உழவுக்கு வந்தனை செய்வோம்

#உழுவுக்கு வந்தனை செய்வோம்..!

மரம் வெட்டி மழை விரட்டி
மண்ணும் வறட்சி கண்டது
பச்சை வயல் வாழ்ந்த இடம்
பலவடுக்கில் வீடுமானது..!

ஆறு ஏரி காணவில்லை
ஆரைக் கேட்பது
வயலையுண்ட வீடுகளும்
பேய்கள் ஆனது..!

மழை தொடா பூமியிங்கு
மலடுமானது
ஏருழவன் வாழ்வில் இன்று
மண்ணும் விழுந்தது..!

விளைந்த பலன் பெருமளவு
தரகைச் சேருது
ஏரு கண்ட உழவர் விழியில்
நீரும் பாயுது..!

உழுவோரும் எழுந்திடத்தான்
வழி வகை ஏது - அவர்
உழைப்பெல்லாம் வணிகரையே
உயர்த்தி வைக்குது..!

நேரடியாய் கொள்முதலே
நியாயம் ஆனது - இதற்கு
சட்டமொன்று இருக்குமெனில்
தரித்திரம் ஏது..?

உழுதவனோ உழைப்பவனோ
பயனுற வேண்டும்
வழிபறிப்போர் உழவர் வாழ
வழி விடவேண்டும்..!

மழை மறைவு தரகு கொள்ளை
சோதனையோடு
வளம் சுரண்டல் ஆனது
விடம் விளைச்சலோடு..!

எத்தனையோ போராட்டம்
முடிவுரையின்றி
எத்தர்களின் எக்காலம்
வரைமுறையின்றி..!

ஒதுங்கி ஒதுங்கி நின்றிருந்தால்
ஒளி பிறக்காது
பதுங்கி பாய வேனுமந்த
புலிகள் போன்று..!

நம் பூமி நம் சொந்தம்
அயலான் விரட்டு
நாண்டு கொண்டு சாகட்டும்
பொய்யொடு புரட்டு..!

உணவின்றேல் உயிரில்லை
உணர்வோம் நாமும்
உழவருக்கு தோள் கொடுத்தே
மகிழ்வோம் நாளும்..!

விழுந்த உழவர் வாழ்வினிலே
உயர்ந்தெழ வேண்டும்...
உணவு தரும் உழவனையே
நாம் தொழ வேண்டும்...!!

சொ.சாந்தி

பொதிகை மின்னல் பொங்கல் விழாவில் வாசித்த கவிதை. வாய்ப்பினை நல்கிய பொதிகை மின்னல் பத்திரிக்கை ஆசிரியருக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்..!!

பொங்கல் விழாவின் போதான படம்.

விழாவில் அனைவருக்கும் பொங்கல் வழங்கியபோது...

எழுதியவர் : சொ.சாந்தி (10-Feb-19, 7:27 pm)
சேர்த்தது : C. SHANTHI
பார்வை : 51

மேலே