நல்வினை தீ’ர்’விடத்து நிற்குமாம் தீது – நாலடியார் 51
‘ள’ ‘வ’ ’ள’ இடையின எதுகைகள், ‘ய்’ ‘ர்’ ஆசிடையிட்ட எதுகையமைந்த நேரிசை வெண்பா
வி’ள’க்குப் புகஇருள் மாய்ந்தாங் கொருவன்
த’வ’த்தின்முன் நில்லாதாம் பாவம் – வி’ள’க்குநெய்
தே’ய்’விடத்துச் சென்றிருள் பாய்ந்தாங்கு நல்வினை
தீ’ர்’விடத்து நிற்குமாம் தீது. 51
- துறவு, நாலடியார்
பொருளுரை:
ஓரிடத்தில் விளக்கொளி வர அங்கே இருந்த இருட்டு நீங்கினாற்போல, ஒருவனது தவமுயற்சியின் முன் அவன் அதற்குமுன் செய்த தீவினை நில்லாது; விளக்கின் நெய் குறையுமிடத்தில் இருட்டு மீண்டும் போய்ப் பரவினாற்போல, நல்வினை நீங்குமிடத்தில் தீவினை சென்று சூழ்ந்து நிற்கும்.
கருத்து:
இடைவிடாமல் தவஞ் செய்யவேண்டும்.
விளக்கம்:
விளக்கென்பது தவம்: விளக்கெரிவதற்குக் காரணமான நெய்யென்பது, தவம் நிகழ்தற்குக் காரணமான நல்வினை என்று கொள்க. முன் நல்வினையினாலேயே தவம் நிகழுமென்பது, "தவத்தால் தவம் செய்யாதார்"1 என்று முன் வந்தமையின் பெறப்படும்.
புக மாய்ந்தாங்கு எனவும் தேய்விடத்துப் பாய்ந்தாங்கு எனவும் வருதலால், தவம் இடை விடாமாற் செய்யப்படும் என்பது பெறப்பட்டது. இஃது உவமையணி.