எருமைமேல் மழைபெய்ய வைத்தல் இலகுவானது

=====================================================
ஒரு அவசரத் தேவைக்காக
அரைநாள் விடுப்புக் கேட்கும்
நாளொன்றில் மட்டும்
வியாபாரம் சூடு பிடித்திருக்கும்
இந்த நேரத்தில்தானா என்று
தீப்பிடிக்கத் தொடங்கும்
முதலாளியின் வார்த்தையில்
ஒரு நேர சமையலுக்குத் தேவையான
சுவாலை இருப்பதைக்
கண்டுபிடித்து விடுகிறேன்,
***
யாசகனை வெள்ளிக்கிழமைகளில்
மட்டும் வரச்சொல்லிவிட்டு
கடன் கொடுக்கவேண்டியவர்களுக்கு
திகதி நீட்டிய காசோலையை நீட்டிவிட்டு
வேலைக்காரர்களை மாதத்தில்
ஒருமுறை மட்டும் சம்பளமென்று
கேட்டுவர பணித்துவிட்டு
புதிதுபுதிதாக அசையும் சொத்துக்களையும்
அசையா சொத்துக்களையும்
வளைத்துப்போட்டு வைக்கும்
முதலாளியின் இதயப் புத்தகத்தில்
கருணை பக்கக்களை மட்டும்
பேராசை கறையான்
அரித்திருக்கக் காண்கிறேன்

***
மூன்று வருடமாகியும்
உயர்த்தித் தராத
சம்பள உயர்வுபற்றி
பேச்செடுக்கும் போதெல்லாம்
வியாபார மந்தம் பற்றி
விரிவுரை நடாத்தும்
முதலாளியின் சமயோசித நாடகத்தில்
எருமை மாட்டின்மேல்
மழைபொழிய வைப்பதென்பது
எத்தனை இலகுவானது என்பதை
தெரிந்து கொள்கிறேன்
**
*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (25-Sep-18, 2:17 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 47

மேலே