதல் அடைந்து அதை இன்னொரு எழுத்தாளர் திரும்ப எழுதலாம்.. அதற்கும் இலக்கியத்தில் இடமுண்டு. இரு எழுத்தாளர்களுமே வாழ்க்கையிலிருந்து ஒரே நிகழ்வை எடுத்துக்கொண்டிருக்கலாம். அந்நிகழ்வு அச்சமூகத்தின் ஒரு முதன்மைப் பிரச்சினையாக, பேசுபொருளாக இருக்குமென்றால் அவ்வாறு ஆகும். ஒரு சமூகம் கொண்டுள்ள தொன்மம் வெவ்வேறு ஆசிரியர்களால் வெவ்வேறு கோணங்களில் கையாளப்படலாம்.

ஒரே கதைக்கருவை ஏன் வெவ்வேறு எழுத்தாளர்கள் எடுத்துக்கொள்கிறார்கள்? ஒரு காலகட்டத்திற்குப் பொதுவாக சில தத்துவ வினாக்கள், சில அறச்சிக்கல்கள் உள்ளன.அவற்றை நோக்கித் திறக்கும் தருணங்களை வாழ்கையிலிருந்து எழுத்தாளர்கள் கண்டடைகிறார்கள். அந்தப் பொதுவான தத்துவ வினாக்களும் அறச்சிக்கல்களும் பொதுவான தருணங்களைக் கண்டடையச் செய்கின்றன. ஆனால் அவ்வெழுத்தாளர்களின் நோக்கு, உணர்வு ஆகியவை மாறுபடுவதனால் அவை வெவ்வேறு கதைகளாக வெளிப்படுகின்றன

இந்தியச் சூழலில் சுதந்திரப்போராட்டம்தான் நவீன இலக்கியத்தின் பிறப்புக்காலகட்டம். மரபான ஆண்பெண் உறவு மாறத்தொடங்கியது. பெண்கள் படித்தனர், பெண்ணுரிமைகள் பேசப்படலாயின. அது ஆழமான ஒழுக்கக் கேள்விகளை மரபான உள்ளத்தினருக்கும் நவீன நோக்கு கொண்டவர்களுக்கும் உருவாக்கியது. பாலியல் ஒழுக்கநெறி குறித்த கேள்விகள் அன்று மிகுதி. பல கதைக்கருக்களை திரும்பத்திரும்ப பலர் எழுதியிருக்கிறார்கள். உதாரணம் இளம்விதவை, படித்த விபச்சாரி போன்ற கதைகள். அதற்கடுத்த காலகட்டத்தில் குடும்பம் என்னும் அமைப்பு மீதான மறுநோக்கு எழுந்து வந்திருப்பதைக் காணலாம். தனிமனிதனைக் குடும்பம் கைவிடுவது ஒரு பொதுவான கரு.

இப்படி இந்திய இலக்கியத்தில் ஒவ்வொரு காலகட்டத்திற்கும் உரிய பொதுவான அக்கறைகள் என்ன, அவற்றைக்கொண்டு அவர்கள் கண்டடைந்த பொதுவான கதைக்கருக்கள் என்ன, எந்தக் கதைக்கரு அதிகம் பேசப்பட்டது என்று விரிவாகவே ஆராயலாம். அது இலக்கியம் குறித்த ஒரு முழுமை நோக்கை அளிக்கும்.

ஒரு காலகட்டம் கடந்தால் சில கருக்கள் முழுமையாகவே கைவிடப்படுவதும் உண்டு. அந்தப்பிரச்சினை சமூகத்தில் இருக்கும், ஆனால் அதன்மீதான தத்துவ,அறக் கேள்விகள் பலகோணங்களில் பேசப்பட்டு கடந்துசெல்லப்பட்டிருக்கும். சுந்தர ராமசாமி ஒரு முறை சொன்னார், ‘நிஜவாழ்க்கையில் விதவைமறுமணம் இன்றும் பெரிய பிரச்சினை, இலக்கியத்தில் அது தீர்க்கப்பட்டுவிட்டது’ என்று

ஜெ
மின்னஞ்சல்

எழுதியவர் : (19-Sep-18, 3:06 am)
பார்வை : 99

மேலே