சிவனும்சிவராத்திரியும்

#சிவனும்.. சிவராத்திரியும்..!

புண்ணியம் அழிந்த பூமியில் ஓர்நாள்
பூகம்பம் தலைவிரிக்க
பொங்கிய கடலும் ஓங்கி எழுந்தது
பொன்னுலகம் அழிக்க..!

பூமி பிளந்தது எரிமலை வெடித்தது
பிரளயம் பேரிடராய்
மக்களைக் கொன்று மற்றவை உண்டு
மண்ணானது சுடுகாடாய்..!

உயிர்கள் இல்லை உலகும் இல்லை
பணிந்தாள் சிவனின்தாள்
உறக்கம் விலக்கி அவனை வரித்து
உமையவள் தவமிருந்தாள்..!

மீண்டும் உலகம் மீண்டும் உயிர்கள்
வேண்டியே வரம்பெற்றாள்
சக்தியின் தவநாள் இச்சகந்தன்னில்
சிவராத்திரி யெனுந்திருநாள்..!

இரவை விலக்கி உறக்கம் கலைத்து
இறைவனின் வழிபாடு
சிவராத்திரி நாளில் செய்திடவேகாண்
தவத்தின் வெளிப்பாடு..!

சிவனின் நாமம் சிந்தையில் இருக்க
செயமே நாளுந்தான்
சித்தம் குளிர பணிந்திருப்பேனே
அவனின் தாளுந்தான்..!

#சொ.சாந்தி

எழுதியவர் : சொ.சாந்தி (5-Mar-19, 10:57 am)
சேர்த்தது : C. SHANTHI
பார்வை : 48

மேலே