ஹைக்கூ 500 நூல் ஆசிரியர் கவிஞர் இரா இரவி நூல் விமர்சனம் திருச்சி சந்தர்,

ஹைக்கூ 500 ...

நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !

நூல் விமர்சனம் : திருச்சி சந்தர்,

நிறுவனர், முத்தமிழ் அறக்கட்டளை, பதிவு எண் : 969, 10, ராமமூர்த்தி ரோடு, சின்ன சொக்கிகுளம்,
மதுரை-625 002. தொலைபேசி : 0452 2533 524,
செல்லிட பேசி : 94437 43524



வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு,

தியாகராய நகர்,
சென்னை-600 017. தொலைபேசி : 044 24342810, 24310769

பக்கம் : 132, விலை : ரூ. 100



******

அன்பு நண்பரே! உம் கவிதைகளை. என் அகத்தில் புகுத்திக் கொண்டதால் நான் – அகநானூறு ; புறத்தே விமர்சனம் எழுதுவதால் நான் – புறநானூறு ; என் விமர்சனத்திற்கு வழிவகுத்தால் நீர், “ஹைக்கூ ஐநூறு”!

படம் பார்த்து சிறுவர்கள் கதை சொன்ன காலம் மாறியது. கவிதை படித்து படம் வரைய வைத்த உம் திறமையைப் பாராட்டுகிறேன்.

“கொடிது கொடிது
வறுமை கொடிது
வாடிடும் சிறுமி”

எங்களுக்கும் தெரியும், உங்கள் வறுமையால் தானே எங்கள் வாழ்வு செழிக்கிறது. உங்கள் வறுமையை போக்கத்தான் 1947 ஆகஸ்ட் 15 முதல் நாங்கள் எங்கள் கையில் பல வண்ணங்களில் கொடியேந்தி “கொடி-இது” என்று கோஷம் போடுகிறோமென கட்சித்தலைவர்கள் கூறுகிறார்கள்.

“வருந்தவில்லை இழந்தவைகளுக்கு
மகிழ்கிறோம் இருப்பவைகளுக்கு
இனிக்கிறது வாழ்க்கை”

இழந்தவைகளுக்கு வருந்தவில்லை, இருப்பவை இருக்கையில் இருப்பதால், இன்னமும் எங்கள் வாழ்வு பசுமையாக, இனிமையாகவே இருக்கிறது. இலைகள் சில உதிர்ந்தாலும், எஞ்சிய இலைகளால் வாழ்ந்து கொண்டுதானே இருக்கிறோம். ‘அரச’மரத்தின் ஆணவப் பேச்சிது.

“தன்னல மில்லாத
ஓரே உறவு
தாய்”

ஒவ்வொருவரும் தொப்புள் கொடியை தொட்டுப் பாருங்கள், தாய்மையின் வாய்மை புரியும்.

“இந்தக் கொடி போதுமா
இன்னும் கொஞ்சம்
வேணுமா?”

கொம்பு சீவிக்கொண்டு திமிர் கொண்ட நிமிர் நடை போட்ம் மனிதக் காளையர்களுக்கு கேட்க வேண்டிய கேள்வி.

“விதைத்தால் மட்டும்
போதாது
நீர் ஊற்ற வேண்டும்”

மரம் வைத்தவன் நீர் ஊற்றுவான். பலன் மட்டும் தான் எங்கள் சொந்தம். நீர் ஊற்ற நீர் இருக்கும்போது, நாங்கள் எதற்கு? சுயநலத்தின் பொதுநலக் கேள்வி.

“அறிந்திடுங்கள்
மரம் வளர்ப்பு
அறம் வளர்ப்பு!”

கஜா புயல் போன்ற இயற்கையின் சீற்றத்திற்கு மரம் அழலாம்! மரத்துப்போன அரசு, மனிதன் அழமுடியுமா? எங்களுக்கு அரம் தெரியும், அறம் தெரியாது என்று அரியணை கூறுகிறது.

“காளைகள் சேர்ந்து வந்தால்
கிட்ட வர நடுங்கும்
புலி”

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, தேர்தல் நெருங்கும் போது கட்சிகளின் ஒற்றுமை வாக்குறுதி.

“அவளின் கொலுசொலிக்கு
ஈடான இசை
உலகில் இல்லை””

காதல் இளமை ராஜாக்கள் தான், இனி திரையுலகீன் இசை அமைப்பாளர்கள்.”P”

“இன்று இல்லை
ஆடுகள் கிடை
போடும் பழக்கம்”"

ஆட்டுகறி தின்ற மனிதர்கள் வயக்காட்டில் காலைக்கடன் கழிக்கும் போது, ஆட்டுகள் கிடை எதற்கு, காலத்திற்கேற்ப ஒரு மாற்றம் வேண்டாமா!

“வெளிநாட்டவர்களும்
வியந்து பார்க்கும்
தப்பாட்டம்””””

தப்பாட்டம், தப்பு ஆட்டம், நாங்கள் அரைகுறை ஆடையோடு போடும் குத்தாட்டத்திற்கு ஈடாகுமா? என்று திரையுலகம் கேட்கிறது. இது அதுபோலத்தான் என்கிறார்களோ?!

“மழை வெள்ளத்திலும்
மெய்ப்பித்தார்
விலங்கு நேயம்"

மனிதநேயம் உணர்ந்தவர்கள் புனிதயாகமாக நினைக்கிறார்க்ள். சில மனித விலங்குகள் அறியட்டும் உங்கள் அறநெறி!

“பிச்சை எடுக்கும் நிலையை
மாற்றவில்லை கடவுள்
கோயில் வாசலில் கூட்டம்”””

பக்தர்களே!­ “நான் மட்டும் நன்றாக வாழ வேண்டுமென்று””” சுயநலமாக கடவுளிடமே பிச்சை கேட்கும்போது, வெளியில் பிச்சைக்காரர் கூட்டம் குறையாது.

“அநீதி
நீதி தேவதைக்கே
நிதியா!”””

நீதிமன்றச் சுவரில் மாட்டப்பட வேண்டிய வாசகம் : பிறகு தான் “வாய்மை வெல்லும்!”” விழி திறந்தால் விழி பிறக்கும்

“தன் பசி மறந்து
ஆட்டுக் குட்டியின் பசியாறல்
ஈசிக்கும் குழந்தை””

குழந்தையாகிய இருந்துவிடலாம், எதற்காக மனிதனுக்கு வளர்ச்சியைக் கொடுத்தாyaள்?

“வயலுக்குள் வீடு
வாசலில் தவமிருக்கும்
தென்றல்””

பேராசை அறியுமா இந்தப் பேரின்பம். அடுக்குமாடி வீட்டில் குடியிருந்தால் “தென்றல் வந்து உன்னைத் தொடாது””

“பலம் என்பது
உடலால் அல்ல
உள்ளத்தில்"

உண்மை தான்! எதையெடுத்தாலும் கள்ளத்தால் பயன்பெறுவோர். அதுதானே பலம் என்கிறார்களே! முற்பகல் விளையாட்டு பிற்பகல் வினையாகும். பயன் எப்போதுமே பயமறியாது!

“தேசத்திற்கு சோறு போட்ட
உழவனைக்
கண்டுகொள்ளவில்லை தேசம்"

ஊறுக்கெல்லாம் சோறு போடும் உழவன் ஒரு கவளம், சோற்றுக்கு ஏந்தும் இலைதான் “தேசாபிமானமோ!"

“கூட்டை அழித்து
குடும்பத்தை சிதைத்தனர்
மரத்தை வெட்டி!"

கூடு கட்டுது, குருவி குடும்பம் காக்க! இதுதான் பகுத்தறிவு! குடும்பக்-கூட்டைக் கலைக்கும் மனிதன் பகுத்தறிவாளனா? மரத்தை வெட்டும் மரமண்டைகளை எப்படி அழைப்பது?

“இனி அடிவிழும்
ஆற்றில் கை வைத்தால்
குளிர்பான நிறுவனத்திற்கு"

பின்னால் அடி விழும் என்றுதானே முன்னால் நாங்கள் அடிக்கல்லே நாட்டி விட்டோம் என்பவர்களுக்கு, அடிமேல் அடி வைத்தால் அம்மியும் நகருமென அறிவுரைக்கிறதோ மூவரிகள்!

“நதிகள் இணைந்தால்
இருக்காது
உழவன் தற்கொலை"

அநீதிகள் அழிந்தால் நதிகள் இணைந்துவிடும். ஆளப்பிறந்ததே அநீதியில் தானே!

“காட்டு விலங்குப்பட்டியில் சேர்ந்த
காட்டான்களே பாருங்கள்
காளை வீட்டு விலங்கு!

காட்டான்கள் தானே நாட்டை நாட்டமை செய்கிறார்கள்! மனித விலங்குக்குத் தெரியுமா! எது விலங்கென்று,

வீரத்தை உலகிற்குக்
கற்றுத் தந்தவன்
தமிழன்!

உலகாளப் பிறந்த வீரத்தமிழா! உலக்கை இடிக்கு பயப்படாது எழுந்து நில்! உலகை உன் கையில் அடங்கும்.

“தமிழனின் வீரத்தைப்
பறைசாற்றும்
அடையாளம்!"

அடையாளத்தை அடுத்த மாநிலத்துக்கு அடையாளம் தெரியாமல் விற்கும் விவேகமற்றவர்களே! இனியாவது வீரத்தை விற்காதே!

“முற்றிலும் உண்மை
உழுதவன் கணக்குப் பார்த்தால்
மிஞ்சவில்லை ஒன்றும்!"

உழுதவனுக்கு மிஞ்சாதது, உழுததை வாங்குவோருக்கு மிஞ்சுகிறதே!

“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் – மற்றெல்லாம்
தொழுதுண்டு பின் செல்வார்"

என்னும் வள்ளுவர் வாக்கு பொய்க்காது. அந்நாள் நன்னாள்! அது எந்நாள்?

“கடவுளுக்காக இல்லாவிடினும்
இவருக்காக வாங்குங்கள்
மண் விளக்கு"

உடல் ஊனமானாலும் உள்ளம் ஊனமில்லை, ஊனமில்லா உள்ளத்தை கடப்பன் தான் (கட-உள்) கடவுள்!

“சலிப்பதே இல்லை
எத்தனை முறை பார்த்தாலும்
யானை சிலவு என்னவள்!"

எப்படி சலிப்பு வரும். காலையில் வேலைக்கு சென்று விட்டு இரவில் வீடு திரும்பும் தன் பெருத்த கணவனை பார்த்து விட்டு நிலவைப் பார்க்கும் பெண்களுக்கு!

“காளைகள் மிரண்டால்
காணாமல் போகும்
தடைச் சட்டம்!"

சாதுவான மக்கள் திரண்டு மிரண்டால் சாதுவான சட்டம் தன் சூதறிந்து விலகிக் கொள்ளுமே!

“மலரும் நினைவை
மன்னித்தது
கிணற்றுக் குவியல்!"

கிணற்றுத் தவளை போன்றோருக்கு, இப்படியொரு மலரும் நினைவு வருமா? “கிணற்றைக் காணோம்" (வடிவேலுவின் உண்மை நகைச்சுவை).

“வல்லவனுக்கு
தீக்குச்சியும்
ஆயுதம்!"

இப்போதெல்லாம் பஸ் எரிப்பு போராட்டத்தைத் தூண்டிவிடும் வல்லவரான சாதிக்கட்சி தலைவர்களுக்கு தீக்குச்சி தானே ஆயுதம்.

“யாராக இருந்தாலும்

தலைவணங்க வேண்டும்
ஏழையின் குடிசை"

தேர்தல் நேரத்தில் ஓட்டுக் கேட்டு வரும் தலைவர்களுக்கு இந்த மூன்று வரிகள் தாரகமந்திரம். குனிந்து நிமிரந்தால் தானே நாற்காலியில் அமரமுடியும்.

பாரதி பாடல் படி
ஓடி விளையாடும்
சிறுவர்கள்.

ஓடியும் விளையாடு பாப்பா! நீ கூடியும் விளையாடு பாப்பா! (அரசியல் சிறுவர்களல்ல, சிறுபான்மை கட்சியினர்).

“இன்னும்
விடியவில்லை
விவசாயி வாழ்க்கை!"

விடிவுமில்லை முடிவும் தெரியாமல் நல் வாழ்க்கைக்காக காலம் முழுவதும் போராடுபவன் தானே விவசாயி.

“இனிமையானவை
இனி கிட்டாதவை
அந்த நாட்கள்"

அந்த நாள் ஞாபகம் நெஞ்சினிலே நிலைக்குமானால் நீ என்றும் இளைஞனே!

"உழைப்பாளியின் கைப்பிடியில்
ஓய்வு அறியாத
சூரியன்."

ஓய்வில்லாத உழைப்பாளி தான் சூரியன். அனைவர் எண்ணத்திலும் இது பிடிபட்டு விட்டால், நாடு நலம் பெறும்.

“சுறுசுறுப்பைப்
போதித்துப் படிக்கும்
பறவை!"

பணம் கிடைக்கும் இடத்தைச் சொல்லுங்கள், எல்லோருமே பறப்பார்கள்!

“மறக்கவில்லை அடை காத்ததோடு
வளரும் வகை காக்கும்
தாய்க்கோழி!"

நாகரீக உலகில் தாய்மை தாதிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எனவே தான் வளர்த்த கடா மார்பில் பாய்கிறது.

“செல்வில்லாத
இசைக்கருவி
சிறுவர்கள் வசம்"

இப்படிப்பட்ட சிறுவர்களை ஏனோ சிலர் விசிலடித்தான் குஞ்சுகள் என்றழைக்கிறார்கள். இசைஞானி என்றறியாது,

“யாரும் உண்னமுடியாது
பசித்தால்
தங்க ரொட்டி!"

பார்த்தாலே பசி தீரும் என்கிறார்களே சிக்கனச் செம்மல்கள்.

“பொன்னகையை விடு
புன்னகை சிறப்பு
மெய்ப்பிப்பு"

பெண்களிடம் மட்டும் சொல்லக்கூடாத வாசகமிது.

"ஊடகம் தகர்த்து
காதலரை இணைக்கும்
குடை"

ஊடலுக்கு மட்டுமல்ல, கூடலையும் மறைக்கும் கொடை தான் குடை.

“மண்ணிற்கு வந்த இலைக்கு
சிம்மாசனம் தந்தது
கல்!"

இலையால் அமைந்த சிம்மாசனம் கல் போன்றது, புரிந்தவருக்குப் புரியும்!

“வழக்கொழிந்து விட்டது
கோல மிடுவதில்லை
புதுமைப் பெண்கள்"

காலத்தின் கோலம், காதல்வயப்பட்டு காலால் கோலம் போடுகிறார்களே... போதாதா?

“குடிசை வீட்டில்
வாழும்
எதிர்காலக் கோபுரம்"

ராம்ராஜ்யம் என்ற காமராஜ்யம் – கனவாகிப் போனதே!

“ஊட்டுகிறாள்
அன்னையைப் போல
சிறுமி"

விளையும் பயில் முளையிலே!

“கட்டத் தந்த மனம்
கட்டாமல் சுவாகா
பாலம்?"

கள்ளப் பணம் இருக்கும் இடம் ஓடி சுரங்கப் பாலம் கட்ட பணம் செல்வாகி விட்டதோ!

“ஒரு சாட்டை
இரண்டு பம்பரங்கள்
மனம் இருந்தால் சுற்றலாம்!":

மனைவி – கள்ளக் காதலி இருவரையும் கழற்றி வாழும் வித்தகர்களுக்கு, இது பெரிய விந்தையல்ல.

நகரத்தில் தேய்கிறது
கிராமத்தில் வாழ்கிறது
நேயம்.

நேயம் தேயாமலிருக்க, நகரம் கிராமத்திற்கு நகரக்கூடாது.

“இப்படியே இருந்துவிட்டால்
துன்பம் இல்லை
வாழ்வில்"

ஐந்து ஆண்டுகள் முடிவில்லாமல் இருந்தால் பதவியில் இருப்போருக்கு துன்பமே இல்லை தான்!

“எறும்பு ஊறக் கல்லும் தேயும்
தேயவில்லை
வெற்றிலை!"

கல் வேண்டுமானால் தேயலாம். பல்லும் தேய்கிறதே, வெற்றிலை போடுவோர்க்கு, வெற்று இலையைக் காட்டி வாழ்வோரின் சொல்லும் தேய்ந்து விடுகிறது.

"யாருக்கு வேண்டும்
சுடாத பழமல்ல
சுட்ட பழம் தான்"

இன்று சொல்வதை அன்றே சொல்லியிருக்க வேண்டும், ஔவைக்கு!

“வந்து விழும் மூடி
உலை கொதித்து
அப்போது எழுவாய்!”

நேரத்தில் எழுவாய் பெண்னே! இல்லையெனில் எதுவும் பயனிலை என்றாகி விடும். எதையும் எப்போதும் மூடி மறைத்தால் உலையென்ன வாழ்வே கொதித்து விடும்!

“உலகப் பொதுமறையை
வழங்கியது உலகிற்கு
தமிழ்நாடு”

உலகமே ஒப்புக்கொண்ட உண்மை ஏனோ தாமரை இலையில் மட்டும் பனித்துளி முத்துப்போல் முன்னும் பின்னும் உருண்டு கொண்டே இருக்கிறது. சூரியனைக் கண்டால் பனித்துளி நீராகி விடும். அந்த நீரில் தான் தாமரை வாழ் வேண்டும்!

“உலோக விமானமல்ல
உயிருள்ள விமானம்
உயிரோடு தூக்கும் மீனை”

பறவைகளின் ராஜா உயிருள்ள மீனைத் தூக்குவது உணவுக்காக. மக்களின் ராஜா என நினைப்போர் குடிமக்களையே உயிரோடு தூக்குகிறார்களே! உரிமை காத்துக் கொள்ளவா?

“உணர்த்தும் மலர்கள்
மூன்று வரி தான்
ஹைக்கூ!”

உணர்த்தால் தானே அவை மலர்துளி வரவேற்புப் பெருகின்றன.

“இருக்கலாம் சேலையில் அழுக்கு
இல்லை மனதில் அழுக்கு
நாற்று நடும் பெண்கள்!”

அழுக்கு இழுக்கல்ல தான்! ஆனால், அழுக்கோ, இழுக்கோ, வழக்குப் போட்டாலும் வாழத் தெரிந்தவர்களே, ஆளவந்தார்கள்!

“இராமனுக்கு நீ உதவியது புராணம்
மனிதன் உனக்கு உதவியது
உண்மை!”

உண்மை உணராது கோவில் கட்டலாமா? படிப்பது இராமாயணம்... இடிப்பது!

“உயிரோட்டமான கலை
உயிர்ப்பிக்க
ஆதரவு இல்லை”

இவர்கள் ஆட்டம் அழிகிறது. அதுவே திரையுலகில் செழிக்கிறது. வாழ்ந்த கலை, வாழ வேண்டிய கலை நடிப்பாகி விட்டது.

‘’தோற்றனர்
பொறியாளர்கள்
குருவியிடம்!’’

பொறியாளர் கல்விக்கு குருவிக்கூடு கட்டும் கலையை பாடமாக வைக்க வேண்டும்.

“மரம் வளர்க்கச் சொன்னோம்
செவி சாய்க்கவில்லை
மரம் வரையவாவது விடுங்கள்!”

வேண்டாம், பசுமையான மரத்தை வரைந்து சுவற்றில் ஓட்ட, மாடுகள் பசுமை விலையென நினைத்து மேய்ந்துவிடப் போகிறது!

“கொள்ளை போனது உள்ளம்
கன்னியரின் கள்ளமில்லாச்
சிரிப்பில்!”

கொள்ளை போனது உள்ளமில்லா சிரித்தார் வாழ்வதில்லை, அழுதால் கிடைக்கப் போவதுமில்லை, கற்பு. (ஒருவேளை நிவாரணம் கிடைக்கலாம்).

“சாதனை தான்
முயன்றால்
முடிந்தது!”

முயற்சி திருவினையாக்கும்! தன்னம்பிக்கை ஊட்டும் மூவரிகள்.

“பணத்தால் வருவது
மகிழ்ச்சியே
அன்று”

என்று உணரவேண்டும் இன்று ஓட்டுக்கும் பணம் கேட்போர்.

“நன்றி மிக்க
விலங்கு
நாம்”!

நன்றி கெட்ட மனிதர்களுக்கு நாய் கற்றுத்தரும் பாடம்.

“அச்சமில்லை அச்சமில்லை
சுமப்பது
அப்பா!”

நீ இப்போது புரியாத சுமை, நீ அப்பாவானால் புரிந்து விடும்.

“உருவத்தில் பெரியது
உண்பதில்லை அசைவம்
யானை!”

அசைவம் உண்டு யானை போல் கொழுத்தவர்கள் யானைக்கதை சொல்லலாமா?

“பாறையைச் செதுக்கி
சிலையாக்கினாள்
சிற்பி.”

அந்த சிலையைக் கடவுளாக்கி காசு பறிக்கிறார் ஆன்மீகப் பெரியோர். கடவுளையே திருடி காசாக்க நினைக்கிறார்களே!?

“குயவன் வாழ்விலும்
மண் போட்டது
உலகமயம்!”

குயவன் வாழ்வில் மட்டுமல்ல, மக்கள் வாழ்விலும் மண்போட்டது உலகமயமான பிளாஸ்டிக் பொருட்கள்.

“உண்மை
பயமறியாது
இளங்கன்று!”

பாரதியை நினைவூட்டுகிற உமது கவிதை வரிகள்.

“பாசம் பொழிந்து
வளர்க்கிறாள்
பின்னர் அழுவாள்”

தென்னையை வளர்த்தால் இளநீர். பிள்ளையை வளர்த்தால் கண்ணீர்!

“மரம் கொத்திப் பறவை
மனம் கொத்தி
மனதில் நின்றது”

மரம் கொத்தியிடம் பாடம் கற்ற மனிதர்கள் மரத்தைக் கடத்தி கள்ளத்தனத்தில் காசு சேர்க்கிறார்களோ?

“எழுத்தறிவித்தல் அப்புறம்
எலும்பு தெரிகிறது
பசியாற்றுங்கள் முதலில்”.

எலும்புக் கூட்டை வைத்துத்தான் எழுத்தறிந்து டாக்டர் பட்டம் பெற்றவர்கள் பசியாறுகிறார்கள்.

“இரை கொடுத்து வளர்க்கும்
வளர்ந்ததும் துள்ளி விடும்
மறத்தலுக்கான பயிற்சி”

பறவையினம் பறத்தலுக்கு பயிற்சி கொடுக்கிறது. மனிதனோ வளர்த்த கடாவின் மார்பில் பாய்கிறானே? பகுத்தறிவு!

“அடுப்பறையில்
முடங்கியது போதும்
அகிலம் காண வா!”

அடுப்பு வெளிச்சத்தில் கவிதை எழுதும் பெண்களும் உண்டு.

“உலகில் சிறந்தது
உன்னதமானது
தாயன்பு”

தாயன்பு உணராதவர்களை பேய்களென்று கூறலாமா?

“மெல்லினம் அல்ல
வல்லினம்
பெண்”

மாறாக சில குடும்பங்களில் ஆண்கள் மெல்லினம் பெண்களே வல்லினம் தான், விதி வலியது!

“எல்லா உயிர்களிடத்தும்
அன்பு செலுத்தும்
பெண்மை வாழ்க!”

உண்மை உணர்த்தும் உன்னத வரிகள்.

“பொருத்தம் தான்
அமெரிக்காவின் சின்னம்
கழுகு!”

உண்மை உணராது உறவாடும் தலைமை கவனிக்குமா?

“சிறு துளி
பெரு வெள்ளம்
காகத்திற்கு!”

காகத்திடம் கற்றுக் கொள்ள வேண்டும் பாடம் – மனித இனம்

“மான் சைவம்
என்பதால்
வந்த துண்வு!”

அசைவம் உண்போருக்கு மான் இறைச்சி ருசியான அசைவம்.

“இருக்கைக்கான ஆசை தான்
பலரைத் தள்ளியது
சிறை இருளில்”

சிறைச்சாலை என்ன செய்யும்! பதவி கொடுக்கும்!

“தலைக்கு எண்ணெய் இல்லை
பசி போக்க வழியில்லை
கடவுள் எங்கே இருக்கிறார்!”

எண்ணெய் அபிசேகம் செய்து கொண்டிருக்கிறார்.
“அன்று பயனுள்ள பொருட்கள்
இன்றோ
காட்சிக்கூடப் பொருளானது!”

பெற்றோரையே காட்சிப்பொருளாக்கி விட்டனரே! காலம் மாறிப் போச்சு!

“ஐந்தறிவு என்ற போதும்
தோற்கடித்தன
ஆறறிவை மனிதனை!”

மனிதன் விலங்காகி விட்டான், குரங்கிலிருந்து தானே மனிதன் தோன்றினான்.

“உயரம் குறைவு
உள்ளம்
உயர்வு!”

உயரம் குறைவு, அறிவு உயர்வு, அறிஞர் அண்ணா!.

“பெயரை உச்சரித்தாலே
வீரம் பிறக்கும்
பகத்சிங்!”

பெயரை உச்சரித்தாலே பயம் பிறக்கும்! பதவியில் இருப்போரை!

“அந்நியர் சுரண்டலால்
பறிபோனது
நிலத்தடி நீர்!”

நீர் மட்டுமல்ல, நீரானும் மக்களும், அவர்கள் உரிமைகளும் பறிபோனதே!

“வித்தை காட்டவில்லை
வியர்வை சிந்திப்
பெறுகின்றனர் தண்ணீர்!”

வியர்வையும் தண்ணீர் தானே! என்கிறார்கள் அறிவுடையோர்!

“அழிவதே இல்லை
வறுமைக் கோடுகள்
அணில் கோடுகள்”

அணில் கோடுகள் இல்லாவிடில் இராமனை மறந்து விடுவார்கள்.
வறுமைக் கோடுகள் இல்லாவிடில் எங்களை மறந்து விடுவார்கள் அரசியல் மேடைப் பேச்சு!

“உணர்த்தியது
வாழ்வின் நிலையாமை
தொங்கு பாலம்!”

இன்றைய ஒப்பந்தக்காரர்கள் மட்டும் அனைத்துப் பாலங்களும் தொங்கு பாலம் தானெ?

“பாலைத் தராவிட்டால்
நீயே இரையாகலாம்
நாய்க்கு!”

யார் நாய்! இரை தரும் இறைவனா, இறைவனையே இரையாக்கி வாழ்வோரையா?

“வெளியே முள்
உள்ளே இனிக்கும் சுளை
தந்தை மனம்!”

முள்ளை முள்ளால் எடுக்க வேண்டுமென்கிறார்களே, பிள்ளைகள்!

“ஓவியரின் கைவண்ணத்தில்
மாறியது பூச்செடி
மங்கையின் சிகையாக!”

ஓவியரின் கைவண்ணம் இல்லாமலே, உண்மையாகவே இப்படி முடி வைத்துக் கொள்வது இன்றைய நாகரீகம்!

“வெடித்தது
பூமி மட்டுமல்ல
உழவனின் இதயம் தான்!”

வெடிக்கே வெடி வைப்பவர்களுக்கு எது வெடித்தால் என்ன?

“கூடி வாழ்ந்தால்
கோடி நன்மை
சேர்ந்து வாழுங்கள்!”

தேர்தல் நேர கூட்டுறவு!

“திருடன் வந்தால் குரைப்போம்
திருடனுக்கு வாலாட்டும்
மனிதன்”

திருடனே! திருடனென்று கத்தும் காலத்தில் யாரைப் பார்த்து குரைக்கும்?

“வறுமையை
ஒழிப்பதாகச் சொன்ன
அரசியல் வாதியே பார்!”

“சொன்னது நீ தானா? சொல்! சொல்!” என்று பாடிக் கொண்டே காலத்தைக் கழிப்பவர்கள் ஓட்டுரிமை விற்றவர்கள்”

“ஊரின் பசியாற்றியவன்
பசியாறுகின்றான்
வரப்பில் அமர்ந்து!”

‘வரப்பு உயர்” என்று பாடிய ஔவையே! ஊருக்கு சோறு போடுபவன் ஒரு கவளம் சோற்றுக்கு கையேந்தும் நிலைமையைப் பார்!”

“முடியாது என்று
நினைத்தால்
எதுவும் முடியாது”

முடியாது என்று அரசியலார் எவரும் தேர்தல் நேரத்தில் சொல்வதே இல்லை.

“தமிழை அழியாமல்
காத்ததில் பெரும்பங்கு
பனை ஓலைக்கு!”

தமிழைக் காத்த கற்பக விருட்சத்தை காத்திட வேண்டியதை
தலைமைக் கடமையாகக் கொண்டோம். தமிழ் அழியாதது. தமிழ் காத்த பனைமரங்களையும் அழியாமல் காப்போம்!

“கொடுப்பதிலும்
இன்பம் உண்டு
கொடுத்துப் பார்!”

கொடுப்பதில் இன்பம் உண்டென்று கனவு கண்டு தானே கொடுத்துப் பார்த்தோம் ஆட்சியை! பலன்? துன்பமே!



கொடுப்பதில் இன்பம் உண்டென்று கனவு கண்டு தானே கொடுத்துப் பார்த்தோம் ஆட்சியை! பலன்? துன்பமே!



தங்களின் “ஹைக்கூ 500” துளிப்பாக்கள் சமுதாய நலன் கருதிய கருத்துள்ள துளிப்பாக்கள். வெளிப்பாடான என் நூல் விமர்சனம், நிதர்சனமான உண்மை விளம்பியாக இருக்குமென எண்ணுகிறேன்.


.


.

எழுதியவர் : கவிஞர் இரா. இரவி (16-Jan-19, 3:19 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 194

மேலே