மீண்டு வா
மூன்று நாட்களுக்கு முன்பே
புயல் எச்சரிக்கை.....
புரிந்திருக்குமா அந்தக் குருவிக்கு....
வண்டி வண்டியாய் ஆள் வந்து
ஆபத்து பகுதியென அழைத்து சென்றார்களே...
அழைத்தார்களா அந்த குருவியையும்...
பள்ளியிலே பாதுகாப்பாய் படுத்துறங்க இடம் ஒன்றை கொடுத்தார்களா அந்தக் குருவிக்கு......
பத்து ஒன்பது எட்டு ஏழு என
புயல் வரும் நேரத்தை நேரலையில் ஒளிபரப்ப
பார்த்திருக்குமா அந்தக் குருவி....
வீட்டுக்குள்ளே பூட்டி பத்திரமாக இருக்கச் சொன்னார்களே
எந்த கூட்டிற்கு பூட்டிருக்கு....
பத்திரமாய் இருக்குமா அந்தக் குருவி...
எப்போதும் காலையில் கவி பாடும் குயில் அன்று மட்டும் ஏதும் பாடாமல் அமைதியாய்...
துக்கம் தொண்டையை அடைக்க....
புயலென்ன மனிதனுக்கு மட்டுமா....
ஆடிய மரத்தினில் குயில் கூடு இல்லையா....
வீசிய காற்றில் குயில் இறக்கவில்லையா.....
இட்ட முட்டையில் மிச்சம் ஏதும் இல்லையே...
பாடி பறந்த சொந்தத்தில் பாதிகூட மிச்சமில்லையே....
பத்து இலட்சம் குருவிக்கு கிடைக்குமா...?
நிவாரணங்களும் உதவிகளும் குருவிகளுக்கு உண்டா...?
மனிதன் தலைகுனிந்து
விழுந்த மரத்தைக்
கண்டு கொண்டிருந்தான்...
நொந்து கொண்டிருந்தான்....
குயிலோ...
நின்ற மரத்தை நிமிர்ந்து பார்த்து கொண்டிருந்தது....
தனக்கான ஒரு மரத்தை தேடி பார்த்துக் கொண்டிருந்தது...
மனிதன் மறியல் செய்த நேரத்தில்
மரத்தில் ஏதோ பொறுக்கிக் கொண்டிருந்தது
ஒரு வாரத்தில்
புது மரத்தில்
புதிதாய் கட்டிய கூட்டில்
மீண்டும் இசைக்க தொடங்கியது அந்த குயில்....
மனிதன் இன்னும் மீளாமல்....
விழுந்த தென்னையின் மட்டைகளை மடித்தாலே போதும்
குடிசைகளின் கூரைக்கு....
தார்ப்பாய் எதற்கு....?
விழுந்த மரத்தில் விறகுகள் இல்லையா உன் அடுப்புக்கு....?
தென்னஞ் சோற்றின் ருசி மறந்துவிட்டதா...?
குளிப்பதற்கு குளங்களும் ஆறுகளும் பயன்படுத்தினாய் குடிப்பதற்கு மழை நீரை ஏன் மறந்தாய்....?
பாக்கெட் தண்ணீர் எதற்கு?
உன் வாழ்க்கையில் துக்கம் இல்லை
புயலால் உனக்கு கஷ்டம் இல்லை
என நான் கூறவில்லை....
கஷ்டம்தான் துக்கம் தான்....
வெட்டவெளியில் புயலை எதிர்கொண்ட குருவிற்கு உள்ள துணிச்சல் கூட உனக்கு ஏன் இல்லை...?
உதவி என்ற பெயரில்
செல்பி எடுத்துக் கொடுக்கும்
மனிதாபிமான மனிதர்களிடம் கையேந்தி நிற்கிறாயே....
உன் கைய்யை நம்பு....
நம்பிக்கையை கையில் எடு...
தென்னங்கீற்றை கிழி...
கூறை வேய்...
உன் குடிசையை புலரமை....
புது கூடு கட்டு....
வெள்ளாமை இல்லை என்றாலும்
வேட்டியை மடித்து கட்டும் சிங்கமாய் நிமிர்....
இழப்பு ஒன்றும் நமக்குப் புதிதல்ல
பிழைப்பு பிழைக்க வழி தெரியாதவர் ஒன்றும் நாம் அல்ல...
விழுந்ததை எழ வைப்போம்...