இருநீர் வியன்உலகம் வன்சொலால் என்றும் மகிழாதே – நன்னெறி 18
இருவிகற்ப நேரிசை வெண்பா
இன்சொலால் அன்றி இருநீர் வியன்உலகம்
வன்சொலால் என்றும் மகிழாதே - பொன்செய்
அதிர்வளையாய்! பொங்கா(து) அழல்கதிரால் தண்என்
கதிர்வரவால் பொங்கும் கடல். 18 - நன்னெறி
பொருளுரை:
பொன்னாலே செய்யப்பட்ட ஒலிக்கின்ற வளையல்களை உடையவளே!
கடலானது குளிர்ச்சி பொருந்திய கிரணங்களை உடைய சந்திரன் வருகையினால் பொங்கும்;
அதுவன்றி, வெம்மை பொருந்திய கிரணங்களை உடைய சூரியன் வருகையினாலே பொங்காது.
அதுபோல, பெரிய கடல் சூழ்ந்த பரந்த உலகத்திலுள்ளவர்கள், இன்சொலால் அன்றி வன்சொலால் என்றும் மகிழாது.