எது அழகு

அழகு ...
அழகானவர்களை நாம் அனைவரும் ரசிக்கிறோம்;
அழகாக இருக்க நாம் ஆசைப்படுகிறோம்;
அழகாக இல்லையெனும் ஒற்றைக் காரணத்துக்காக பலரை ஒதுக்குகிறோம்;
அழகு என்று நம்மை பிறர் ஏற்காவிடில், மனம் வாடிவிடுகிறோம்.
எது அழகு ?
சிவந்த நிறமா? கூறான மூக்கா? வேல்போன்ற விழிகளா? வனப்பான உடல் அமைப்பா? வண்ண,வண்ண உடைகளா? வித விதமான சிகை அலங்காரங்களா? விலை உயர்வான நகை அலங்காரங்களா?
இவைகளெல்லாம் அழகுதான். ஆனால், இவைகள் மட்டுமே அழகல்ல.

குழந்தைகளை அன்போடும், பண்போடும் அரவணைத்து வளர்க்கும் பெற்றோர்கள் அழகு.
அப்பெற்றோர்களை வயதான காலத்தில் பேணிக்காக்கும் பிள்ளைகள் அழகு.
மனைவியை மட்டம் தட்டாத கணவன் அழகு.
கணவனை விட்டுக் கொடுக்காத மனைவி அழகு.
பெண்களை கண்ணியமாக நடத்தும் ஆண்கள் அழகு.
நிமிர்ந்த நன்னடை, நேர் கொண்ட பார்வையுடன் கண்ணியம் காக்கும் பெண்கள் அழகு.
செய்யும் தொழிலை திறமையுடன் செய்பவர்கள் அழகு.
தொழிலில் அறத்தையும், நேர்மையையும் இரு கண்களாகப் போற்றுபவர்கள் அழகு.
கையூட்டு வாங்காத கைகளுக்குச் சொந்தக்ககார்ர்கள் அழகு.
பிறர் மனம் புண்படாமல் பேசும் அதரங்கள் அழகு.
பிறரை ஊக்கப்படுத்தும் சொற்களுக்குச் சொந்தக்கார்ர்கள் அழகு.
சாலைகளில் விபத்து நேராவண்ணம் பொறுப்புடன் வண்டி ஓட்டுபவர்கள் அழகு.
பிறர் துன்பம் கண்டால் கலங்கும் கண்கள் அழகு.
அத்துன்பத்தைக் களைந்திட விரையும் கரங்கள் அழகு.
சமுதாய மேம்பாட்டிற்கு உழைக்கும் மனிதர்கள் யாவரும் அழகு.
பணிவாக இருக்கும் பண்பாளர்கள் யாவரும் அழகு.
மலர்ந்த முகமும், இனிய சொல்லும் கொண்ட மாந்தர்கள் எப்போதும் அழகு.
இதன்படி வாழும் மாந்தர்களா நீங்கள் ? உணர்ந்து கொள்ளுங்கள்.
நீங்கள்தான் உண்மையிலேயே அழகு.

எழுதியவர் : (16-Jan-19, 11:40 pm)
சேர்த்தது : உமாமகேஸ்வரி ச க
Tanglish : ethu alagu
பார்வை : 1078

சிறந்த கட்டுரைகள்

மேலே