சீமான் களப்புலியா கதைப்புலியா

எழுதுகிற நான்,வாசிக்கிற நீங்கள் என நாம் அனைவரும் 'அட ஆமால்ல இவரு சொல்றது சரிதான்ல','நாடு நாசமா போய்ட்டு'னு யூடியூப் மூலம் உச்சிமுகர்ந்து தமிழ்த்தாயின் தலைமகனாக சீமானை தத்தெடுத்தோம் அல்லவா.அன்றிலிருந்து இன்று வரை அவரை விமர்சிப்போரெல்லாம் முன்வைக்கும் பிரதானமான ஒரே வாதம் தமிழர்,தமிழரல்லாதோர் என எதன் அடிப்படையில் அவர் முடிவெடுக்கிறார் என்பதுதான்.அதற்கான விடை மிக எளிது, அண்ணன் சீமானை ஏற்போர் தமிழ்த்தேசியவாதிகள்,மறுப்போர் தெலுங்கர்,கன்னடர்,மராட்டியர் போன்ற பிற மொழிவழிதேசிய மக்கள்.ஒட்டுமொத்த தமிழினத்துக்கும் ஒற்றைப்பிரதிநிதியாக களத்தில் கம்புசுற்றும் அண்ணனை பற்றி நானறிந்த முரண்களை வெளிப்படுத்துகிறேன் தவறுகள் இருப்பின் அநாகரீகம் தவிர்த்து அன்பான முறையில் அவர்தம் கருத்தை முன்வைத்து தம்பிகள் தெளிவுபடுத்தி சீமான் அண்ணனின் விழுமியங்களை காப்பாற்ற முயல்வீர்களாக.


அண்ணன் சிம்புவை சூப்பர் ஸ்டாராக மாற்றகளம்காணுகிறார்.வாழ்த்துகள்.வாழ்த்துகள் 'க்' வருமா வராதா என்ற சந்தேகம் தெளிவுற கோபாலாபுர தெலுங்கர் கலைஞரின் இல்லக்கதவை தட்டிய தமிழ்த்தேசிய பிள்ளைதான் அண்ணன் சீமான் என்பதை அவரும் மறுப்பதற்கில்லை."அண்ணா பூமி,பெரியார் பூமி - எங்க காமினு எள்ளலோடு புன்னகைத்தவர், பெரியாரை விடப் பெரியார் என்று திராவிடத்தின் மூலமான அயோத்திதாசரை தமிழர் என்கிறார்!.தமிழர்களின் பெருமைமிகு அடையாளம் திருக்குறள் என சீமான் உட்பட நாம் அனைவரும் போற்றக்கூடிய நூலை,திராவிட அடிநாதம் அயோத்திதாசரின் தாத்தா பட்லர் கந்தப்பன்தான் பிரதிகள் அழிந்த நிலையில் எல்லீஸ் துரையிடம் கொடுத்து இன்றைய அச்சுக்கு கொண்டுவந்தார்.அந்த வள்ளுவருக்கு கோட்டம் அமைத்து வானுயர சிலை எடுத்தது திராவிட கலைஞர்.திராவிட சித்தாந்தத்தை உள்வாங்கிய அயோததிதாசர் ,பாரதிதாசனை ஏற்றுக்கொள்ளும் சீமான் பெரியாரை, கலைஞரை தமிழரல்லாதோர் என சங்கநாதம் செய்கிறார்.பெரியார் கன்னடர் என்று அவரே சொல்கிறார் என மேடைதோறும் முணுமுணுக்கும் சீமான், கலைஞரை எப்படி தெலுங்கர் எனத் தீர்மானித்தார்? திராவிட கொள்கைகளின் மீது விமர்சனமா அல்லது அதைதாங்கி தமிழ் மக்களை காத்துநிற்கும் தூண்கள் மீதா?பேரா.சுபவீ சொல்வது போல திராவிடம் என்பது அடிமரம், தமிழ்தேசியம் என்பது அதன் கிளைமரம்.கிளைமரத்தில் உட்கார்ந்துகொண்டு அடிமரத்தை வெட்டுகிறாரே என்றே தோன்றுகிறது."சாதி ஒழிப்பு பெரியாரெல்லாம் செய்யல,பெரியாரும் செஞ்சாரு"னு சமீபத்தில பேசிய ஒன்றே போதும் உங்கள் பெரியாரைப் பற்றிய பார்வைக்கான சான்று...என் ஆட்சியில சாதிப் பெருமை பேசினா சங்கறுத்து வீதியில வீசிடுவேனு சொல்றீங்க இது கைத்தட்டலுக்கு மட்டுமே ஒத்துவரும் உதவாக்கரை சிந்தனை.


வாய்நிறைய எங்க அண்ணன் தமிழன், என திருமாவை இன்று அழைக்கும் சீமான் 19.09.2012 ல் ஆனந்த விகடன் இதழில் "வைகோ,திருமா போன்றோருடன் ஈழத்துக்காக இணைந்து போராடுவதில் என்ன தயக்கம் என்ற கேள்விக்கு?"-முடியாது,இந்திய தேசிய,திராவிட,சாதியக் கட்சிகளுக்கு மாற்றாகத்தான் நாங்கள் நிற்போம்.இனியும் தமிழ்பிள்ளைகளான நாங்கள் இவர்கள் பின்னால் செல்ல முடியாது.என சொல்லியிருப்பதன் மூலம் திருமாவை சாதிய தலைவராக பார்க்கிறீர்கள் என அறியமுடிகிறது. திருமா முதல்வர் ஆகவேண்டும என்கிற கருத்தில் என்ன உண்மை இருந்துவிடமுடியும்?(திருமா,அன்புமணி இருவருமே அண்ணனின் பார்வையில் ஒன்றுதான்)



"திடீர்னு முப்பாட்டன் முருகன்னு கெளம்பிட்டீங்க முதல்ல கடவுள்களை கடுமையா விமர்சிச்சு பேசுனீங்களேனு கேக்குறாங்க-அதுவும்நான் இதுவும்நான்தான்னு ஒப்புதல் வாக்குமூலம்" வேற கொடுக்குறீங்க.அது பெரியார்-அம்பேத்கார்- மார்க்ஸ் தலைமையின் வழியில் நடந்தது,இது என் தலைமையில் நடப்பது என்று அப்ளாஸ் அள்ளுறீங்க.கட்சயின் மூத்ததலைவர் வின்னரசு நீங்க போலி தமிழ்தேசியவாதினு சொல்றாரு?


நீங்களே ஏற்கும் தமிழ்தேசியத்தின் முதுபெரும் தலைவர்.ஐயா
பெ.மணியரசன் அவர்களின் தமிழ்த்தேசிய கொள்கையில் ஒன்று இந்தியசட்ட மறுப்பு.உங்கள் கொள்கை அரசியலமைப்பு சட்டத்தை ஏற்பது ,ஏற்பதால்தானே தேர்தலிலேயே போட்டியிட்டீர்கள்? எது உண்மையான தமிழ்த்தேசியம்.உடனே நான் தமிழனானு தேடாதிங்க நீங்க தமிழன்னு ஏற்கிற ஒரு சாதியைச்சேர்ந்தவன் தான் அடியேன்.

2008 ல் 'விடுதலைப்புலிகள் தடைசெய்யப்பட்ட இயக்கம்' அதற்கு ஆதரவாக செயல்படும் சீமான் போன்றோரை கைது செய்யாமல் காலம் தாழ்த்துவது ஏன் என அறிக்கை வெளியிட்டு சீமான் கைதுக்கு பெரும்பங்காற்றிய ஜெ-வை ஆதரித்து 2011 தேர்தலில் திமுக விற்கு (ஈழத்திற்கு துரோகம் இழைத்தது என்று ) எதிராக களப்பணியாற்றிய அண்ணன்,ஜெ வென்று முதல்வர் ஆனபிறகு அவரிடம் ஒரு கோரிக்கையை முன்வைத்து இலங்கையை போர்க்குற்றநாடாக பிரகடனப்படுத்தியிருக்கலாமே?.அண்ணன் விசிக ஷாநவாஸ் சொல்வதுபோல ஒரு மாநில முதல்வரால் பல வல்லாதிக்க நாடுகளின் துணைகொண்டு ஒரு இனத்தின் புரட்சியை நசுக்கிய ஈழப்போரை நிறுத்தியிருக்க முடியுமானால்,அதே அதிகாரம் பொருந்திய இன்னொரு முதல்வர் ஜெ(ஈழத்தாய்) ஏன் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து இலங்கையை போர்குற்றவாளியாக அறிவித்திருக்க முடியாது? குறைந்தது,பன்னாட்டு விசாரனைக்கு இலங்கை மறுத்தபோது, இந்தியா வந்து விசாரனைய தொடங்க அவர்கள் முனைந்தபோது ஏன் விசாவை கூட வாங்கி தர இயலவில்லை?என்ற கேள்வி மூலம் ஒரு மாநில முதல்வரின் அதிகாரம் என்னவென்பது உணரமுடிகிறது
.

பொதுமேடையில் ஈழவிதவையைத்தான் திருமணம் செய்துகொள்வேன் என அறிவித்து பிறகு பெண் கிடைக்கலனுசொல்லிட்டீங்க...அதுக்குள்ள போய் பேசுறது நாகரீகம் ஆகாது அது உங்கள் தனிப்பட்ட விருப்பம். 2016 சட்டமன்ற தேரதலில் பொதுவிவாதத்தில் மக்கள் நலக்கூட்டணியைவிட வாக்கு குறைவாக பெற்றால் கட்சியை கலைத்துவிட்டு மார்க்ஸிஸ்ட் கட்சியில சேர்வதாக சொல்லிட்டு அப்பறம் நான் கம்யூனிஸ்ட மட்டும் தான் சொன்னேனு பின்வாங்குறீங்க.இது என்ன அரசியல்?

Ak74,ஆமைகறி,தலைவர் பிரபாகரனுடனான சந்திப்பின் நிமிடங்கள்,வணக்கம் சொன்னேன் விசா கொடுத்துட்டுட்டாங்க..கலைஞர் சட்டைப்பையிலிருந்து பேனா எடுத்து எழுதியது,சிவாஜிக்கு நடிப்பு சொல்லிதந்தது,என இது எல்லாத்துக்கும்"பீலா விட்டாலும் உயர்வா விட்றோமா இல்லையா"னு நீங்களே விளக்கமும் கொடுத்துட்டீங்க.

எல்லாவற்றிலும் திராவிட கொள்கைகளோடு ஒத்துப்போகிவிட்டு,பெரியாரை,கலைஞரை தலைவராக ஏற்காததாலையே உங்கள் அரசியல் மாற்று அரசியலாக எப்படி பார்க்கவியலும்?ஈயம் பூசுன மாதிரியும் இருக்கணும் பூசாத மாதிரியும் இருக்கணும் என்பதுபோல் ஒருபுறம்கடவுளை எதிர்த்துகொண்டே,மறுபுறம் கடவுள் நம்பிக்கை வாக்குகள் சிதறிவிடும் என்பதால் இந்து கடவுள்களுக்கு புதியமுலாம் பூசுகிறீர்.. சிவனையும்,முருகனையும்,கிருஷ்ணனையும் இனமூதாதையர் என்று பூசிமொழுகிய நீங்கள்,முஸ்லீம்- கிருத்தவ கடவுள்களை உங்கள் கொண்டாட்டங்களில் ஈடுபடுத்தவதில்லையா?ஒருவேளை வாக்குவங்கி அடிப்படையில்தான் இனமூதாதையரை இனம்பிரிக்கிறீர்களோ?



திராவிடத்தை எதிர்த்த எத்தனையோ தமிழ்த்தேசிய இயக்கங்கள் மீண்டும் திராவிடத்திலே கரைந்ததுதான் வரலாறு,காரணம் பெரியார் எதிர்ப்பு அரசியல் இங்கே நிற்காது.
சாதிகளாக,மதங்தகளாக,அடிமைகளாக பிரிந்து கிடந்த தமிழனை ஒரணியில் இணைத்ததும் அவர்களுக்கான மரியாதையைப் பெற்றுதந்ததிலும் பெரியாரை மிஞ்சிய வேரொருவர் யாருமிலர்.பெரியாரை தமிழ்மக்கள் யாரும் தெலுங்கராக பார்ப்பதில்லை,தமிழகத்தின் தந்தையாக தான் பார்க்கிறார்கள்.

சீமான், களத்தில் புலியாக சீற தமிழ்பெரும் பிள்ளையின் மனமார்ந்த வாழ்த்துகள்.

-பாரதிநேசன்.
12-01-2019

எழுதியவர் : பாரதிநேசன் (5-Feb-19, 6:13 pm)
சேர்த்தது : பாரதிநேசன்
பார்வை : 157

மேலே