உடல்சிறியர் என்றிருக்க வேண்டா – மூதுரை 12
நேரிசை வெண்பா
மடல்பெரிது தாழை மகிழினிது கந்தம்
உடல்சிறியர் என்றிருக்க வேண்டா - கடல்பெரிது
மண்ணீரும் ஆகா(து) அதனருகே சிற்றூறல்
உண்ணீரும் ஆகி விடும். 12 – மூதுரை
பொருளுரை:
தாழம்பூ இதழ்களினால் பெரிதாயிருக்கின்றது, மகிழம்பூ இதழ்களினால் சிறிதாயிருந்தாலும் நறுமணத்தில் தாழம்பூவை விட இனிமையாக இருக்கின்றது,
கடல் பெரிதாயிருக்கிறது; ஆனாலும் அதன் நீர் உடம்பின் அழுக்கைக் கழுவுவதற்குத் தக்க நீராக ஆகாது;
அக்கடலுக்குப் பக்கத்தில் சிறு மணற்குழியில் சுரக்கும் ஊற்று நீர் குடிக்கத் தகுந்த நீருமாகும்;
அதனால், ஒருவரை உருவத்தினாலே சிறியவரென்று மதியாமல் இருக்க வேண்டாம்.
தாழை என்பது தென்னையையும் குறிக்கும் சொல்லாகும். தென்னை மடல் பெரிதாக இருப்பினும் அதற்கும் சிறிதும் மணமில்லை என்றும் பொருள் கொள்ளலாம்.
மண்ணுதல் - கழுவுதல்,