வாய்ப்புகளை வசப்படுத்து

வாய்ப்பு என்பது ஒருமுறை தானே
வாசலைத் தட்டும்! நழுவ விடாதே !
உடும்பாய் அதனை பற்றிப் பிடித்திடு
உயர்வுக்கு அதிலே உறுதி செய்திடு .
வாழ்த்தும் நெஞ்சம் வழிவிடும் போதே
வானத்தில் ஏறிடு ! வசதிகள் பெருக்கிடு.
வீழ்த்தப் பட்ட உணர்வால் நெஞ்சம்
துவண்டு போனது ! துடித்துக் கிடந்தது!
அணையுள் அடங்கிய தண்ணீர் போன்று
அமைதி காத்து ஆத்திரம் விடுத்தது !
குட்டிட குட்டிட குனிந்த கூட்டம்
திட்டம் ஒன்றால் தெருவினில் இணைந்தது !
கிட்டிய வாய்ப்பை கையில் எடுத்து
எட்டா தொலைவும் எட்டிப் பார்த்தது !
உலகமே சற்று உற்றுப் பார்த்திட
அகிம்சை கொள்கையில் அறவழிப் புரட்சி !
ஆண்டவர் கொண்டனர் அகத்தினில் மிரட்சி !
வாய்ப்பினைச் சரியாய் வளர்த்துக் கொள்ள
ஆட்சியில் இருப்போர் ஆடிப் போயினர் !
ஏறு தழுவிடும் உரிமை தன்னை
மீட்டுத் தந்த மாணவர் படையை
உடைத்து மகிழ்ந்த உதவாக் கரைகள்!
கிட்டா தாயின் சட்டென மற
கிட்டு மாயின் விரைந்து சென்று
முடித்துக் காட்டு ! முடங்கி விடாதே !

எழுதியவர் : பொதிகை மு செல்வராசன் (14-Feb-19, 9:42 pm)
பார்வை : 148

மேலே