ஒற்றைப் பெற்றோருக்கொரு தாலாட்டு
வேலைப்பழு ஈர்மடங்கு;
மனவழுத்தம் ஈர்மடங்கு;
காயங்கள் ஈர்மடங்கு;
கண்ணீரும் ஈர்மடங்கு;
இருக்கட்டுமே...!
பிள்ளையினன்பு ஈர்மடங்கு;
அரவணைப்பு ஈர்மடங்கு;
பெருமையும் ஈர்மடங்கு;
பேருவகை ஈர்மடங்கு;
இவை நினைத்து...
ஆர்ப்பரிக்கும் ஓர் மனமே
அலைகளின்றி நீ அடங்கு!
அவனியிதில் அனுதினமும்,
“அவன் செயலே” எல்லாமும்;
உனதுகையில் என்றிங்கு
ஏதுமில்லை; நீ உறங்கு!
வசந்தம் என்றொருசொல்
வாழ்வதனில் இல்லையின்று;
‘வங்கத்தின் கூரேறும்
மாப்பறவை போல’நைந்து;
உன்கையில் என்றிங்கு
ஏதுமில்லை; நீ உறங்கு!
~தமிழ்க்கிழவி(2018)