ஓங்குசினம் காத்துக் கொள்ளும் குணமே குணமென்க – நன்னெறி 8
நேரிசை வெண்பா
உள்ளம் கவர்ந்தெழுந்(து) ஓங்கு சினம்காத்துக்
கொள்ளும் குணமே குணமென்க - வெள்ளம்
தடுத்தல் அரிதோ, தடம்கரைதான் பேர்த்து
விடுத்தல் அரிதோ விளம்பு? 8 - நன்னெறி
பொருள்:
மனத்தைத் தன் வயத்ததாக்கிக் கொண்டு எழுந்து வளர்கின்ற கோபத்தை அடக்கிக் கொள்கின்ற குணமே அருமையாகிய குணம் என்று அறியக்கடவாய்.
அதுபோல, பெருகி வருகின்ற வெள்ளத்தைக் கரைகட்டித் தடுத்தல் அரியதா, முன் கட்டப்பட்டிருந்த பெரிய கரையை உடைத்து அதனுள் அடங்கியிருந்த வெள்ளத்தைப் புறத்திலே செல்ல விடுதல் அரியதா என்று நீ சொல்வாயாக என்று சிவப்பிரகாச சுவாமிகள் அறிவுறுத்துகிறார்.