மீட்டெடுக்கப்படுகிறது பல அசகியப் புரட்டுகள்

மீ டூ.... மீ டூ..... மீ டூ
மீட்டெடுக்கப்படுகிறது பல அசகியப் புரட்டு

சினிமா முதல் சித்தாள் வரையும்
சின்னத்திரை முதல் செய்தி நிருபர்வரையும்
வைரலாய் பரவி பல வைரங்களை கலக்கி
ஊடகங்களில் ஊதி வெடிக்கிறது

சரித்திர நாயகர் சிலர் சபல சரசங்களுக்கு
சீதைகள் பலபேர் சந்தர்ப்பத்தில் சிக்குண்டு
சகித்து சரணாகி திரௌபதியான சம்பவங்களால்
சுவாசத் துளையில் மாமிச புலைவாடை வீசுகிறது

பெண்மைக்கு...
பாலியல் துன்புறுத்தல் இல்லாத துறை
பாடையாகி அடங்கும் பிணவறை என்றால்....
உறைய வைக்கிறது இதய அறையை
இழிகறைகள் அங்கும் பிணத்துடன் புணருமாம்

அறைக்குள் அடங்கிய அத்துமீறியத் தீண்டல்களை
திரையில் அம்பலமாக்கும் அங்கனையர் ஆவேசம்
அகலிகை உயிர்தெழுந்து வெகுண்டு கனன்று
ஆட்கொண்ட துணிகர அக்கினிப் பிரவேசம்

அச்சம் தவிர்த்திடு எச்சங்களை எதிர்த்திடு
இச்சையில் இம்சைகள் கொச்சையாய் நடந்தால்
நச்சென்று அப்போதே நையப்புடைத்திடு
இச்சகம் அறிந்திட அன்றே முழங்கிடு

நாசக நூல்களுக்கு நலிந்து வழிவிட்டு
நாளைபின் மீ டூவில் புலம்பி அழுவது
தற்காலிகமாய் பழுதுகளை அச்சுறுத்தி தடுத்தாலும்
தற்காப்பும் தன்னம்பிக்கையுமே பெண்மையை காக்கும்...!

கவிதாயினி அமுதா பொற்கொடி

எழுதியவர் : வை.அமுதா (19-Oct-18, 10:47 am)
பார்வை : 46

மேலே