தாய் மனம்
அன்பு மகளே
என் ஆசை மகளே
வேலை பார்க்க
வெளியூர் போறாயோ..
போய்வா மகளே பத்திரமாய்
போகும் முன் நான் சொல்வதைக்
கொஞ்சம் கேளாயோ..
தெரியாத ஊருக்கு
புதியதோர் பயணம்
மறந்தும் உறங்கிவிடாதே
இறங்கும் இடம் கடந்துவிடும்..
நகரச் சூழல்
உன்னை ஈர்த்தே தீரும்
நல்லொழுக்கம் கற்றதை
ஒருபோதும் மறந்துவிடாதே..
தொலைவில் இருக்கும் உன்னை
தொடர்பு கொள்ளவே தந்தேன் கைபேசி
மறந்தும் அதில் நீ தொலைந்துவிடாதே..
கன்னி மனம் அலைபாயும்
காதல் அலை மோதக்கூடும்
உன் கவனத்தைச் சிதறாதே..
உன் கனவென்றும் மறவாதே..
சரியான நேரத்தில் விழித்துக் கொள்ளடி..
சாலை கடப்பதிலும் கவனம் கொள்ளடி..
பசித்த நேரத்தில் உணவு கொள்ளடி..
களைத்த நேரத்தில் உறங்கச் செல்லடி..
அழகிய ஆடை அணிந்து கொள்ளடி..
அது உனக்கு ஆபத்தில்லாமல் பார்த்துக் கொள்ளடி..
நான் சொல்வதனைத்தும்
உனக்கு வேடிக்கையாய் தெரிந்தாலும்
உனக்காக வேண்டிக் கொண்டேயிருப்பேன்
இறைவனிடம்..