உழைத்தவன் ஒதுங்கணும் பயந்தபடி

பணத்தை படைத்தவன் பலம் பெற்ற ஞானி - அதை
பலவற்றுக்கு பயன்படுத்தியவன் சூத்திரதாரி
பாடுபட்டு சேர்ந்தவன் பாவப்பட்ட ஜாதி - அதில்
பங்கு போட்டு கொழுத்தவன் வித்தகதாரி

வயிரொட்டி சேர்த்தான் ஒரு விவசாயி - அதில்
வரையரை வைத்தான் பெரு வியாபாரி
சரிநிகர் பாதியை தமதென எடுத்து
சேர்த்தவனுக்கு கொடுத்தான் திருவோட்டின் மீதி …

கருக்கலில் கண்ட கரும்பாம்பை விடவும்
கடைத்தெருவினில் கண்டவன் கடும் பயம் தந்தான்
உழைத்தவன் உடலோ ஊசிபோல் இருக்க - இவன்
காட்டு பொருளை விற்றவன் கனமாய் இருந்தான்

தினையளவேணும் பொருளை செய்யாதவனிடம்
அணி அணியாய் பணம் சேருவதெப்படி
பணத்தை படைத்து கணித்தவன் எண்ணப்படி
உழைத்தவன் ஒதுங்கியே இருக்கணும் பயந்தபடி

உலகம் உருகி அழியும் வரையில் - இந்த
உன்னத நிலையே தொடரும் பாரீர்.
- - நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (11-Jan-19, 7:11 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 77

மேலே