என்றும் நினைவில் நீ

#என்றும் என் நினைவில் நீ..!

எந்த கணத்தில்
நீ என்னுள் இறங்கினாய்??
என்கிற கேள்விக்கு
நான் விடை அறிய முற்பட்டதில்லை..!

ஏன் எனக்குள் கலந்தாய்
என்பதான வருத்தங்களை
நீ இன்றுவரை
எனக்களித்ததில்லை
என்கிற காரணமாக இருக்கலாம்..!

உன் நினைவுக்காற்றின்
உந்துதல்களில்
நான் அண்டவெளியில்
தன்னிச்சையாய் மிதந்திருக்கிறேன்
இலவம் வெடிக்கையில்
அதில் சிறைபட்டுக்கிடந்த
பஞ்சு விடுதலையடைந்தது போல்..!

மறந்து கொண்டிருக்கிறேன்
உன்னை மறந்துவிடு
என்று கூறிய உறவுகளை..!

உன்னிலிருந்து என்னை பிரித்தவர்கள்
ஓய்ந்து போனார்கள்
என்னிலிருந்து உன் நினைவுகளை
பிரித்தெடுக்கும் ப்ரயத்தனங்களில்..!

உன் படத்தை கிழித்தவர்களால்
என் இதயத்தை கிழிக்க இயலாது
அங்கே நிலைத்திருக்கும்
உன் உருவத்திற்கு
இதயத்துடிப்பின் அர்ச்சனைகள்
உன் பெயரே மந்திரங்களாய்..!

என்றும் என் நினைவில் நீ
என்று சொல்வதற்கில்லை
என்றென்றுமல்லவா
என் நினைவுகளில் நீ..!

-சொ. சாந்தி-
(நிலாமுற்ற குழுமம் அளித்த தலைப்பிற்காக எழுதிய கவிதை. இக்கவிதையினை தெரிவு செய்த நிலாமுற்றம் குழுமத்தாருக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.)

எழுதியவர் : சொ.சாந்தி (3-Feb-19, 3:17 pm)
சேர்த்தது : C. SHANTHI
Tanglish : endrum ninaivil nee
பார்வை : 276

மேலே