இசைப்பாடல்

எடுப்பு
*********
காந்தள் விரல்களி னாலே - குழல்
கற்றையைக் காதோரம் தள்ளிடு வாளே !

தொடுப்பு
*************
பூந்துகி லாடிடும் காற்றில் - பாவைப்
பொன்முகம் செக்கச் சிவந்திடும் சூட்டில் ! ( காந்தள் )

முடிப்பு
**********
கிளிகளை விரட்டித் தினைப்புனம் காத்துக்
கிளிஞ்சலாய்ச் சிரித்திடு வாளே !
துளிகளாய் வியர்வை நெற்றியி லரும்ப
துடைத்தவள் களைத்திடு வாளே !
பளிங்கினை யொத்த நீர்ச்சுனை கண்டு
பருகிட தலைகுனி வாளே !
விளித்திடும் காளை மணிக்குரல் கேட்டு
மின்னலாய்ப் பூத்திடு வாளே !! ( காந்தள் )

சிறகுகள் விரித்துப் பறந்திடும் மனத்தை
சிக்கெனப் பிடித்தவள் இழுப்பாள் !
முறத்தினால் புலியை விரட்டியக் குலத்தாள்
முகிலுடன் காதலைப் பகிர்வாள் !
குறமகள் வள்ளிக் கணவனை வேண்டிக்
குணவதி மணவரம் கேட்பாள் !
அறவழி தன்னில் அமைதியா யிருந்தே
அன்பினை வென்றிடு வாளே !! ( காந்தள் )

வீரனே தனக்குத் துணையென வரவே
விழைந்திடும் அன்னவள் நெஞ்சம் !
சேரவே துடித்த தேன்மொழி யாளின்
சிந்தையி லினித்திடும் மஞ்சம் !
தாரணி போற்றும் பிள்ளைகள் பெற்றால்
தாய்மையும் கடவுளை மிஞ்சும் !
வேரென விளங்கி விழுதுகள் பரப்பி
விந்தைகள் புரிந்திடு வாளே ...!!! ( காந்தள் )

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (15-Mar-19, 12:20 pm)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 25

மேலே