இன்னாமை நோக்கி மனையாறு அடைவொழிந்தார் ஆன்றமைந்தார் – நாலடியார் 54
நேரிசை வெண்பா
துன்பம் பலநாள் உழந்தும் ஒருநாளை
இன்பமே காமுறுவர் ஏழையார் - இன்பம்
இடைதெரிந் தின்னாமை நோக்கி மனையா(று)
அடைவொழிந்தார் ஆன்றமைந் தார். 54
- துறவு, நாலடியார்
பொருளுரை:
அறிவிலார் பல நாட்கள் துன்பத்தால் வருந்தியும், சிறிதுபோழ்து நுகரும் ஒரு நாளைய இன்பத்தையே விரும்புவார்;
கல்வி கேள்விகளால் நிறைந்து அதற்குத் தக்கபடி அடங்கி யொழுகும் பெரியோர் இன்பம் அங்ஙனம் இடையே சிறிது உளதாதல் தெரிந்து துன்பத்தின் மிகுதியை அறிந்து இல் வாழ்க்கையின் வழியில் சார்ந்து நிற்பதை நீங்கினார்.
கருத்து:
உலகத்திற் பல துன்பங்களினிடையிற் சிறிது இன்பமுண்டாதலின், அந் நிலை தெரிந்து தவம் முயலுதல் வேண்டும்.
விளக்கம்:
‘நுண்ணுணர்வின்மை வறுமை அஃதுடைமை செல்வம்,'1 ஆதலின் இங்கே ஏழையார் என்றது அறிவில் வறுமையுடையாரை.
மனையாறு அடைவொழிந்தார் என்றது, மேன்மேலும் இளமை துய்த்தலிற் பற்றுள்ளம் நீங்கினாரென்றற்கு.