நீலாம்பரியின் நாக்கு
இப்படித்தான் என்பதில்
எந்த நிச்சயமும் இல்லாதபோது
இந்த கவிதையை படிக்கலாம்.
ஒரு நகரம் கிராமத்தை
மின்மினி கொண்டு அளப்பதை போல.
உங்களை விசை கொண்டு
அழுத்தும் அர்த்தங்களோ
நீங்கள் நியமிக்கவேண்டிய
கவனத்தின் திருகு ஓட்டைகளோ
இதில் இல்லை என்பதால்
நீலத்தில் சபிக்கப்பட்ட உங்கள்
குளிர் கண்ணாடி அணிந்து
முன் வரலாம் படிக்க.
வாசிக்க லகுவானது...
வாசிக்கும்போது
உங்களின் பரமவைரியின் நினைவும்
கொதித்துப்போன இந்த நாளும்
சற்று மறக்கக்கூடும்
என்பதற்காக கூட இன்னும்
வாசிக்கலாம் ஒரு முறை.