தமையடைந்தோர் தம்மின் இழியினுஞ் செல்வர் இடர்தீர்ப்பர் – நன்னெறி 16
நேரிசை வெண்பா
தம்மையுந் தங்கள் தலைமையையும் பார்த்துயர்ந்தோர்
தம்மை மதியார் தமையடைந்தோர் - தம்மின்
இழியினுஞ் செல்வர் இடர்தீர்ப்பர் அல்கு
கழியினுஞ்செல் லாதோ கடல். 16 – நன்னெறி
பொருளுரை:
பெரிய கடலானது தன்னை அடுத்த சிறிய உப்பங்கழியிலும் போய்ப் பாயாதோ? போய்ப் பாயும். அதுபோல அறிவொழுக்கங்களினால் உயர்ந்தவர்கள் தங்களைச் சார்ந்தவர்கள் தங்களைப் பார்க்கினும் தாழ்ந்தவர்களாயினும், தங்களையும் தங்களுடைய தலைமையையும் பார்த்துத் தங்களை மதியாதவர்களையும் அவர்களை இருக்கும் இடத்துக்குப் போய் அவர்களுடைய துன்பத்தை நீக்குவார்கள்
பொருள்:
கடலானது தன்னை அடுத்த உப்பங்கழியிலும் பாய்வது போல, உயர்ந்தோர் மதியாதவராயினும், இழிந்தவராயினும் தன்னை அண்டினவரை தன்னையும், தன் நிலையையும் ஆராய்ந்து அவர் தம் துன்பம் தீர்ப்பர்.