குருட்டு நம்பிக்கை

குருட்டு நம்பிக்கை

முழுமதி தன்னை முகிழ்த்துக்கொள்ள
இரவியின் ஒளிர்க்கரங்கள்
நிலவின் இமை விழிப்பில்
மூடப்பட்டு திறந்தது இரவின் கதவுகள்

எச்சட்டமும் தண்டிக்கமுடியாத
மழலையின் நடனம்போல்
இளங்காற்று

மரணப்பாம்பின் பயமறியாது
தவளையின் சன்ன சப்தமாய்
மனிதனின் துயில்

கைநழுவிச்சென்ற மீனின்
பதற்றம் இல்லாது போன
ஆழ்ந்த உறக்கம்

இரவின் கல்லறை தாண்டுமுன்
உயிர் சுருள் முடங்கிவிடாது என்ற
இல் பொருள் உவமையாய்
நித்திரை

விழித்தவுடன் பூனைக்கு
பால் வைக்கவேண்டும் என்ற
அசட்டு நம்பிக்கையோடு
உறக்கம்
கனவுகள் கலந்த இரவின்
நீள் வட்ட பாதையில் நகர்கிறது

இரவின் மடியில் எந்த
துர்சம்பவமும் நிகழாது என்று
யாரும் உணர்த்தாத ஒரு
நம்பிக்கையின் கீற்று கட்டிலில்
துயில்கிறது மானிடம்

சக்கரத்தில் அடைபட்ட காற்றாய்
மூளைத்தட்டுகளில் பதிவேற்றம் பெறாத
குருட்டு நம்பிக்கை
நாளின் ஒவ்வரு
இரவையும் சுவைத்து கடக்கிறது

தாமரைக்காதலன் போல்
தூரத்தில் இருந்து சிரிக்கிறது நம்பிக்கை

எழுதியவர் : இளவல் (21-Sep-18, 4:45 pm)
Tanglish : kurutu nambikkai
பார்வை : 155

மேலே