நான் அனிதா பேசுகிறேன்

நான் அனிதா பேசுகிறேன்

தீட்டை ஒழிக்க போராடியவர்
பெரியார்
நீட்டை ஒழிக்க போராடியவள் நான்

நாட்டுக்காக உயிர்
நீத்த தியாகி அல்ல
நான்
நீட்டுக்காக உயிர் நீத்தவள்

நீட்டு என் வாழ்நாளை
நீட்டிக்க விடவில்லை

நான் கள்ளிப்பால்
குடித்து இறக்கவில்லை
கல்விப்பால் குடித்ததால்
இறந்தேன்

என் கழுத்தில்
ஸ்டெத்
தொங்கும்
என்று நினைத்தேன்
நான் செத்து தொங்குவேன்
என நினைத்துப் பார்க்கவில்லை

இறந்து
என் தலைப்பூ
வாடுவதற்குள்
நான் தலைப்புச் செய்தியானேன்

கண்ணீருக்கு
என் கண்கள்
முகவரி ஆனது
என் முகவரியோ
பத்திரிக்கைகளில்
முதல் வரி ஆனது

வெள்ளாடை அணிந்து
மருத்துவமனை உள்ளே செல்ல
நினைத்த நான்
வெள்ளாடை போர்த்தி
மருத்துவமனைக்கு வெளியே
வந்தேன்

கருவறை திறந்து
உயிர் ஜனிக்க கண்டேன் கனவோடு
கல்லறையில்
என் உடல் திணிக்க கண்டேன்
கானாவோடு

அழகிய என்
கையெழுத்தை
மருத்துவர் போல்
கிறுக்கி எழுதி பழகினேன்
என் வாழ்க்கையே
கிறுக்கல் ஆகும் என அறியாமல்

மண்ணில் 1176 மதிப்பெண்
எடுத்த நான்
இன்று விண்ணில்
மதி
பெண்ணாக மாறிப்போனேன்.

மாத்திரை கொடுக்கும் என்
கனவிற்கு அரசு
மா திரை போட்டது

நீட்டிற்கு கிடைக்காத
விலக்கு
என்
உயிரிடமிருந்து என்
கூட்டிற்கு கிடைத்தது

நோயை அறியவேண்டிய
என் உடல் தீயை அறிந்தது

எல்லோரும் அணிந்து
போராடினர் கருப்பு ஆடை
நான் எவ்வாறு
அறிவேன் அதிலுள்ள
கருப்பு ஆடை

உண்ணாவிரதம்
இருந்தோர்
உண்ணாமல்
உண்மையாய்
விரதம் இருந்திருந்தால்
என் ஊனை உண்ணிகள்
உண்ணாமல் இருந்திருக்கும்

எழுதியவர் : புதுவை குமார் (3-Mar-19, 11:02 pm)
சேர்த்தது : புதுவைக் குமார்
பார்வை : 105

மேலே