சின்ன சின்ன ஆசை!!!

சின்ன சின்ன ஆசை இருக்கு
என்னுடைய நெஞ்சுக்குள்ள!
உன்னுடைய கையை புடிச்சி
ஊர சுத்த ஆசை இருக்கு!

உன்னுடனே நானும் வந்தா
மேகம் மழையை தூவ வேணும்!
நீயும் நானும் சேர்ந்து போனா, ஊரு
நல்ல ஜோடினு சொல்ல வேணும்!

உன் தோளோடு நானும் சாய்ந்துக் கொண்டால்
ஆறுதல் நீயும் சொல்ல வேணும்!
உன் மடியில நானும் உறங்கும் போது
தாலாட்டு நீயே பாடிட வேண்டும்!

கடற்கரைக்குக் கூட்டிப்போயி
அமர்ந்து பேச ஆசை இருக்கு!
அலைகள் மோதும் பாதையோரம்
உன் சுவடில் நடக்க ஆசை இருக்கு!

கண்ணாலே பேசிக்கிட்டு
பாஷை மறக்க ஆசை இருக்கு!
உன் காதோரம் நானும் ஏதோ சொல்ல
உன் சின்ன சிரிப்பு போதும் எனக்கு!

முத்தமிட்டு என் மூச்சை நிறுத்து!
சத்தம் போட்டு உன் காதலை உரைத்து!
திட்டிக்கிட்டு நான் ஏதோ சொன்னா
என்ன கட்டிக்கிட்டு நீ அழத்தான் வேணும்!

செல்ல முத்தம் ஒண்ணு கேட்டா
எண்ணமுடியா முத்தம் வேண்டும்!
என் ஆசை எல்லாம் உன்னிடம் சொன்னா
உன் சிரிச்ச முகத்தில் சம்மதம் வேண்டும்!

என் வாய்க்குள்ளே நானும் ஏதோ முணங்க
உன் வாயால் அதை சொல்ல வேண்டும்!
உன்னோடு நான் செல்லும் பாதை
இன்னும் கொஞ்சம் நீளவேண்டும்!

சின்ன பொய் நான் சொன்னால் கூட
உனக்கு புரிந்த போதும் ரசிக்க வேண்டும்!
நான் செய்யும் தவறு யாவும்
அன்பால் நீயும் திருத்திட வேண்டும்!

காசு பணம் வேண்டாம் எனக்கு!
நீ கூட இருந்தா போதும் எனக்கு!
உன்ன திருமணம் செய்ய ஆசை இருக்கு!
நீ சம்மதிச்சா போதும் எனக்கு!

உன்னோடு பேசிக்கிட்டு
உலகம் மறக்க ஆசை இருக்கு!
என்னோடு நீ பேசும் போது
அதை ரசிக்கும் சுகம் போதும் எனக்கு!

உன்னை காணாது நானும் ஏங்கும் நேரம்!
காணாமல் தானே போக வேண்டும்!
உன்னோடு நானும் இருக்கும் போது
நேரம் சற்று நிற்க வேண்டும்!

சின்ன சின்ன சண்டை வேண்டும்
நீயே அதை போட வேண்டும்!
நானும் கொஞ்சம் சத்தம் போட்டா
உன் சிரிப்பால் என்னை மயக்க வேண்டும்!

சுடிதார் அணியும் பெண்ணே நீயும்
புடவை கட்ட ஆசை எனக்கு!
உன் பின்னல் போட்ட தலையில் பெண்ணே
மலரை சூட்ட ஆசை எனக்கு!

வளைந்த புருவம் இரண்டின் நடுவே
குங்குமப் பொட்டு நான் வைக்க வேண்டும்!
உன் மார்பு கூட்டு மத்தியில் பெண்ணே!
என் தாலிக்கயிறு தொங்க வேண்டும்!

வாழ்ந்த வாழக்கைப் போதுமென்று
எண்ணம் தானே தோன்ற வேண்டும்!
மீண்டும் ஒரு ஜென்மம் இருந்தால்
அதிலும் நீயே வேண்டும் எனக்கு!

குழந்தை நானும் வேண்டுமென்றால்
சம்மதம் நீயும் தந்திட வேணும்!
குழந்தை ஒன்று போதாதென்று
உன் ஆசையை நீயும் சொல்லிட வேண்டும்!

சொத்துசனம் வேண்டாம் பெண்ணே
கூரைவீடு போதும் எனக்கு!
என் கூட நீயும் இருந்தால் பெண்ணே!
வேற சொத்து எனக்கு எதற்கு!

என் ஆயுள் காலம் முடியும் முன்பு
உன் ஆயுள் தானே முடிய வேண்டும்!
உன் மூச்சு நின்ற மறுநொடி பெண்ணே
என் மூச்சும் தானே நின்று போகும்!

நீ இறந்த பிறகுதான் நான் இறப்பேன் என்றால்
அரக்க கணவன் நானில்லை!
நீ சாகும் போது சுமங்கலியாய் போக
நான் செய்த யாகம்!

என் நெஞ்சில் உள்ள ஆசையாவும்
உன் காதில் தானே ஓதிவிட்டேன்!
என்ன பதில் நீ சொல்வாய் என்று
ஆவலோடு காத்திருக்கிறேன்!!!

எழுதியவர் : இரா. உமாசங்கர் (16-Oct-18, 10:35 am)
சேர்த்தது : இராஉமாசங்கர்
பார்வை : 323

மேலே