கட்டிப் பிடித்து காயங்கள் ஆற்றுகிறாய்

முகத்தைப் பார்த்ததில்லை.
அகத்தைத் தொட்டதில்லை.
நெருங்கிப் படுத்ததில்லை.
இருந்தும் என் நெஞ்சம்
உன்னை மறக்கவில்லை.

தினமும் நாலு வார்த்தை உரைத்ததில்லை.
நானோ நாணத்தோடு உணவு அளித்ததில்லை.
இருந்தும் என் உள்ளம் உன்னை
நினைக்க மறந்ததில்லை.

உன் பக்கம் நான் வந்ததில்லை
என் வெட்கம் நீ கண்டதில்லை.
இருந்தும் உன் மார்பு சொர்க்கம்
என்று நான் எண்ணாத நாள் இல்லை.

வாக்கு விவாதம் வந்ததில்லை.
தக்கம் புரிந்ததில்லை
வார்த்தைகள் அதிகம் பரிமாறியதில்லை.
இருந்தும் உன் குரல் ஓசை கேட்க
நான் துடிக்காத நாள் இல்லை.

புரியாத பிரியம் பெரும் தொல்லை.
புரியவைக்கவும் முடியவில்லை.
இறுதி வரை உன் உறவு நிலை
என்பது உறுதியில்லை.
இருந்தும் என்னால் என் இதயத்தை
விட்டு உன்னை அகற்ற இயலவில்லை .

நானோ இன்று இயலாமையின் எல்லை
ஆனால் ஒன்று மட்டும் உண்மை
கனவில் வந்து நீ கட்டிப் பிடித்து காயங்கள்
ஆற்றுகிறாய் ......!

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (16-Dec-18, 7:44 am)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 111

மேலே