காதலர் தினம்
==============
நீ நினைத்த ஒருத்தி
எங்கோ எவனோடோ
உன்னைப்பற்றிய நினைவுகளின்றி
மகிழ்ச்சியோடு வாழ
உன்னை நினைத்த ஒருத்தி
உன் நினைவோடு உருகி உருகி
மகிழ்ச்சி தொலைத்து
எங்கோ எவனோடோ
என்ன வாழ்க்கை என்று
அலுத்துக் குப்பைக்கொட்ட
ஒன்றுமேயறியா ஒருத்தியோடு
உனக்கான வாழ்க்கை
ஏனோ தானோவென நகர
நவீனமயமான இவ்வையத்தில்
மின்னஞ்சல் செய்திகளோடு
வட்ஸ் எப் குறுஞ்செய்திகளிலும்
குரல் செய்திகள் வழியாகவும்
பரவி நேர ஒதுக்கீடு செய்து
காலையில் ஒருத்திக்கு/ ஒருவனுக்கு
பூங்கொத்தும் புன்னகையும்
பகலில் ஒருத்தி/ ஒருவனோடு
சினிமாவும் லஞ்சும்
மாலையில் ஒருவன் /ஒருத்தியோடு
சிற்றுண்டியும் தேநீரும் பூங்காவும்
இரவில் ஒருத்தி /ஒருவனோடு
மதுவும் ஆட்டமும் பாட்டமும்
கூத்தும் கும்மாளமும் என்று
ஒரு திருவிழாவைப்போல
எத்தனை இனிமையாய் கழிகிறது
நீ பெற்றெடுத்துப்
பெயரிட்டுப் பேருவகை கொண்ட
உன் வாரிசுகளின் காதலர் தினம்.
**
மெய்யன் நடராஜ்