என்றென்றும் வாழட்டும்

என்றென்றும் வாழட்டும்
****************************************

கிள்ளையும் மழலையும் செங்கீரைப் பருவமும்
பாவையின் அழகும் பெதும்பையின் எழிலும்
பெண்ணின் நாணமும் மஞ்சள் குங்குமமும்
மலரும் வண்டுமாய் நேர்கின்ற காதலும்
தலைவனும் தலைவியும் சேர்ந்திடும் மஞ்சமும்
கெஞ்சிடும் கொஞ்சலில் மலரும் மதுரமும்
மேல்திசை வாடையும் தென்றலின் சுகமும்
தேனும் பாலும் தெவிட்டாத நிலையும்
ஊடலும் கூடலும் கூடலில் இன்பமும்
பிள்ளையைத் தாயவள் அணைத்திடும் மகிழ்ச்சியும்
அளவான காமமும் அளவில்லா ஈகையும்
பாசமும் நேசமும் பிளவில்லா நட்பும்
கற்றபடி நடப்பும் மெய்யும் வாக்கும்
தண் நிறை நெஞ்சமும் மாசற்ற செய்கையும்
ராகமும் தாளமும் இணைந்திட்ட கீதமும்
மொழியில் தமிழும் தமிழின் சொற்களும்
சொற்களின் நடையில் சொல்லிடும் கவியும்
கவியிடும் கவிஞனின் கற்பனை வளமும்
கவிதையின் அழகும் அதனூடே வெண்பாவும்
இன்னபிற இன்னபிற இதுதவிர இன்னபிற
என்றென்றும் வாழட்டும் தமிழ்ப்பண்பு மலரட்டும்

எழுதியவர் : சக்கரைவாசன் (19-Nov-18, 9:54 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 85

மேலே